இந்தியாவில் உள்ள தனித்தன்மையான பாரம்பரிய பூமிகளில் ஒன்றுதான் இந்த ஒடிசா மாநிலம். ஆழமான வரலாற்று செழிப்பு மற்றும் புராதன நாகரிகத்தின் வேர்களை இந்த பூமி வாய்க்கப்பெற்றிருக்கிறது. இது கலிங்க நாடு என்ற பெயரில் ஒரு மஹோன்னத ராஜ்ஜியமாக புராதன காலத்தில் திகழ்ந்திருக்கிறது. பின்னர் சுதந்திர இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக ஒரிசா என்ற பெயரில் விளங்கிய இந்த மாநிலம் தற்போது ஒடிசா என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் இருதயம் என்றும் பெருமையுடன் இந்த பூமி அறியப்படுகிறது. இந்த மாநிலத்தின் அந்த பத்து இடங்களுக்கும் சென்று வருவோம் வாருங்கள்.
இந்தியாவின் கோவில் நகரம்
ஒடிஷா மாநிலத்தின் தலைநகரமான புபனேஷ்வர் இந்தியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் முக்கியமான சுற்றுலா நகரம் எனும் அடையாளத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறது. மஹாநதியின் தென்மேற்கு கரையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது. வரலாற்று காலத்தில் கலிங்க தேசம் என்று அழைக்கப்பட்ட இந்த பிரதேசம் வெகு உன்னதமான கட்டிடக்கலை பாரம்பரியத்துக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இந்த புராதன நகரம் 3000 வருடங்கள் பழமையான தொன்மையை கொண்டுள்ளது. இந்த புபனேஷ்வர் நகர்ப்பகுதியில் 2000 கோயில்கள் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த புராதன நகரத்துக்கு ‘இந்தியாவின் கோயில் நகரம்' எனும் சிறப்புப்பெயரும் வழங்கப்பட்டிருக்கிறது.
புவனேஸ்வர் சுற்றுலா அம்சங்கள்
பழமையான கோயில்களான லிங்கராஜ் கோயில், முக்தேஷ்வர் கோயில், ராஜாராணி கோயில், இஸ்க்கான் கோயில், ராம் மந்திர், ஷிர்டி சாய் பாபா மந்திர், ஹிராபூர் யோகினி கோயில் போன்றவை ஒடிஷா கோயிற்கலை பாரம்பரியத்தின் சான்றுகளாக வீற்றிருக்கின்றன. அது மட்டுமல்லாமல்லாமல் புபனேஷ்வர் நகரின் எழிலைக்கூட்டும் வகையில் பிந்து சாகர் ஏரி, உதயகிரி மறும் கண்டகிரி குகைகள், தௌலிகிரி, சந்தகா காட்டுயிர் சரணாலயம், அத்ரி வெந்நீர் ஊற்று ஸ்தலம் போன்ற எராளமான இயற்கை அம்சங்கள் நிறைந்துள்ளன.
ஜகன்னாத்தின் கோட்டை
கிழக்குப்புற இந்திய மாநிலமான ஒரிஸ்ஸாவில் உள்ள நகரமான பூரி, வங்காள விரிகுடாவில் பெருமை பொங்க வீற்றிருக்கிறது. ஒரிஸ்ஸாவின் தலைநகரமான புவனேஷ்வரிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள பூரி, அதன் பெருமைக்கு காரணமாக விளங்கும் இங்குள்ள பூரி ஜகன்னாதர் கோயிலின் பெயரைக் கொண்டு ஜகன்னாத் பூரி என்றும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் வாழும் இந்துக்கள் மேற்கொள்ளக்கூடிய புனித யாத்திரையானது, பூரிக்கு ஒரு முறையேனும் சென்று வராமல் நிறைவடைவதில்லை என்று மக்கள் கருதுகின்றனர். துர்கா, லக்ஷ்மி, பார்வதி, சதி மற்றும் ஷக்தி ஆகியோருடன் ராதாவும் கிருஷ்ணனோடு உறைந்திருக்கும் ஒரே இந்தியக் கோயில் என்ற பெருமையையும் கொண்டது ஜகன்னாதர் கோயில்.
பூரி சுற்றுலா அம்சங்கள்
உலகப்புகழ் பெற்றுள்ள ஜகன்னாதர் கோயில் தவிர்த்து, சக்ர தீர்த்தா கோயில், மௌஸிமா கோயில், சுனாரா கௌரங் கோயில், ஸ்ரீ லோக்நாத் கோயில், ஸ்ரீ கண்டிச்சா கோயில், அலர்நாத் கோயில் மற்றும் பலிஹார் சண்டி கோயில் ஆகியவையும் இந்துகளின் முக்கிய வழிபாட்டு ஸ்தலங்களாக விளங்குகின்றன. கோவர்த்தன் மடம் போன்ற மடாலயங்கள் ஆன்மாவிற்கு பெரும் ஆறுதலை வழங்கக்கூடிய தெய்வீகத்தனமையுடன் திகழ்கின்றன. இங்குள்ள பேடி ஹனுமான் கோயில், உள்ளூர் தலப்புராணங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறது. பூரி கடற்கரை மற்றுமொரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். இங்கு நடைபெறும் வருடாந்தர பூரி கடற்கரை திருவிழா, பூரியின் சுற்றுலாத் துறைக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது
மஹோன்னதகோயிற்கலை
ஒடிஷா மாநிலத்துக்கே உரிய மஹோன்னதகோயிற்கலை அம்சங்களின் காட்சிக்கூடமாக இந்த கொனார்க் நகரம் ஜொலிக்கிறது. இந்திய மண்ணின் முன்னோடிகள் தங்கள் நாகரிகம், அறிவு, தீர்க்கம், கலைத்திறன் போன்றவற்றை காலத்தில் நீடித்து நிற்கும்படியாக கல்லில் வடிக்கப்பட்ட கவிதைகளாக இந்நகரத்தில் விட்டு சென்றிருக்கின்றனர். மொத்தத்தில், இங்குள்ள கோயில்கள் யாவுமே ஒரு அதிஉன்னத மனித நாகரிகம் விட்டுச்சென்ற ஆவணங்களாக ஜொலிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஆன்மிக ஆர்வலர்கள் விரும்பி விஜயம் செய்யும் ஒரு முக்கியமான யாத்திரை ஸ்தலமாகவும் இந்த கொனார்க் நகரம் பிரசித்தி பெற்றுள்ளது.
கொனார்க் சுற்றுலா அம்சங்கள்
சூரியக்கோயில் வளாகத்தில் மாயாதேவி கோயில் மற்றும் வைஷ்ணவா கோயில் போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவரும் அம்சங்களாக அமைந்திருக்கின்றன. இவை தவிர ராமசண்டி கோயில் எனும் கோயிலும் இங்கு முக்கியமான கோயிலாக காட்சியளிக்கிறது. குருமா எனும் புராதனமான புத்தமடாலயம் அமைந்திருந்த தொல்லியல் ஸ்தலத்தில் காணப்படும் எச்சங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்ட புத்தர் சிலையும் பயணிகள் ரசிக்க வேண்டிய மற்றொரு சுவாரசிய அம்சமாகும். காகடபூர் மங்களா கோயில் எனும் முக்கியமான கோயில் ஒன்று பிராச்சி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஜாமு யாத்ரா எனும் பிரசித்தமான திருவிழா ஒன்று கொண்டாடப்படுகிறது. சௌராஸி எனும் இடத்தில் அமைந்துள்ள பராஹி கோயில் அங்குள்ள வித்தியாசமான தேவி சிலைக்கு புகழ் பெற்றுள்ளது. அஸ்தரங்கா எனும் இடம் சூரிய அஸ்தமனத்தின்போது தொடுவானில் காணக்கிடைக்கும் அற்புதக்காட்சிக்காக பிரசித்தி பெற்றுள்ளது.
கலாச்சாரத் தலைநகர்
ஒடிசாவின் தற்போதைய தலைநகரான புவனேஷ்வரில் இருந்து 28 கிமீ தொலைவில் உள்ள கட்டாக், ஒடிசாவின் பழைய தலைநகராகும். அபினாப கடக என இடைக்காலத்தில் வழங்கப்பட்ட பழமையான இந்நகரம் ஒடிசாவின் கலாச்சார மற்றும் வியாபார தலைநகராக கருதப்படுகிறது. மகாநதி மற்றும் கத்ஜோரி நதிகளின் கரைகளில் அமைந்துள்ளபடியால் அழகுமிக்கதாக தோன்றும் இந்த சமவெளி நகரம் சுற்றுலாவிற்கு ஏற்றவாறு திகழ்கிறது. பழங்கால வரலாற்றை இங்கிருக்கும் நினைவுச்சின்னங்கள் மூலம் தெரிந்துகொள்ளமுடிந்த அதே சமயத்தில் நவீன வாழ்க்கை முறையையும் இங்கு அறிந்து கொள்ளலாம்
கட்டாக் சுற்றுலா அம்சங்கள்
ஆன்மீகத் தலங்கள், மலைகள், கோட்டைகள், நினைவுச்சின்னங்கள் என ஏகப்பட்ட சுற்றுளா தளங்கள் இங்கு உள்ளன. அன்சுபா நன்னீர் ஏரி, தபாலேஷ்வர் கோவில், ரத்னகிரி, லலித்கிரி மற்றும் உதயநிதி மலைகள் போன்ற ரம்மியமான இடங்கள் இங்கு நிறைய உண்டு. பங்கியில் உள்ள சர்சிகா கோவிலுக்கு நிறைய யாத்ரீகர்கள் வருகை தருகிறார்கள். மா பட்டாரிக்கா என்ற கோவில், செளதார் என்னும் சிவன் கோவில், புத்தமதத்தைப் பற்றி அறிவிக்கும் நராஜ், சந்தி தேவி கோவில் என இங்கு ஏராளம் உண்டு.
மயுர்பஞ்ச்
கண் கொள்ள சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளதால் மயுர்பஞ்ச் நகரம் ஓடிசாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கு நடக்கும் திருவிழாக்கள் மிகுந்த ஈடுபாட்டுடன், எழுச்சியுடன் பய பக்தியோடு கொண்டாடப்படுவதால் சுற்று வட்டாரத்தில் இருந்தும், வெகு தூரத்தில் இருந்தும் கூட்டம் கூட்டமாக பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கிறார்கள். இங்கு நடக்கும் சைத்ர பர்வா திருவிழா நாட்டிலிருக்கும் திறமை மிக்கவர்களை ஈர்க்கும். அவர்கள் திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரம் பல பேரை இதில் கலந்து கொள்ள தூண்டும்.
மயுர்பஞ்ச் சுற்றுலா அம்சங்கள்
அனைத்து சுற்றுலாப் பயணிகளின் ரசனைக்கேற்ப பல சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது மயுர்பஞ்ச் சுற்றுலா. மயுர்பஞ்சின் தலைநகரமான பரிபடா மற்றும் சிமிலிபல் தேசிய பூங்கா தான் இங்குள்ள இரண்டு பிரதான சுற்றுலாத் தலங்களாகும். மிகச்சிறந்த இயற்கை அழகை கொண்ட டியோகுண்ட் என்ற இடம் சுற்றுலாப் பயணிகளை தன் அழகில் கட்டிப் போட்டு விடும். கிச்சிங் என்ற இடத்தில் உள்ள பழமையான கோவில்கள் சுற்றுலாப் பயணிகளை தொலைந்த உலகத்திற்கு அழைத்துச் செல்லும்
ஜேப்பூர்
ஒடிஷாவின் மிக முக்கியமான பழங்குடி இனத்தவர் இப்பகுதியில் வசிக்கின்றனர் என்பது மற்றொரு சிறப்பம்சமாகும். கிழக்குத்தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டிருக்கும் இந்நகரத்தின் மூன்று திசைகளிலும் அரக்கு மலை எனும் மலை U வடிவத்தில் சூழ்ந்திருக்கிறது. எனவே இயற்கை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ரம்மியமான சூழலை இந்நகரம் கொண்டுள்ளது.
ஜேப்பூர் சுற்றுலா அம்சங்கள்
ஷக்தி, பகரா மற்றும் துதுமா என்று அழைக்கபப்டும் கம்பீரமான மூன்று நீர்வீழ்ச்சிகள் இங்கு பயணிகளை கவர்ந்து இழுக்கின்றன. தேவ்மாலி எனும் மலைப்பள்ளத்தாக்கு மற்றும் சுனபேதா எனும் காட்டுயிர் சரகம், கோலாப் எனும் வசீகரமான ஆறு, கோராபுத் நகரம் போன்றவை இங்குள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். இவை தவிர மாலிகுரா எனும் இடத்திலுள்ள அகல ரயில் சுரங்கப்பாதை, நந்தபூர் எனும் இடத்தில் உள்ள பத்ரிஸா சிம்மாசனா, ஜெய்பூர் பூங்கா மற்றும் மின்னா ஜோலா எனும் சிறு நகரம் ஆகியவை ஜெய்பூர் சுற்றுலாவின் முக்கிய சுவாரசியங்களாக அமைந்துள்ளன.
கியோஞ்சர்
ஒடிசாவின் வடக்குப் பகுதியில் உள்ள நகராட்சியான கியோஞ்சர், அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாகும். வடக்கே ஜார்கண்டும், தெற்கே ஜெய்பூர், மேற்கே தென்கனல் மற்றும் கிழக்கில் மயூர்பஞ்ச் நகரமும், எல்லைகளாக அமைந்துள்ளன. இங்கு அமைந்திருக்கும் கியோஞ்சர் பீடபூமியில் பைதராணி நதி உருவாகிறது. மங்கனீசு தாது உற்பத்தியில் சிறந்த விளங்கும் இங்கு வருடம் முழுதும் பயணிகள் குவிகிறார்கள்.
கியோஞ்சர் சுற்றுலா
கந்தஹார் நீர்வீழ்ச்சி, சங்ககரா நீர்வீழ்ச்சி, படா காகரா நீர்வீழ்ச்சி என இங்கே சுற்றுலாப்பயணிகளுக்கு பல வகையான தளங்கள் காத்திருக்கின்றன. கடகோனில் உள்ள கோவில், கோனாசிக, கண்டிஜகாய், பீம்குண்ட், முர்க்மஹாதேவ் கோவில் மற்றும் மாவட்ட அருங்காட்சியகத்திற்கு ஏராளமான பயணிகள் வருகை தருகிறார்கள். சக்ரதீர்த்தா என்ற பழமையான சிவன் கோவில் ஒன்றும் இங்கு உள்ளது.
குடும்பமாக செல்லவேண்டிய பாரதீப்
பாரதீப் துறைமுகம் இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியிலுள்ள துறைமுக நகரங்களில் மிக முக்கியமானது. இது ஒடிசா மாநிலத்தில் உள்ள பழமையான துறைமுகங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. பாரதீப் நகரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இங்கு எஃகு ஆலைகள், அலுமினா சுத்திகரிப்பு ஆலைகள், பெட்ரோகெமிக்கல் வளாகம், அனல் மின் நிலையங்கள் ஆகிய அனைத்தும் இந்த இடத்தில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பாரதீப் சுற்றுலா அம்சங்கள்
இந்த இடம் ஒரு குடும்பச் சுற்றுலாவிற்கு மிகவும் உகந்த இடமாகும். இங்கு எவ்வளவு நேரம் வேண்டுமானலும் நீந்தி மகிழலாம் அல்லது பளபளக்கும் கடற்கரை நீரில் கால் நனைத்து விளையாடலாம். பார்வையாளர்கள் மேலும் சுத்தமான மற்றும் பசுமையான ஸ்ம்ருதி உதயன் பூங்காவில் தங்களுடைய நேரத்தை கழிக்கலாம். இந்த பூங்காவானது , 1990 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட புயலில் உயிரிழந்த பாரதீப் மக்களின் நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள இசை நீரூற்று ஒரு குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாகும். காஹிர்மாதா கடற்கரை அரிய வகை வெள்ளை முதலைகளின் இருப்பிடமாக விளங்குகின்றது.
ஆசியாவின் முதல் கண்காணிப்பு காமிரா
இயற்கை எழிலும், மலைகளும், நதிகளும் சூழ்ந்த கம்பீரமாக நகரமாக ரூர்கேலா திகழ்கிறது. சுந்தர்கார்ஹ் என்ற பழங்குடி மையத்தில் ஒரு பகுதியாக திகழும் இந்நகர் புவனேஷ்வரில் இருந்து 325கிமீ தொலைவில் உள்ளது. ஒடிசாவின் வியாபாரத் தலைநகர் என அறியப்படும் ரூர்கேலா இயற்கை எழில் சூழ்ந்த தொழிற்சாலை நகரமாக திகழ்வது வியப்பு. இயற்கை மற்றும் செயற்கையான சுற்றுலா தளங்களுக்காக பெயர்போன இங்குதான் ஆசியாவிலேயே முதன்முதலில் 1984ல் கண்காணிப்பு காமிரா செயல்பாட்டிற்கு வந்தது.
ரூர்கேலா சுற்றுலா அம்சங்கள்
மலைகள், நதிகள், ஏரிகள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் என பலவகையான சுற்றுலா தளங்கள் இங்கு உள்ளன. ஹனுமான் வாடிகா என்னும் பிரம்மாண்ட சிலை ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். வேதவியாஸ், மந்திரா அணை, பிதமஹால் அணை ஆகிய இடங்களில் இயற்கை சார்ந்த அழகினை ரசிக்க முடியும். மேலும் கோகார் கோவில், மா வைஷ்ணோ கோவில், லக்சுமி நாராயண் கோவில், ஜகன்நாத் கோவில், அஹிராபந்த் கோவில், ராணி சதி கோவில் போன்ற கோவில்களும் இங்கு ஏராளம் உண்டு. கண்டஹார் நீர்வீழ்ச்சி, பிஜூ பட்நாயக் ஹாக்கி மைதானம் என பல இடங்களும் உண்டு.
சம்பல்பூர்
வரலாறும், புதுமையும் சங்கமாகும் இடம் சம்பல்பூர்! இன்று சம்பல்பூர் என்று அழைக்கப்படும் இடம் பல்வேறு ஆட்சியாளர்கள் மற்றும் அரசாங்கங்களால் பல முறை பிரிக்கப்பட்டதாகவும் மற்றும் இணைக்கப்பட்டதாகவும் உள்ளது. இங்கு ஆட்சி செய்து வந்த பல்வேறு அரசுகளின் கலாச்சார சின்னங்களை இங்கொன்றும், அங்கொன்றுமாக குவித்து வைத்து பல்வேறு வரலாற்று அனுபவங்களை காட்டும் இடமாக சம்பல்பூர் உள்ளது.
சம்பல்பூர் சுற்றுலா அம்சங்கள்
சம்பல்பூர் சுற்றுலா பல்வேறு காரணங்களுக்காக சிறப்பாக நடந்து வருகிறது. ஹிராகுட் அணை, சமலேஸ்வரி கோவில், ஹீயுமாவின் சாயும் கோவில், சிபிலிமா நீர்; மின் சக்தி திட்டம், காந்தேஸ்வரி கோவில் மற்றும், மிகவும் முக்கியமாக மகாநதியும் சம்பல்பூர் சுற்றுலாவில் பெரும் பங்கு வகிக்கிறது. டெபிகார் வனவிலங்குகள் சரணாலயம் இங்குள்ள முதன்மையான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். வறண்ட இலையுதிர் காடுகளை கொண்டிருக்கும் இந்த சரணாயலம் பல்வேறு வகையான தாவர மற்றும் விலங்கினங்களை கொண்டுள்ளது. கேட்டில் தீவு, உஷாகோதி, காந்தாரா, ஹடிபாரி மற்றும் விக்ரம்கோல் ஆகியவை சம்பல்பூரில் உள்ள பிற சுற்றுலா தலங்களாகும்.