ஜைன மதத்தின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபாவின் இரு மகன்களில் ஒருவர் பாஹுபலி. பாஹுபலியும் அவருடைய அண்ணன் பரதனும் ஆட்சிக்காக போர் செய்தனர் என்று சொல்லப்படுகிறது.
இந்தப் போரில் பாஹுபலி வென்றாலும், போரின் கொடுமைகளை பார்த்து மனம் கசிந்து தன் அண்ணன் பரதனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு துறவு கோலம் பூண்டுவிட்டார்.
பின்பு, பாஹுபலி தான் செய்த பாவத்துக்கு பரிகாரமாக முக்தி அடையும் காலம் வரை நிர்வாணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாகவே அவருடைய திகம்பர நிலையில் (நிர்வாண நிலையில்) உள்ள உயரமான சிலைகள் ஜைன மதத்தில் வழிபடத் துவங்கப்பட்டன.
அதோடு திகம்பர நிலையை அடைந்த பின் கோமதேஷ்வரா என்று அறியப்பட்ட பாஹுபலியின் சிலை ஜைனர்களால் தியாகச் சின்னமாகவும், தன்னலமற்றதின் சின்னமாகவும் போற்றப்படுகிறது.
படித்துப் பாருங்கள் : இந்தியாவின் மிக உயரமான சிலைகள்!

கோமதேஸ்வரர் சிலை, சிரவணபெலகோலா
கர்நாடக மாநிலம் சிரவணபெலகோலாவில் அமைந்துள்ள பாஹுபலி சிலைதான் உயரமான மற்றும் முதலில் எழுப்பப்பட்ட பாஹுபலி சிலையாகும். 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பாஹுபலி சிலை 58 அடி உயரம் கொண்டது. இந்தச் சிலை இருக்கும் பகுதியில் கன்னடம் மற்றும் தமிழில் வடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்குறிப்புகளை பயணிகள் காணலாம்

பாஹுபலி சிலை, கர்கலா
கர்கலாவில் உள்ள பாஹுபலி சிலை 1432-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 42 அடி உயரம் கொண்ட இந்தச் சிலையை பாஹுபலியின் நினைவாக பாண்டிய மன்னன் வீரபாண்டிய பைரவன் என்பவன் கட்டினான். கர்கலாவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா மஸ்தகாபிஷேகா விழாவுக்கு உலகம் முழுவதிமிருந்து ஜைனத் துறவிகளும், பக்தர்களும் கூட்டம் கூட்டமாக வருவர். அப்போது பாஹுபலி சிலைக்கு நீராலும், பாலாலும் அபிஷேகம் செய்யப்படும்.

பாஹுபலி சிலை, தர்மஸ்தாலா
கர்நாடக மாநிலம் தர்மஸ்தாலாவில் உள்ள ரத்னகிரி குன்றின் உச்சியில் அமைந்திருக்கும் பாஹுபலி சிலை 39 அடி உயரமும், 175 டன் எடையும் கொண்டது. ஒரே கல்லால் ஆன இதை 1973-ஆம் ஆண்டு ரஞ்சனா கோபால கிருஷ்ண ஷெனாய் என்பவர் வடிவமைத்தார். பின்பு 1982-ல் இந்த சிலையை வீரேந்திர ஹெக்டே என்பவர் தர்மஸ்தாலா கோயிலில் பிரதிஷ்டை செய்தார்.

கோமதேஸ்வரர் சிலை, வேணூர்
மங்களூரிலிருந்து 51 கி.மீ தொலைவில் உள்ள வேணூர், கோமதேஸ்வரர் சிலைக்காகவே பிரபலமாக அறியப்படுகிறது. 35 அடி உயரத்தில் காணப்படும் இந்தச் சிலை திம்மண்ண அஜிலா மன்னரால் 1604ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த வேணூர் பாஹுபலி சிலையின் சிறப்பம்சம், இது பிடிமான கட்டமைப்பு எதுவுமே இல்லாமல் ஒரு உயரமான மேடைமீது அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது என்பதாகும்.

கோமதேஸ்வரர் சிலை, கொம்மட்டகிரி
மைசூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கொம்மட்டகிரி என்ற ஜைன ஸ்தலத்தில் 'ஷ்ரவண குட்டா' என்ற 50 அடி குன்றின் மீது இந்த கோமதேஸ்வரர் சிலை அமைந்துள்ளது. இந்தச் சிலை 700 ஆண்டுகளுக்கு முன்னாள் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டதாகும். 20 அடி உயரம் கொண்ட இந்தச் சிலை சுருட்டை முடியுடன் காட்சியளிப்பது இதை மற்ற பாஹுபலி சிலைகளிலிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது.



Click it and Unblock the Notifications



