கடல் மட்டத்திலிருந்து 2900 மீட்டர் உயரத்தில் காணப்படும் ஒரு அழகிய கணவாய் தான் குள்ளு பள்ளத்தாக்கில் காணப்படும் இந்த பூபூ கணவாய் ஆகும். இந்த பகுதிக்கு மிதமானதொரு பயணத்தின் மூலம் நாம் செல்ல, அப்படி என்ன தான் அழகிய காட்சிகளை நம்மால் பார்க்க முடிகிறது... வாங்க பார்க்கலாம்.
கல்லூரி பருவம் என்பது நம்மால் ஒருபோதும் மறக்க இயலாத இனிமையான பயணம் என்று கூறும் நம் இதழ்கள், கண்களில் கண்ணீரையும் வரவழைக்கிறது. எவ்வளவு இனிமையான பயணங்கள் நம் வாழ்வில் அரங்கேறினாலும், அது என்றுமே கல்லூரி கால அனுபவத்திற்கு ஈடாகாது. அதே போல் தான் நானும்... கல்லூரியினை முடித்து 5 வருடங்கள் ஆனாலும், என் தோழர்களை ஒன்றாக சந்திக்கப்போகும் ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதனை நினைத்து, என் மனம் இன்பத்தில் துள்ளி குதிக்கிறது.
வெவ்வேறு திசையில் இருக்கும் என் நண்பர்களை... நான் 5 வருடத்திற்கு பிறகு காண போகிறேன் என்பதனை என் இதழ்கள் உச்சரிக்கும் பொழுது, வாயில் பட்ட இனிப்பின் சுவை, என் நாவை வருட, அந்த சுவை நீங்கிவிட கூடாது என, என் மனம் துடிப்பது போன்றதொரு உணர்வு என் மனதில் நிரம்பி வழிகிறது. ஒரு நிமிடம்......நான் கூறிய வார்த்தைகளை ஒரு முறை சரி பார்த்து கொள்கிறேன். ஆம், நான் கூறிய வார்த்தைகளில் ஆசிரியர் பற்றி ஏதும் கூறினேனா? கண்டிப்பாக இல்லை என நம்புகிறேன். ஆம், எங்கள் இனிமையான நட்பு பயணத்தின் போது நான் எந்த ஒரு அமானுஷ்ய நிகழ்வுகளையும் காண விரும்பவில்லை. அட ஆமாம்ங்க....என் கல்லூரி ஆசிரியரை தான் நான் சொல்கிறேன். இன்பம் காண துடிக்கும் என் மனம், துன்பம் நோக்கி பார்த்தால், பயப்புடும் தானே!
இருப்பினும், எங்கள் அனைவரையும் ஒரே வீட்டில் அடைத்து, நட்பு என்னும் வண்ணத்தை கொண்டு அழகு படுத்திய என் கல்லூரியையும் நான் காண வேண்டுமென்று ஆசை கொள்கிறேன். இந்த மூன்று வருடத்தில் செய்யாத ஒன்றை.. என் கல்லூரிக்காக செய்ய வேண்டும் என என் மனம் ஆசை கொள்கிறது. அதுவும் இதுவரை நாங்கள் ஒன்றாக இணைந்து ரசிக்காத ஒரு உணர்வினை ரசிக்க, என் மனம் ஆசை கொண்டது. வெவ்வேறு திசையில் பிரிந்து கிடந்த எங்களை இந்த 'டி நாள்' ஒன்றாக இணைக்க போகிறது. அதிலும், எங்களை இணைப்பதற்கு பேருதவி புரிந்தது சமூக வலைத்தளமாகும். 'எல்லா புகழும் சமூக வலை தளங்களுக்கே' என நாங்கள் முகபுத்தகத்தையும், டிவிட்டரையும் பார்த்து கை எடுத்து கும்பிட, அனைவரும் தாங்கள் வருவதனை உறுதி செய்தனர்
பூபூ கணவாய் பயணம் என்பது அசாதாரண சூழல்களால் நம்மை வெகுவாக கவரும், தொன்மை நீங்காதொரு அழகிய பயணமாகும். இந்த பாதை, இமாச்சல பிரதேசத்தின், மண்டியில் உள்ள சுஹாரையும், குள்ளு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள லாக்கினையும் இணைக்கிறது. இந்த கணவாய், கடல் மட்டத்திலிருந்து 2900 மீட்டர் உயரத்தில் அமைந்து நம்மை அன்னாந்து பார்க்க வைக்கிறது. இந்த மிதமானதொரு பயணத்தில், கொஞ்சம் கடின தன்மைகளும் இருக்கிறது என்பதே உண்மை. இந்த மலையேற்றத்தின் போது கிராம புறங்களின் அழகிய சூழலும், ஆல்பைன் புல்வெளிகளும், அழகான காடுகளும், காடுகளின் உள்ளே விலங்குகளுக்கு போட்டியாக உறுமி கொண்டிருக்கும் ஓடைகளும் என நம் மனதை இயற்கை அன்னையின் மடியில் தவழ வைத்து இதமானதொரு உணர்வினை தருகிறது. இருந்தபோதிலும், தௌலத்தார் மலைப்பகுதிகள் அச்சின் பாதையில் அமையாத காரணத்தால், இந்த பயணத்தின் ஒரு அங்கமாக தௌலத்தாரும் அமைந்து நம் கண்களை குளிரூட்டுகிறது.
பூபூ கணவாய் மிகவும் குறைந்த உயரத்தில் அமைந்திருந்தாலும், ஏறுவதற்கு உகந்த சூழல் என்பது எளிதான ஒன்றல்ல என்று தான் கூற வேண்டும். மண்டியிலிருந்து செல்லும் உயரமான பகுதி, சற்று கடினத்துடன் காணப்பட, சாலைகளும் சரியானதொரு தன்மையில் காணவில்லை. ஆம், தொன்மை நீங்கா இந்த பகுதியின் சாலைகள் கடினமாக இருந்தாலும், பண்டைய வரலாற்றினை நமக்கு நினைவுபடுத்தி பிரமிக்க வைக்கிறது. இந்த பயணம் கடினம் என்று கூறுவதனை விட, நாம் அனைவருக்கும் புதியதோர் அனுபவத்தினை மனதில் விதைத்து இன்பம் பயக்கும் என கூறுவதே சால சிறந்ததாகும்.
பெங்களூரிலிருந்து புறப்பட்ட நாங்கள், விமானத்தின் மூலம் தில்லிக்கு பறந்து சென்றோம். அங்கு எங்கள் பயணத்தின் சிறப்பானதொரு தொடக்கமாக இனிமையான 'பார்ட்டி' ஒன்று வைத்து இன்பம் கொண்டு மனதினை உற்சாகப்படுத்தினோம். பயணத்தின் இரண்டு நாட்களுக்கு முன்பே நாங்கள் மணலியினை அடைய, அங்கு கண்ட அழகான காட்சிகளால் மனதினை இதமாக்கினோம். அதன் பிறகு பயணத்திற்கு தேவையான ஆற்றலை சேகரிக்கும் நோக்கத்துடன் அங்கேயே ஓய்வெடுத்து பயணத்துக்கு ஆயத்தமானோம்.
பயணத்திற்கு ஏதுவான கால நிலைகள் யாவை?
மே முதல் ஜூன் வரையிலான காலங்களிலும், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலங்களும் நம் பயணத்திற்கு ஏதுவானதொரு காலமாக அமைந்து நம் பயணத்தை மேலும் இனிமைகொண்டு வருடுகிறது. குளிர்காலத்தையும், பருவகாலத்தையும் நாம் பயணத்திற்கு உகந்த ஒன்றாக தேர்ந்தெடுக்காமல் தவிர்ப்பது நல்லதாகும். இமய மலையின் கால நிலைகளில் ஏற்படும் மாற்றத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் போக, அது நம் பயணத்திற்கு மிகவும் சிரமத்தினை ஏற்படுத்தி மிக கடினமானதொரு அனுபவத்தை நமக்கு தருகிறது. அதனால், இந்த கால மாறுதல்களின் நிலையை புரிந்து நாம் பயணத்தினை தவிர்ப்பது மிகவும் நல்லதாகும்.
பயணத்திற்கு தேவையான அத்தியவாசிய பொருட்கள் யாவை?
மலை ஏற பயன்படும் காலணிகள், தலையில் பொருத்தி கொள்ளும் விளக்குகள், மலை ஏற தேவைப்படும் குச்சிகள், கெட்டியான ஜாக்கெட்டுகள் (சட்டைகள்), தலை முதல் கால் வரை கவரும் தன்மை கொண்ட ஓவர் கோட்டுகள், வெப்பங்கள், கையுறைகள், கண்ணாடிகள், தலையை பாதுகாத்து கொள்ள பயன்படும் தொப்பி, அதி குச்சிகள், வாட்டர் பாட்டில்கள், சிற்றுண்டிகள், சுவிஸ் கத்திகள், நெருப்பு மூட்ட தேவைப்படும் லைட்டர்கள், கிருமி நாசினி (சோப் வகைகள்), மருந்துகள் அடங்கிய முதலுதவி பெட்டி ஆகியவை நம் பயணத்திற்கு அத்தியவாசிய பொருட்களாக அமைந்து நம் பயணத்தினை மிதமாக வழி நடத்தி செல்கிறது.
நாள் 1: டலிகாட் முதல் டக் பங்களா வரை
எங்கள் முதல் நாள் பயணத்தில், மணலியிலிருந்து புறப்பட்டு குள்ளுவை நோக்கி நாங்கள் சென்றோம். அங்கிருந்து புறப்பட்ட நாங்கள், தல்பூரினை அடைந்தோம். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு லுக் பள்ளத்தாக்கினை சென்று சேர்ந்தோம். அந்த பள்ளத்தாக்கு குறுகிய தன்மையுடன் காணப்பட்டது. அந்த பள்ளத்தாக்கினை கடந்து சென்ற நாங்கள், ஒரு குக்கிராமத்தினை அடைந்தோம். இறுதியாக காணப்பட்ட டலிகாட்டினை அடைந்த நாங்கள், எங்கள் பயணத்தினை ஆரம்பிக்கும் நோக்கத்துடன் கொண்டு வந்த மூட்டைகளை டக் பங்களாவுக்கு எடுத்து வருமாறு 'குதிரைக்கும் அதன் உரிமையாளருக்கும் ஆணையிட்டு', நடந்து முன்னோக்கி சென்றோம்.
நாங்கள் நடந்து சென்ற பாதையில் ஒரு அடர்ந்து காடு இருக்க, அதன் வழியே சென்ற நாங்கள், கேதுரு மரங்களையும், தேவதாரு மரங்களையும், கருவாலி மரங்களையும் கண்டு ரசித்தோம். இந்த 3 மணி நேர பயணத்தின் வாயிலாக, மேற்கத்திய ட்ராகோபன்கன் பகுதியை அடைந்தோம். இந்த பகுதியில் காணப்படும் மயில்கள், இதுவரை நாம் பார்த்திராத ஒரு வகையினை சேர்ந்ததாக இருக்க, அந்த மயில்களின் அழகால் வருடும் நம் மனம், நிற்கதியற்று அந்த இடத்திலே சரணடைந்துவிடுகிறது.
நாள் 2: டக் பங்களா முதல் ஜிங்க்பான் வழியாக பூபூ கணவாய் வரை
நாங்கள் நேற்று இரவு பொழுதினை டக் பங்களாவில் தங்கி செலவிட்டு, மீண்டும் இன்று அதிகாலையில் எழுந்து கருவாலி மரங்களின் வழியாகவும், தேவதாரு மரங்களின் வழியாகவும் சென்றோம். அங்கு நாங்கள் கண்ட, இந்திராசன் பகுதியின் உச்சமும், தியோ திப்பா பகுதியின் உச்சமும் எங்களை உயரம் கொண்டு கவர, மனம் இதமானதொரு உணர்வினை அடைந்து எங்கள் கால்களை முன்னோக்கி இழுத்து சென்றது. இறுதியாக நாங்கள், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 மீட்டர் உயரத்திலுள்ள பூபூ கணவாயினை அடைந்தோம்.
இந்த பகுதியில் காணப்படும் கணேச பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறு ஆலயம், காட்சிகளால் நம் மனதினை கவர்ந்து பக்திகள் நிரம்ப ஆட்சி செய்கிறது. இங்கு காணும் கங்க்ரா பள்ளத்தாக்கு ஒரு உன்னதமான உணர்வினை தந்து, அழகால் மெல்ல நம் மனதினை வருடுகிறது. நாங்கள் அதன் பிறகு ஜிங்க்பானை நோக்கி நடந்து, அங்கு ஒரு கூடாரம் அமைத்து இரவு பொழுதில் தங்கினோம்.
நாள் 3: ஜிங்க்பான் முதல் டென்ட்பியால் வரை
மூன்றாம் நாள், எங்களை பெருமிதத்துடனும் அன்புடனும் அழைக்க, கூடாரத்திலிருந்து புறப்பட்ட நாங்கள், டென்ட்பியாலை அடைந்தோம். ஆம், நாங்கள் முகடுகளின் வழியே நடந்து கங்க்ரா பள்ளத்தாக்கினை நோக்கி சென்றோம். இந்த 6 மணி நேர பயணத்தின் வாயிலாக டென்ட்பியாலை அடைந்த நாங்கள், ஜிங்க்பானிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒரு பெரிய பாறையின் அருகில் எங்கள் மதிய உணவினை உண்டு, அங்கு சற்று நேரம் ஓய்வெடுத்தோம். அங்கு நாங்கள் கண்ட குக்கிராமங்களும் பண்ணை நிலங்களும் கண்ணுக்கினிய காட்சிகளை எங்கள் முன் வழங்க, டென்ட்பியால் பகுதியில் எங்கள் இரவு பொழுதினை கழி(ளி)த்தோம்.
நாள் 4: டென்ட்பியால் முதல் முல்லிங்க் வரை
டென்ட்பியாலில் இருந்து நாங்கள் புறப்பட்டு முல்லிங்கை நோக்கி செல்ல, அங்கு காணப்பட்ட உயரமான நீரோடைகளை கடந்து, அவற்றின் நீரில் எங்கள் மனதினை பறி கொடுத்தோம். அதேபோல் அந்த வழியில் நிறைந்து காணப்படும் ஆல்பைன் முகடுகளின் அழகும் எங்கள் மனதினை பிடித்து இழுக்க முயல, நாங்கள் வார்த்தையற்று ஊமையாய் அழகினை நோக்கியவாறு அப்படியே நின்றோம். பரோட் நல்லாவின் வழியாக நாங்கள் கீழ் இறங்கி நடக்க, முல்லிங்க் பகுதியினை அடைவதன் நோக்கத்துடன், மேல் நோக்கி செங்குத்தான பகுதியின் வழியாக ஏறினோம். இந்த இடத்துடன் எங்களுடைய பயணம் முடிவுக்கு வர, தர்மசாலாவை நோக்கி, காரில் ஏறி மகிழ்ச்சி பொங்க வார்த்தைகளை சாலை வழியே உதிர்த்தபடி சிறு ஏக்கத்துடன் சென்றோம்.