தற்போது சர்குஜா மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் அம்பிகாபூர் நகரம் ஆங்கிலேயர் ஆட்சியின்போது குஜராத்தை சேர்ந்த சமஸ்தானத்தின் அங்கமாக இருந்திருக்கிறது.
அம்பிகை அல்லது மகாமயாதேவி என்று அழைக்கப்படும் தெய்வம் மற்றும் கோயிலின் பெயரே இந்நகரத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்பிகா கோயில் ஒரு மலைக்கு அருகே மிக அழகாக நிர்மாணிக்கப்பட்டு காட்சியளிக்கிறது.
அம்பிகாபூர் நகரத்திலிருந்து சுமார் 45கி.மீ தூரத்தில் மைன்பட் மலைவாசஸ்தலமும் உள்ளது. இந்த மலைவாசஸ்தலம் ‘ஷிம்லா ஆஃப் சட்டிஸ்கர்’ எனும் சிறப்புப்பெயரால் அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.
மைன்பட் மலைவாசஸ்தலத்தில் ‘டைகர் பாயிண்ட்’ எனும் நீர்வீழ்ச்சி ஒன்றும் அமைந்திருக்கிறது. இது தவிர, இங்குள்ள புத்தா கோயில் ஒன்று இப்பகுதியில் வசிக்கும் திபெத்திய மக்களுக்கான ஆன்மீகத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.
தரைவிரிப்பு மற்றும் உல்லன் உடைத்தயாரிப்பு போன்ற குடிசைத்தொழில்களில் இந்த திபெத்திய மக்கள் ஈடுபட்டுள்ளனர். தலாய் லாமாவை பின்பற்றும் இந்த திபெத்திய சமூகம் மைன்பட் பகுதியில் தங்கள் வாழ்க்கை முறை மூலம் அமைதியான சூழலை ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்துவருகின்றனர். தேவ்கர் எனும் மற்றொரு யாத்திரை ஸ்தலமும் அம்பிகாபூர் தாலுக்காவில் அமைந்திருக்கிறது.
அம்பிகாபூரை ஒட்டியே 49 கி.மீ தூரத்தில் ஷிவ்பூர் ஷிவ் கோயில் அமைந்திருக்கிறது. இது மஹா சிவராத்திரி மற்றும் பசந்த் பஞ்சமி நாட்களில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது.
மற்றும் ஒரு ஆன்மீக ஸ்தலமான ‘கைலாஷ் குகைகள்’ அம்பிகாபூரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ளது. ராமேஷ்வர் கஹிரா குருஜி எனும் யோகி இந்த குகைகளை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.
சிவன் – பார்வதிக்கான கோயிலும் மற்றும் ஏனைய தெய்வங்களுக்கான சன்னதிகளும் இந்த ஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளன. யாக மண்டபம், சம்ஸ்கிருத பள்ளி, கஹிரா குரு ஆஷ்ரம் போன்ற பிரிவுகள் இந்த கைலாஷ் குகைக்கோயில் வளாகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
‘ராம்கர்’ எனும் மற்றொரு முக்கியமான ஆன்மீகஸ்தலம் அம்பிகாபூர் பகுதியில் உள்ள ஒரு மலையுச்சியில் அமைந்திருக்கிறது. அலாஹாபாத் (காசி) தொடங்கி ராமேஷ்வரம் வரை செல்லும் பாதைக்கு கிழக்கே இந்த கோயில் அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அம்பிகாபூர் பகுதி பாக்சைட் கனிமத்தாது மற்றும் நெல் விளைச்சலுக்கும் பிரசித்தமாக விளங்குகிறது. இதர காட்டு விளைச்சல் பொருட்களும் இப்பகுதியில் கிடைக்கின்றன.
ரயில் மற்றும் சாலை மார்க்கமாக இது மாநிலத்தின் எல்லா பகுதிகளுடனும் நல்ல முறையில் இணைக்கப்பட்டிருக்கிறது. பிலாஸ்பூரிலிருந்து அம்பிகாபூர் வருவதற்கு அடிக்கடி பேருந்துகள் கிடைக்கின்றன.
அம்பிகாபூரில் விமான நிலையம் இல்லை. இருப்பினும் இங்கிருந்து 12 கி.மீ தூரத்தில் தரிமா எனும் இடத்தில் விமான ஓடுதளம் ஒன்று உள்ளது.