ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் மாவட்டத்தில் இந்த தோடா ராய் சிங் டவுன் எனும் நகரம் அமைந்துள்ளது. 4ம் நூற்றாண்டில் நாக வம்சத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்நகரம் பின்னர் சாட்சு பகுதியைச்சேர்ந்த யுகிலா வம்சத்தினராலும் அதன் பின் அஜ்மேரைச்சேர்ந்த சௌஹான் வம்சத்தினராலும் ஆளப்பட்டுள்ளது.
15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் சோலங்கி ராஜபுத்திர வம்சத்தின் தலைநகராகவும் இது திகழ்ந்துள்ளது. இப்பகுதியை ஆண்ட ராய் சிங் சிசோடியா எனும் கீர்த்தி பெற்ற மன்னரின் பெயராலேயே இந்நகரம் தற்போதும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இங்கு ஸ்ரீ கிலேஷ்வர் மஹாதேவ் கோயில், நாகர்சிங் மாதா கோயில், ஆம் சாஹர், சந்த் பீபா ஜி கீ குப்ஹா, குஷால் பாக், ஹாதி ராணி கி பாவ்ரி (ஏரி), ராஜா ராய் சிங் மஹால், இஸார் பாவ்ரி மற்றும் போபாத் பாவ்ரி போன்ற ஏராளமான சுற்றுலா அம்சங்கள் பார்ப்பதற்கு உள்ளன. இவை தவிர, கல்யாண்ஜி கோயில், கோபிநாத்ஜி கோயில் மற்றும் கோவிந்த்ஜி கோயில் போன்ற கோயில்களும் முக்கியமானவை.