பூமியிலேயே இருக்கும் ஒரு சொர்க்கத்தை பார்க்க விரும்பினால் இந்த செலா பாஸ் எனும் மலைப்பாதை பகுதிக்கு நீங்கள் கட்டாயம் ஒருமுறை விஜயம் செய்யுங்கள். அப்படி ஒரு அற்புதமான இயற்கை எழிலோடு இப்பிரதேசம் ஜொலிக்கிறது.
குளிர்காலத்தில் இப்பகுதியிலுள்ள மலைகள் பனியால் மூடப்பட்டு வெள்ளிமலைகள் போன்று ஒளிர்கின்றன. பெரும்பாலும் வருடம் முழுக்கவே இப்பகுதியிலுள்ள மலைகள் பனிமூடி காட்சியளிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியில் காணப்படும் கிழக்கு இமாலய மலைகளை புத்த மதத்தை சேர்ந்தவர்கள் விசேஷமான ஸ்தலமாக கருதுகின்றனர். 101 ஏரிகள் இந்த செலா பாஸ் மலைப்பாதையை சுற்றிலும் அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த ஒவ்வொரு ஏரியும் மத நம்பிக்கைகளின்படி புனிதமானதாக கருதப்படுகிறது. குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவினாலும் இந்த செலா பாஸ் திறந்தே வைக்கப்படுகிறது. நிலச்சரிவு அல்லது கடும்பனி உறைவு நிகழும் சமயங்களில் மட்டும் இப்பாதை தற்காலிகமாக மூடப்படும்.