இந்தியாவில் மொத்தம் 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. அவை அந்தமான் நிக்கோபார் தீவுகள், தமன் & தியூ, சண்டிகர், பாண்டிச்சேரி, டெல்லி, லக்ஷ்வதீப் மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி.
இந்த 7 யூனியன் பிரதேசங்களிலும் கடற்கரைகள், கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள் என்று ஏராளமான சுற்றுலாத் தலங்கள் அமைந்திருக்கின்றன.
எனினும் சில சுற்றுலாச் சிறப்பு வாய்ந்த இடங்கள் அதிகம் பயணிகள் பார்வை படாமல் அறியப்படாத இடங்களாகவே இருக்கின்றன.
அந்த வகையில் இந்த 7 யூனியன் பிரதேசங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு சுற்றுலாத் தலங்களாக மொத்தம் 7 இடங்களை பற்றி பார்ப்போம்.

அந்தமானின் பவழப்பாறைகள்
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பவழப்பாறைகளை ரசிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் போவதுகூட தெரியாது. அதிலும் குறிப்பாக ஜாலி பாய் தீவில் சிறிய படகுகளில் பயணம் செய்து இந்தப் பவழப்பாறைகள் கண்டு ரசிக்க முடியும். இந்த சிறு படகுகளின் அடிப்பாகம் ஃபைபர் கண்ணாடியால் ஆனவை என்பதால் நீருக்கு அடியில் காணப்படும் பவளப்பாறை வளர்ச்சிகளை பயணிகள் தெளிவாக பார்க்கலாம்.
படம் : Ritiks

சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில், டெல்லி
இந்திய மண்ணின் பாரம்பரிய கோயிற்கலை மரபையும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் இந்த மஹோன்னத கோயில் வளாகத்தை உருவாக்குவதற்கு 5 வருடங்கள் பிடித்துள்ளன. முழுக்க முழுக்க நம் முன்னோர்களின் படைப்பைப்போன்றே உருவாக்க வேண்டும் எனும் நோக்கத்தில் நமது சம கால கலைஞர்கள் ஜெயித்தார்களா என்பது பற்றி நீங்கள் நேரில் இந்த கோயிலைப்பார்த்தபின் ஒரு முடிவுக்கு வரலாம்.

சண்டிகரின் ராக் கார்டன்
40 வருடங்களுக்கு முன்னால் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கலைப்பூங்காவில் நகர்ப்புற மற்றும் தொழிற்சாலை கழிவுப்பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல கலைப்படைப்புகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது உடைந்த வளையல் துண்டுகள், பீங்கான் சில்லுகள், மின் கம்பிகள், பழைய வாகன உதிரிப்பாகங்கள், பழை மின்விளக்குகள் மற்றும் சாதாரணப்பொருட்களான கட்டிடக்கழிவுகள், முள் கரண்டிகள், களிமண் குண்டுகள் மற்றும் மண் பானைகள் போன்றவற்றையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் பல்வேறு நிர்மாணச்சிற்ப அமைப்புகளை இந்த பூங்காவில் பார்த்து ரசிக்கலாம்.
படம் : Vinay8861

வசோனா லயன் சஃபாரி, தாத்ரா & நகர் ஹவேலி
தாத்ரா & நகர் ஹவேலியின் தலைநகரான சில்வாசாவிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் வசோனா லயன் சஃபாரி காட்டுயிர் பூங்கா அமைந்துள்ளது. 'ஆசியச்சிங்கம்' எனப்படும் சிங்க இனத்திற்கான விசேஷ சரணாலயமாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு சஃபாரி வாகனங்கள் செல்வதற்காக 3 கி.மீ நீளமுள்ள ஒரு சாலையும் போடப்பட்டிருக்கிறது. எனவே இயற்கையான சூழலில் சுதந்திரமாக உலா வரும் ஆசிய சிங்கங்களை ஜீப் வாகனங்களில் பாதுகாப்பாக பயணித்தபடி சுற்றுலாப்பயணிகள் வெகு அருகில் கண்டு ரசிக்கலாம்.

தமன் & தியூவின் அழகிய கடற்கரைகள்
தமன் & தியூ பிரதேசங்கள் அவற்றின் எழில் கொஞ்சும் கடற்கரைகளுக்காக மிகவும் பிரபலம். இந்த யூனியன் பிரதேசம் பல காலம் கோவா, தாத்ரா & நகர் ஹவேலி போன்றவற்றுடன் அரபிக்கடலோரம் போர்த்துகீசியரக்ளின் பகுதியாக இருந்து வந்தது. அதோடு கோவாவை போலவே தமன் & தியூவிலும் அட்டகாசமான பல கடற்கரைகள உள்ளன.

அரிக்கமேடு, பாண்டிச்சேரி
அரிக்கமேடு பகுதியில் மார்ட்டிமோர் வீலர் என்பவர் 1940-களில் தொல்பொருள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இதன் காரணமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அரிக்கமேடு பகுதி கருதப்படுகிறது. அதோடு வீலரின் கூற்றுப்படி சோழர் காலத்தில் மீனவ கிராமமாகவும், துறைமுக நகரமாகவும் இருந்த அரிக்கமேடு பகுதியில் சோழப் பேரரசிற்கும், ரோமானிய பேரரசிற்கும் இடையே வணிகப் போக்குவரத்து நடந்துள்ளது. மேலும் ரோமானிய பேரரசின் கலைநயத்தை விளக்கும் மட்பாண்டங்கள் பெருமளவில் அரிக்கமேட்டில் கிடைத்து வருகின்றன. எனவே நீங்கள் பாண்டிச்சேரி வரும்போது அரிக்கமேட்டை தவறவிட்டுவிடாதீர்கள்.

கட்மத் தீவு, லக்ஷ்வதீப்
லக்ஷ்வதீப்பின் அமிந்திவி தீவுக்கூட்டத்தை சேர்ந்த கட்மத் தீவு , ஏலக்காய் தீவு என்ற பெயரில் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த தீவில் கடல் ஆழம் குறைவாக காணப்படுவதுடன் ஏராளமான பவளப்பாறைகளும் அமைந்திருக்கின்றன. இங்கு ஸ்கூபா டைவிங்கில் ஈடுபட நபர் ஒருவருக்கு 2500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் கடல் நீச்சல், ஸ்நார்க்கெலிங் போன்ற நீர் விளையாட்டுகளிலும் நீங்கள் ஈடுபட்டு மகிழலாம். அதுமட்டுமல்லாமல் இங்கு வரும் பயணிகள் மண் கோட்டை கட்டுவதிலும், மீன் பிடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications







