ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரிலிருந்து 220 கி.மீ தூரத்தில் கரவ்ளி எனும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. இது 5530 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது. இங்கு வீற்றுள்ள கல்யாண்ஜி தெய்வத்தின் பெயரால் கல்யாண்புரி என்று முற்காலத்தில் இந்த மாவட்டம் அழைக்கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட கோயில்கள் இங்கு நிரம்பியிருப்பதால் இது ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு முக்கியமான புனிதஸ்தலமாக அறியப்படுகிறது.
புராதன காலத்தில் அடிக்கடி எதிரிகளின் தாக்குதல்கள் நிகழ்ந்து வந்ததால் இந்த ஒட்டுமொத்த மாவட்டமுமே ஒரு கோட்டையைப் போன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சிவப்பு மணற்பாறைகளால் எழுப்பப்பட்டுள்ள இதன் கோட்டைச்சுவர் சில இடங்களில் சிதைந்து போயிருந்தாலும் இன்றும் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. ஆறு நுழைவாயில்களையும் பல இடங்களில் காவல் கொத்தளங்களையும் இந்த கோட்டைச்சுவர் பெற்றுள்ளது.
கரவ்ளி சராசரியாக 902 அடி உயரத்தில் அமைந்துள்ளதுடன் மலைகளாலும் பாறைப்பள்ளத்தாக்குகளாலும் நிரம்பியுள்ளது. இங்குள்ள மிக உயரமான சிகரம் 1400 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
உள்ளூர் கதைகளின்படி இந்த ராஜ்ஜியம் முதலாம் நூற்றாண்டில் இறுதியில் ஸ்ரீ கிருஷ்ணரின் வம்சாவளியான ராஜா பிஜாய் பால் ஜதோன் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இருப்பினும் 1348ம் ஆண்டில் ராஜபுத்திர யதுவன்ஷி ராஜா அர்ஜுன் பால் என்பவரால் இது தோற்றுவிக்கப்பட்டதாக ஆதாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரவ்ளி மாவட்டம் இங்கு காணப்படும் இளசிவப்பு கற்களாலான கட்டிடக்கலை அம்சங்களுக்கு புகழ்பெற்றுள்ளது. சிட்டி பேலஸ், திமான்கர் கோட்டை, காய்லா தேவி கோயில், மதன் மோகன் ஜி கோயில், மஹாவீர் கோயில் மற்றும் எண்ணற்ற வரலாற்று சின்னங்கள் இங்கு காணப்படுகின்றன. சிட்டி பேலஸ் அரண்மனை இப்பகுதியின் உன்னத பாரம்பரியத்தின் சிகரமாக வீற்றுள்ளது.
சந்தைகளும் திருவிழாக்களும்
வட இந்தியா முழுவதுமே பிரசித்தமான சில சந்தைகள் இங்குள்ள கய்லா தேவி கோயிலில் சித்திரா பவுர்ணமி திருநாளில் (மார்ச் – ஏப்ரல்) நடத்தப்படுகிறது. மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், டெல்லி மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களிலிருந்து பயணிகள் இந்த திருவிழாச்சந்தைக்கு விஜயம் செய்கின்றனர்.
கரவ்ளி பகுதியின் மக்கள் பெரும்பாலும் கைவினைப்பொருட்கள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். இங்கு வருகை தரும் பயணிகள் விருப்பமுடன் வாங்கி செல்லும் நினைவுப்பொருட்கள் இவர்களால் பெரும் அளவில் தயாரிக்கப்படுகின்றன.
பயண வசதிகள்
ஜெய்ப்பூரிலுள்ள சங்கனேர் விமான நிலையம் மற்றும் கங்காபூர் ரயில் நிலையம் ஆகியவை கரவ்ளி நகருக்கான விமானம் மற்றும் ரயில் நிலையங்களாக திகழ்கின்றன. சாலை வசதிகளாலும் இப்பகுதி நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட பருவம் கரவ்ளி மாவட்டத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.