7 அடுக்குகளை கொண்ட கோபுர அமைப்புடன் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சிலப்பதிகார கலைக்கூடம் மற்றும் அருங்காட்சியக வளாகம் பூம்புகார் சுற்றுலாத்தலத்தில் பிரதான கவர்ச்சி அம்சமாக பயணிகளை ஈர்க்கிறது.
தமிழின் முக்கியமான பெருங்காப்பியமான சிலப்பதிகாரத்தை கௌரவிக்கும் வண்ணம் தமிழக அரசால் 1973ம் ஆண்டு இந்த அற்புதமான கலைக்கூடம் நந்தவனம் போன்ற வளாகத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது.
காப்பிய நாயகன், நாயகியான கோவலன் மற்றும் கண்ணகி சிலைகள் வளாகத்தின் வாசலிலேயே நம்மை வரவேற்கின்றனர். கலைக்கூட மாளிகையின் கோபுர வடிவமைப்பு 50 அடி உயரம் கொண்டதாக காட்சியளிக்கிறது.
8 அடி உயரம் கொண்ட கலசங்களும் கோபுரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரகாட்சிகள் இந்த கலைக்கூடத்தின் சுவர்களில் புடைப்புச்சிற்பங்களாக பொதிக்கப்பட்டுள்ளன.
இவை மாமல்லபுரம் சிற்பக்கல்லூரி மாணவர்களால் வடிக்கப்பட்டவையாகும். இருபுறமும் கண்ணகி மற்றும் மாதவி சிலைகள் வீற்றிருக்க சிலம்பு வடிவத்தில் அமைக்கப்பட்ட ஒரு தடாகம் ஒன்றும் இந்த வளாகத்தில் உள்ளது.
22 அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மகரத்தோரணவாயில் அமைப்பு வளாகத்தின் வாசல்பகுதியில் கலையம்சத்துடன் காட்சியளிக்கிறது. சிலப்பதிகாரத்தின் பெருமையை பறை சாற்றும் இந்த கலைக்கூடம் நிதானமாக சுற்றிப்பார்த்து ரசிக்கவேண்டிய அம்சம் என்பதில் ஐயமில்லை.



Click it and Unblock the Notifications