ராஜஸ்தான் மாநிலத்தின் பனஸ் ஆற்றின் கரையில் இந்த டோங்க் நகரம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் தனி ராஜ்ஜியமாக திகழ்ந்த இந்த ஸ்தலம் பல ராஜ வம்சங்களினால் இந்தியா சுதந்திரம் பெறும் வரை ஆளப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 95 கி.மீ தூரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது.
பார்த்து அதிசயிக்க ஏராள அம்சங்கள்!
டோங்க் நகரமானது கடந்து போன யுகங்களின் கதைகளை சொல்லும் ஏராளமான வரலாற்றுச் சின்னங்களை தன்னுள் கொண்டுள்ளது. நகரத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள் இங்கு நிறைந்துள்ளன.
சுனேரி கொதி அல்லது ‘தங்க மாளிகை’ என்றழைக்கப்படும் ‘மேன்ஷன் ஆஃப் கோல்ட்’ இங்கு பிரதான சுற்றுலா அம்சமாக புகழ்பெற்றுள்ளது. இசை, நடனம் மற்று கவிதை வாசிப்பு நிகழ்ச்சிகளுக்காக - நவாப் முஹம்மது இப்ராஹிம் அலி கான் என்பவரால் கட்டப்பட்டுள்ள இந்த மாளிகையில் பல அற்புதமான கண்ணாடி ஓவிய அலங்காரங்கள் காணப்படுகின்றன.
ஷீஷ் மஹால் என்றும் அழைக்கப்படும் இது நஜார் பாக் சாலையில் படா குவா ஸ்தலத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது. இந்த மாளிகையின் சுவர்கள் தங்கப்பூச்சு செய்யப்பட்டு ஜொலிப்பதுடன் இதன் உட்புறக்கூடத்தில் எனாமல் பூசப்பட்ட கண்ணாடி அலங்கார வேலைப்பாடுகளும் பிரமிக்க வைக்கின்றன.
தங்க மாளிகையைத்தவிர இங்கு ஏராளமான வரலாற்றுச்சின்னங்கள் இந்த நகரத்தின் உன்னதமான வரலாற்றின் அடையாளமாக காட்சியளிக்கின்றன. ரஸியா கே தேக்ரி’ எனும் முக்கியமான சுற்றுலா அம்சம் தனக்கு பின்னால் ஒரு சுவாரசியமான கதையை கொண்டுள்ளது.
உள்ளூர் கதைகளின்படி ஒரு ‘காயஸ்த்’ காதலன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இந்த இடத்தில் காதல் கவிதைகள் பாடி கழித்ததாக சொல்லப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க கண்டா கர் மற்றும் ஜம்மா மஸ்ஜித் போன்ற முக்கியமான சின்னங்களும் இங்கு அமைந்துள்ளன.
டோங்க் நகரத்திலுள்ள ஜம்மா மஸ்ஜித் மசூதி இந்தியாவிலேயே பழமையான மசூதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. முஸ்லிம் ஆன்மீக யாத்ரீகர்கள் அதிக அளவில் இந்த மசூதிக்கு விஜயம் செய்கின்றனர்.
மைசூர் தோட்டப்பூங்கா மற்றும் ஹிரான் மகாரி பூங்கா போன்றவற்றைப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் சிவாஜி தோட்டப்பூங்காவும் இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாகும்.
ஹாத்தி எனுமிடத்தில் ஒரு பாறைக்கல்லில் வடிக்கப்பட்டுள்ள யானைச்சிற்பத்தையும் பயணிகள் பார்த்து மகிழலாம். இந்த இரண்டு இடங்களும் நகரத்திலிருந்து முறையே 30கி.மீ மற்றும் 22கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன.
பயண வசதிகள்
டோங்க் நகரத்தில் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் இல்லை. இருப்பினும் இது நல்ல சாலை வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து 100 கி.மீ தூரத்தில் ஜெய்ப்பூர் விமான நிலையம் அமைந்துள்ளது.
இந்தியாவிலுள்ள எல்லா முக்கிய நகரங்கள் மற்றும் சில வெளிநாட்டு நகரங்களுக்கு இங்கிருந்து விமான சேவைகள் உள்ளன. பனஸ்தாலி-நேவாய் எனும் ரயில் நிலையத்திலிருந்தும் டோங்க் நகரத்திற்கு செல்லலாம்.
இங்கிருந்து பல இந்திய நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன. இவை தவிர அருகிலுள்ள எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் டோங்க் நகரத்துக்கு ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. ராஜஸ்தான் மாநில அரசுப்போக்குவரத்துக்கழகம் மற்றும் தனியார் நிறுவன பேருந்துகள் இவற்றை இயக்குகின்றன.
பருவநிலை
டோங்க் பிரதேசம் மித வறண்ட பருவநிலையை பெற்றுள்ளது. கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் போன்ற மூன்று முக்கியமான பருவங்களே இங்கு நிலவுகின்றன.
அக்டோபர் முதல் பிப்ரவரி வரையான இடைப்பட்ட பருவத்தில் இங்கு பயணம் மேற்கொள்வது சிறந்தது. இக்காலத்தில் இப்பகுதியின் பருவநிலை குளுமை மற்றும் இனிமையான சூழல் நிறைந்து காட்சியளிக்கிறது. குறைந்த வெப்பநிலையும் மிதமான மழைப்பொழிவும் கொண்ட மழைக்காலத்திலும் இந்த வரலாற்று ஸ்தலத்திற்கு சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்யலாம்.