5319 மீட்டர் உயரத்தில் உள்ள அற்புதங்கள் நிறைந்தப் பின் பார்வதிக் கணவாயினை உங்கள் கண்களால் கண்டதுண்டா! ஓஹோ இல்லையா! வாங்க, கீழ்க்காணும் பத்தியினை நாம் படிப்பதன் மூலமாக இந்த அழகியப் பயணத்தின் சிறப்பினையும் அவற்றின் கடினங்களையும் தெரிந்துக் கொண்டு நாம் ஒருப் பெரு மூச்செறிந்துச் செல்லலாம்.
சார் லூயிஸ் டேன் என்பவரால் 1884 ஆம் ஆண்டுக் கண்டுப்பிடிக்கப்பட்ட ஒருப் பாதை தான் இந்தப் பின் பார்வதி கணவாயாகும். ஆம், இவர் பிரசித்திப்பெற்ற ஸ்பித்திப் பள்ளத்தாக்கினை அடைய மாற்று வழிகளை யோசிக்க, அப்பொழுது தான் இந்தப் பின் பார்வதி கணவாயினைக் கண்டுபிடித்தார். இந்த வழி பார்வதிப் பள்ளத்தாக்கினையும் ஸ்பித்திப் பள்ளத்தாக்கினையும் இணைத்தே காணப்படுகிறது.
இந்தப் பாதையின் உயரம் சுமார் 5319 மீட்டர்களாக உள்ளது. இந்தியாவில் உள்ள கடினமான சுற்றுலாப் பயணங்களுள் ஒன்றாகவும் இந்தப் பின் பார்வதிப் பயணம் விளங்குகிறது.

இந்த உயரத்தினை அன்னாந்துப் பார்க்கும் பொழுதே, இந்தப் பயணத்தின் கடினம் நமக்குப் புரிகிறது. இருப்பினும், என்றுமே கடினத்திற்கு பின் தான் ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் ஒளிந்திருக்கும் என்னும் சொல்லினை உறுதிப்படுத்திக் கொள்ளத் தவிக்கும் நம் நெஞ்சம் இந்தப் பகுதியினைக் காண ஆவல் கொள்கிறது. மேலும் இங்கு வருடா வருடம் ஏற்படும் பனிப்பொழிவுகளும் நம் மனதில் புதியதோர் அனுபவத்தினை உண்டாக்குகிறது. இந்தப் பயணம், தலைச்சிறந்த மலைஏற்றப் பயணங்களுள் ஒன்றாகவும் விளங்கும் ஒருக் கடினமானப் பயணம் என்பதனால், இந்தப் பயணத்திற்கு வழிக் காட்டியாளர்களின் உதவியும் நமக்குத் தேவைப் படுகிறது. வாழ்க்கையில் அதிர்ச்சியூட்டும் சாகசங்களைச் செய்யும் ஒரு நபரா நீங்கள்!
அப்படி என்றால், இந்த ஆபத்து நிறைந்த அழகியப் பயணத்தின் வாயிலாகப் புதியதோர் உணர்வினை நீங்கள் கொள்வீர்கள் என்பதில் எந்த ஒருச் சந்தேகமும் வேண்டாம். இங்குக் காணும் பனிப்பாறைகளும், பசுமை நிறைந்த இடங்களும், இங்குக் காணப்படும் ஆல்பைன் மரங்களும், வனங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களும், ஏரிகளும் என எண்ணற்ற இயற்கைப் பரிசுகள் ஒளிந்து நாம் செல்லச் செல்லக் கண்களுக்குக் குளிரூட்டி நம் பயணத்தினை மேலும் குஷிப்படுத்துகிறது.
எப்படி நாம் செல்வது? வாங்கப் பார்க்கலாம்...

சாலை வழிப் பயணம்:
நன்றாக அமைக்கப்பட்டிருக்கும் குள்ளுச் சாலைகள் வழியாகத் தில்லியிலிருந்துப் புறப்படும் தனியார் பேருந்துகள் வந்துக் கொண்டும் போய் கொண்டும் இருக்கிறது. தில்லியிலிருந்துத் தோராயமாகச் சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இந்த இடம், நம் கண்களுக்கு விருந்துப் படைக்கக் காத்திருக்கிறது என்றும் கூறலாம்.
அதுமட்டுமல்லாமல் நம் சொந்தக் கார் மூலமாகவும் குள்ளுவினை நோக்கி நாம் பயணம் செய்யலாம்.
தண்டவாள வழிப் பயணம்:
குள்ளுவிற்கு மிக அருகில் காணப்படும் ஒரு இரயில் நிலையம் ஜொகிந்தர் நகர் இரயில் நிலையமாகும். மணலியிலிருந்துச் சுமார் 166 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இந்த இரயில் நிலையத்திற்கு நாம் சாலையின் மூலமாகவும் பயணம் செய்யலாம்.

ஆகாய வழிப் பயணம்:
தில்லியிலிருந்துப் பூந்தாருக்கு (குள்ளுவிற்கு) தினமும் இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், இந்த விமான நிலையத்திலிருந்துச் செல்வதற்குக் கார்களும் குள்ளுவினை நோக்கி சென்றுக் கொண்டே இருக்கிறது.
இந்த இடத்தினைச் சுற்றிப் பார்ப்பதற்கு ஏதுவானதொருக் கால நிலை:
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலானக் காலங்கள் இந்த இடத்தினை நாம் சுற்றிப்பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கிறது. ஆண்டுமுழுவதும் பனிகளாலும், மழைகளாலும் சூழ்ந்துக் காணப்படும் இந்த இடம், ஜூலை முதல் செப்டம்பர் வரை மட்டும் குறைந்த பனிப் பொழிவுடன் காணப்படுகிறது. இந்தக் காலங்களில் நம் பயணத்தினை திட்டமிடுவோமாயின் அது நம் அனைவருக்கும் சிறப்பானதொருப் பயணமாகவும் அமைகிறது என்றுக் கூறலாம்.

பயணத்திற்கு நாம் கொண்டுச் செல்ல வேண்டிய அத்தியவாசியப் பொருள்கள்:
தலை முதல் கால் வரைச் சூழ்ந்து நம்மைப் பாதுகாக்கப் பயன்படும் மழைக் கோட்டுகள், மலைமேல் ஏறப் பயன்படும் நடைப் பயணக் குச்சிகள், தலையில் பொருத்திக்கொள்ளும் ஒரு ஒளி விளக்கு, வாட்டர் பாட்டில்கள், ஆற்றலினை அதிகப்படுத்தத் தேவைப்படும் ஆற்றல் பானங்கள், ஆட்டு ரோமத்தினால் ஆனச் சட்டைகள், பயணத்திற்கு ஏதுவானக் காலணிகள், கம்பளி ஆடைகள், நீர் உட்புகாதக் கையுறைகள், கதிரவன் ஒளியிலிருந்துக் காத்துக்கொள்ளப் பயன்படும் கருப்புக் கண்ணாடிகள், கதிரவன் ஒளித் தாக்கத்திலிருந்துத் தப்பிக்கப் பயன்படும் தொப்பிகள், முதலுதவி மருந்துகள் அடங்கிய ஒரு சிறியப் பெட்டி, பூட்ஸ் எனப்படும் புதை மிதியடி மூடுக் காலணி ஆகியவை நம் பயணத்தின் அத்தியவாசியப் பொருட்களாக அமைந்து நம்மைக் காத்துக் கொள்ளப் பயன்படுகிறது.
பயணத்தினைப் பற்றிய சிறு அலசல்:
எழும்புகள் சோர்ந்து வலுவிழந்துக் காணப்படும் நமக்கு இந்த ஒன்பது நாள் பயணம் இயற்கைத் தரும் ஒருச் சிறப்பு அனுபவமாக அமையும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை. நம் பயணத்தின், ஆரம்பிக்கும் ஒரு இடமாகக் குள்ளுவில் உள்ளப் பரசேனிக் கிராமம் நம்மை அன்புடன் அழைக்கிறது.
நாள் 1:

நம் பயணத்தின் முதல் படிக் குள்ளூரிலிருந்துப் பரசேனிக் கிராமம் வழியே ஆரம்பிக்க, நம் மனமும் உற்சாகத்துடன் முன்னோக்கிச் செல்கிறது. பரசேனிக் கிராமத்தினை அடையும் நாம் அங்கிருந்துப் புறப்பட்டுக் கல்காக் கிராமம் வழியாக ருத்ரநாத்தினை அடைகிறோம். கால்கள், பயணம் என்னும் சொல்லைப் பறைசாற்றிக் கொண்டு முன்னோக்கிச் செல்ல, நாம் காணும் புல்வெளிகளும், புல் நிலங்களும் நம் மனதினையும் கால்களினையும் இயற்கை அன்னையின் கரம் கொண்டுக் கோதுகிறது. நாம் செல்லப்போகும் அந்த உயரத்தின் தன்மையையும், கால நிலையின் மாறுதல்களும் நம் முதல் நாள் பயணத்திற்குச் சிறிய முட்டுக்கட்டைப் போட்டு ஓய்வெடுத்து அசதிக் கலைந்து அடுத்த நாள் பயணத்திற்குத் தயாராவது தான் ஒரு சிறந்த வழியெனக் கருதி நாங்கள் அந்தப் பகுதியிலே ஓய்வெடுக்கத் தொடங்கினோம்.
நாள் 2:

இரண்டாம் நாளின் இன்றிமையாதப் பயணத்தின் முதல் படியாக நாங்கள் உயரமான ஊசியிலைக் காடுகள் வழியேக் காலடித் தடத்தினைப் பதித்து கிர்கங்காவினை அடைந்தோம். அங்குக் காணப்படும் ஒரு அழகிய நீர்வீழ்ச்சி, செல்லும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க, எங்கள் மனதினில் சந்தோஷம் சிம்மாசனம் போட்டு அமர்ந்து அமைதிக் கொண்டு நல்லாட்சிப் புரிந்ததுப் போன்றதொரு உணர்வு தான் எங்களுக்குள். கிர்கங்காப் பகுதியின் சரிவு நிலங்களில் அமைந்திருக்கும் புல்வெளிகள் நம் அனைவரின் கவலைகளைக் கலைத்து இன்பத்தில் ஆழ்த்துகிறது. அந்த இயற்கையின் அழகினை வார்த்தைகளால் வருணிக்க முடியுமா என்றால் அதுச் சந்தேகம் தான் என நம் மனம் கையை விரித்துவிடுகிறது.
நாள் 3:

முத்தான மூன்றாம் நாளின் பயணத்தில், புல்வெளிகளின் வழியாகவும், சின்னஞ்ச் சிறிய ஓடைகளின் வழியாகவும், பாலத்தின் வழியாகவும் நாம் நடக்க, என்ன தான் இன்று நாம் காணப்போகிறோம் என்னும் எதிர்ப்பார்ப்பு நமக்குள்ளேத் தொற்றிக் கொண்டுச் சவாரிச் செய்கிறது. நம் எண்ண ஓட்டங்கள் சீரற்று அலைய அதனை சீர்ப்படுத்த நாங்கள் கண்ட அந்த வசீகரமானப் பார்வதி நதி எங்கள் மனதினை ஒரு நிலைப்படுத்தியது. மேலும் இந்த நதி, பறந்து நம் மனதினை வருடும் பலப் பறவைகளின் பிறப்பிடமாகவும் இருக்கிறது. இறுதியாக எங்கள் பயணம் ஒருப் பெரிய உயரத்தினை அன்னாந்துப் பார்த்தபடித் தொடங்க, 5 மணி நேரக் கடினப் பயணத்திற்குப் பிறகு நாங்கள் துன்டாப் புஜ்ஜினை அடைந்தோம். கடல் மட்டத்திலிருந்து 10500 அடி உயரத்தில் காணப்படும் இந்த இடம் எங்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தக் கடினப் பயணத்திற்கு இடைவேளை தர எண்ணிய எங்கள் மனம், அந்த அழகிய இடத்தில் கூடாரம் அமைத்து ஓய்வெடுக்க ஆசைக் கொண்டது. நாம் காணும் அந்தப் பார்வதிப் பள்ளத்தாக்கின் அழகு தான் ஒருவேளை இந்தப் பூமியில் நாம் காணும் ஒரு கடைசி அதிசயமோ எனக் கூட நம்முள் தோன்றுகிறது. அவ்வளவு அழகானக் காட்சிகளைப் போல் இனிமேல் எங்காவதுக் காணுவோமா என்பதுச் சந்தேகம் தான் என நம்முள் ஒரு உணர்வு ஏற்படுகிறது.
நாள் 4:

நாங்கள் வண்ணமயமான உலகத்தில் இந்த நான்காம் நாளில் பிரவேசிக்க, அது எங்களை அழகியப் பூக்கள் மற்றும் புல்வெளிகள் சூழ்ந்த இடம் வழியாக வருடியபடி அழைத்துச் சென்றது. நாங்கள் முன் நோக்கிச் செல்ல, சீரற்ற தன்மைக் கொண்டப் புல்வெளிகள் எங்களைத் தொடர்ந்தது. ஆம், சிறியப் பிள்ளையினைப் போல் தோன்றிய அந்தப் புல்வெளிகள் சீரற்றுத் தோன்றினாலும், அவற்றினைக் கண்ட எங்கள் மனம் சீராகவே இருந்தது. பாறைகளால் அமைக்கப்பட்டப் பாண்டுப் பாலத்தினை நாம் கடக்க, அதுத் தொடர்ந்து பார்வதி நதியினை அடைகிறது. நாங்கள் முன்னோக்கிச் செல்ல புதியதோர் உணர்வினைக் கொண்ட எங்கள் மனம், கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில் காணப்படும் தாகூர் கௌனை 6 மணி நேர நடைப் பயணத்தின் வாயிலாக அடைந்தது.
நாள் 5:

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையும் என்பார்கள். ஆனால், இந்த ஐந்தாம் நாளில் நாங்கள் என்னவெல்லாம் பார்க்கப் போகிறோம் என்றதொரு எதிர்ப்பார்ப்பு எங்கள் உடலினை வளைத்து அந்த நாளை எதிர்க்கொள்ள உற்சாகத்துடன் தயாரானது. தாகூர் கௌனிலிருந்துப் புறப்பட்ட நாங்கள் 13400 அடி உயரத்தில் காணப்படும் மண்டலை நோக்கி தான் இப்பொழுதுச் சென்றுக்கொண்டிருக்கிறோம். இந்த வசீகரமான இடத்தில், அழகு மட்டும் காணாது, அரை விலைமதிப்பற்றக் கற்களும், படிகக் கல்லும் நிறையவேக் காணப்படுகிறது. எது எப்படியோ அமைந்து இருப்பினும், இந்தக் கற்களினை நம் கண்களால் காண மட்டுமே முடியும் என்பதனைத் தெரிந்துக் கொள்ளும் நம் கைகள் எடுத்துச் செல்ல முடியவில்லையே என்றதொரு ஏக்கத்தினையும் அடைகிறது.
நாள் 6:

இந்த ஆறாம் நாளில் 17,500 அடி உயரத்தில் நடைப்பயணத்தின் மூலமாக மண்டலிருந்துப் புறப்பட்ட நாங்கள், பின் பார்வதியின் அடிப்பகுதியினை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறோம். இங்கு மத்தியில் அமைந்திருக்கும் அழகானக் காட்சிகளும் பசுமையான வளங்களும் நம் மனதினை நெருடி மேலும் வருடிகிறது. இந்த உயரமானப் பகுதியில் நாம் 6 மணி நேரம் பயணம் செய்ய அழகியப் பனிப்பாறைகளின் காட்சியினைக் கண்டு நம் கண்கள் குளுமை அடைகிறது. அந்த நாளில் நாம் காணும் அந்த உயரம், நம்மை நிலவிற்கு மத்தியிலும் நட்சத்திரக் கூட்டங்களின் மத்தியிலும் ஓய்வெடுக்க வைக்க, நாமும் கூடாரம் அமைத்து இதர நாளினை ஓய்வின் மூலம் தொடர்கிறோம்.
நாள் 7:

இந்த ஏழாம் நாளில் பார்வதிப் பள்ளத்தாக்கின் மூலம் நாம் பயணத்தினை ஆரம்பிக்க, புல்வெளிகள் நிறைந்தப் பகுதிகள் வழியாகவும், பூக்கள் நிறைந்த வழியாகவும் புறப்பட்டு கோம்பாக் கிராமத்தினை நம் கால்கள் அடைகிறது. அந்தக் கிராமத்தில் இருந்து நாம் கீழ் நோக்கி இறங்கக் கடல் மட்டத்திலிருந்து 12,600 அடி உயரத்தில் காணப்படும் விக்குரங்க் தட்சினைக் கடந்து ராம்பூர் வழியாகவும் பாறை நிலப்பகுதிகள் மற்றும் அடர்ந்தக் காடுகளின் வழியாகவும் சென்று கால் நடைகள் புற்கள் மீதுக் கொண்ட ஈர்ப்பினால் அவற்றினை உண்ணுவதனைக் கண்டுக்கொண்டே முன்னோக்கி செல்கிறோம்.
நாள் 8:

இந்த எட்டாம் நாளின் ஏக்கப் பயணத்தில் விக்குரங்க் தட்சினிலிருந்துப் புறப்படும் நாம் விசித்திர இடமான முத் கிராமத்தினை அடைகிறோம். நம் பயணம் ஸ்பித்தி வழியாக என்பதனை நினைவில் நாம் கொள்ள வேண்டியது அவசியமாகும். இங்கு நாம் காணும் அழகிய இயற்கைக் காட்சிகள், "நீ என்ன மாயஜாலம் செய்பவனா!" என அதிசயித்து நோக்க, இறுதியாக காஷாக் கிராமத்தினை நாங்கள் அடைந்தோம். ஒரு வழியாக நம் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது என உடல் கூறினாலும், உள்ளம் என்னவோ இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து அடம்பிடித்தது. எங்கள் மனம் நினைவலைகளை மனதில் எழுப்ப, முன்னோக்கி யோசிக்கத் தொடங்கியது எங்கள் மனம். அதனால், நாங்கள் முத் கிராமத்திலிருந்து புறப்பட்டு காஷாக் கிராமத்தினை அடைவதனை எங்கள் மனம் விரும்பவில்லை என்று தான் கூற வேண்டும்.
நாள் 9:

காஷாவிலிருந்துப் புறப்பட்ட நாங்கள் ஏக்கம் ததும்ப மணலியினை நோக்கிப் பயணித்தோம். நாங்கள் பயணித்த இந்தப் பாதை உயரமானதொரு நிலையில் இருக்க, இந்தக் கடைசி 8 நாட்கள் பயணத்தினை அவை நினைவுக் கூர்ந்தது. இந்த அழகிய இடங்களை ரசித்துக் கொண்டேச் சென்ற எங்கள் கண்கள் ஆச்சரியம் பொங்க இருந்தாலும், மனதில் இருந்த ஏக்கம் சாலைகளின் வழியேச் சிதறி ஒன்றுச் சேர மாட்டேன் என முனகியது. இங்குச் செல்வோர்கள், பூக்களின் மகரந்த வாசனைகளாலும், புல்வெளிகளின் அழகிய வருடல்களாலும், காட்சியினை உயரத்தில் சமர்ப்பிக்கும் உச்சங்கள் நீங்காத் தன்மையினாலும், பனியினை ஆடையாக உடுத்திக்கொண்டு அழகிப் போட்டிக்குத் தயாராகும் மலைகளின் எண்ணற்றக் கவர்ச்சியாளும் கவரப்படுவது உறுதி என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு உசிதமாகவே எனக்கு தோன்றுகிறது.



Click it and Unblock the Notifications



