சிவன் கோயில்கள் நம் பிறப்பின் பொருள் அறிந்துகொள்ள கட்டப்பட்டவையாகும். கடவுள் நம்பிக்கை அற்ற சிலரும் சிவ வழிபாட்டை ஆதரிப்பதுண்டு. அதற்கு காரணம் சிவன் என்பவர் அடிப்படையில் ஆதி மூலம். அதாவது நம் எல்லாரையும் மீறிய சக்தி ஒன்று உண்டெனில் அதுவே சிவன் என்கிறார்கள் ஆத்திகவாதிகள். நாத்திகர்கள் அதை அன்பு என்கிறார்கள். உலகில் ஒருவனை நேசிக்கும் மனம் இன்னொருவனை வெறுக்கிறது. ஆனால் அனைத்தையும் நேசிக்கவேண்டும் என்பதே சிவ வழிபாட்டின் தத்துவமாகும். இதன் பொருள் அறிந்து இந்த கோயில்களுக்கு ஒரு முறை சென்று வந்தாலே உங்கள் வாழ்க்கை சொர்க்கமாகும்.

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்
கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து 2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். இத்திருக்கோயிலின் கர்ப்பகிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதேபோல பெரிய கோயில் விமான நிழல் கீழே விழாது என்ற நம்பிக்கை இருப்பது போல், திருவதிகை கோயிலின் நிழலும் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இதை கட்டியதாக சொல்லப்படுகிறது.
படம் : Logic riches

நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி
திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. இரண்டு கோயில்களும், 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கோபுரங்களும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும்.
படம்

தியாகராஜர் கோயில், திருவொற்றியூர்
சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும் அதற்கு பிறகு 11-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் பெரிதாக புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் விக்கிரகமும், திருவாரூர் தியாகராஜசுவாமி திருகோயிலில் உள்ள சிவன் சிலையும் ஓரே மாதிரியான தோற்றத்தை கொண்டவை.
படம் : Mohan Krishnan

ஸ்ரீ மாயூரநாதசுவாமி கோவில், மயிலாடுதுறை
மயிலாடுதுறையின் மிகபெரிய கோயிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது. இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி எண்ணற்றவர்களை இக்கோவிலை நோக்கி ஈர்த்துவிடும். இந்த திருவிழாவை, சிதம்பரம் நாட்டியாஞ்சலி திருவிழா நடக்கும் வேளைகளில் மகா சிவராத்திரியையொட்டி சப்தஸ்வரங்கள் டிரஸ்ட் என்ற அமைப்பு நடத்தி வருகிறது.
படம் : Krishna Kumar Subramanian

மருந்தீஸ்வரர் கோயில், சென்னை
சோழ நாட்டை பல்லவம் ஆந்திரம் போன்ற ராஜ்ஜியங்களுடன் இணைத்த வடப்பெருவழி எனும் முக்கிய சாலையில் இந்த கோயில் இருந்ததை வரலாற்றுச்சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த பாதைதான் இன்றைய ஈ.சி.ஆர் எனும் கிழக்குக்கடற்கரைச்சாலையாக உருமாறியுள்ளது. பரபரப்பான சென்னையின் நடுவே திருவான்மியூரில் அமைதி தவழும் ஆன்மீகச்சுழலை கொண்டுள்ள மருந்தீஸ்வரர் கோயில் சென்னைக்கு வரும் பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய புராதன ஆன்மீகத்தலமாகும்.
படம் : Mohan Krishnan



Click it and Unblock the Notifications




