இந்தியாவில் ரயில்கள் மிக கடுமையான பாதைகளையும் கடந்து மாநிலங்களை ஒன்றிணைக்கிறது. வட - தென் துருவங்களை இணைக்கும் ரயில்வே, மேற்கு கிழக்கு துருவங்களையும் ரயில் தண்டவாளங்கள் மூலமாக இணைக்கிறது. நாம் சுற்றுலா செல்கையில் , தொலை தூர இடங்களுக்கு பயணிக்கும்போது இந்தியர்கள் பெரும்பாலும் ரயில்களையே பயன்படுத்துகிறோம். ஏன்.. அதுதான் மலிவானது. நேரம் கொஞ்சம் அதிகம் எடுத்தாலும் சிக்கனமானது. நிறைய பேருடன் சுற்றுலா செல்வர்கள் தேர்ந்தெடுப்பது ரயில் பயணத்தைதான். சரி ... இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில் நீர்வீழ்ச்சியை கிழித்துக்கொண்டு பறப்பதுபோல இருக்கும். அந்த வழித்தடத்தையும், அங்கு அருகில் இருக்கும் சுற்றுலா தளங்களைக் குறித்தும் இந்த பதிவில் காண்போம்.

இந்த ரயிலின் வழித்தடம்
ஹௌராவிலிருந்து வாஸ்கோ டா காமா செல்லும் இந்த ரயிலின் வழித்தடத்தில் எக்கச்சக்க சுற்றுலா அம்சங்கள் இருக்கின்றன. அந்த ரயிலின் வழித்தடத்தில் இருக்கும் நிறுத்தங்களாவன
ஹௌரா, கரக்பூர், கட்டாக், புவனேஸ்வர், குர்தா சாலை, விசாகப்பட்டினம், குண்டூர், நந்தியால், குன்டக்கல், பெல்லாரி, ஹௌசப்பேட்டே, கடாக், ஹூப்ளி, கேஸ்டில், குலெம், மட்கவுன், வாஸ்கோடாகாமா
இந்த ரயில் அதிகபட்சம் 110கிமீ வேகத்தில் செல்லும். 18 பெட்டிகளுடன் பயணிக்கும்.
Hsp wiki

ஹௌரா ரயில் நிலையமும் அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களும்
மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவின் இரட்டை நகரம்தான் இந்த ஹௌரா. இந்தியாவில் உருவான பல்வேறு இரட்டை நகரங்களின் பட்டியலில் இதுவும் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இது ஒரு தொழில் நகரமாக விளங்குகின்றபோதிலும் ஒரு உல்லாசநகரம் போன்ற இயல்பையும் சூழலையும் இந்நகரத்தில் பயணிகள் உணரலாம். நான்கு பாலங்கள் இந்த ஹௌரா நகர்ப்பகுதியை கொல்கத்தா நகரத்துடன் இணைக்கின்றன. பிரசித்தமான ஹௌரா பாலம், விவேகானந்தா, வித்யாசாகர், நிவேதிதா பாலம் ஆகியவையே அவை.
சுற்றுலா
பாடனிகல் கார்டன் அல்லது ஆச்சார்ய ஜகதீஷ் சந்திரபோஸ் இந்தியன் பாடனிகல் கார்டன் என்று அழைக்கப்படும் தோட்டப்பூங்கா ஹௌராவிலுள்ள முக்கிய சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. ஷிப்பூர் எனும் இடத்திலுள்ள இந்த தோட்டப்பூங்கா 100 ஹெக்டேர் பரப்பளவில் 12,000 வகையான தாவரங்களை கொண்டிருக்கிறது. இங்குள்ள ‘கிரேட் பான்யன் ட்ரீ' என்று அழைக்கப்படும் பிரம்மாண்ட ஆலமரம் ஒன்று உலகத்திலேயே மிக ஆலமரமாக பிரசித்தி பெற்றுள்ளது. பல்வேறு புலம்பெயர் பறவைகள் விஜயம் செய்யும் சண்ட்ராக்ச்சி ஜீல் எனப்படும் ஏரி ஒன்றும் இங்கு புகைப்பட ரசிகர்களுக்கு பிடித்த இடமாக விளங்குகிறது.
Shubhankar.sengupta19

கரக்பூரும் சுற்றுலாத் தளங்களும்
மிட்னாபூரில் வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலாத் தலங்கள் பல உள்ளன. சப்லேஷ்வர் சிவன் கோவில், ஜகன்னாத் கோவில் மற்றும் அனைத்து மசூதிகளும் தர்காஹ்களும் தான் அவைகளில் சில. காளி தேவியின் பக்தர்கள் பட்டலா கோவிலுக்கு அடிக்கடி வருவார்கள். மேற்கு வங்காளத்தில் உள்ள மற்ற நகரங்களை போல மிட்னாபூருக்கும் துர்கா பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் காளி பூஜைகளின் போது வருவதே உகந்த நேரமாக இருக்கும். திருவிழாக்களின் போது நகரமே வண்ணமயமாக காட்சி அளிக்கும். இந்நேரத்தில் நகரத்தில் பல இடங்களில் பந்தல்களும், ஷாமியானக்களும் அமைக்கப்பட்டிருக்கும்.
Atish Krishanu 989 -

கட்டாக்கும் அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களும்
ஆன்மீக தலங்கள், மலைகள், கோட்டைகள், நினைவுச்சின்னங்கள் என ஏகப்பட்ட சுற்றுலா தளங்கள் இங்கு உள்ளன. அன்சுபா நன்னீர் ஏரி, தபாலேஷ்வர் கோவில், ரத்னகிரி, லலித்கிரி மற்றும் உதயநிதி மலைகள் போன்ற ரம்மியமான இடங்கள் இங்கு நிறைய உண்டு. பங்கியில் உள்ள சர்சிகா கோவிலுக்கு நிறைய யாத்ரீகர்கள் வருகை தருகிறார்கள். மா பட்டாரிக்கா என்ற கோவில், செளதார் என்னும் சிவன் கோவில், புத்தமதத்தைப் பற்றி அறிவிக்கும் நராஜ், சந்தி தேவி கோவில் என இங்கு ஏராளம் உண்டு. சடாகோசியா வனவிலங்கு சரணாலயத்தில் பலவகை வனவிலங்குள் உள்ளன. பராபத்தி மைதானம் விளையாட்டு வீரர்களை ஈர்க்கிறது. விடுதலை போராட்ட தியாகிகளின் நினைவகமாக திகழும் நேதாஜி அருங்காட்சியத்தையும் தவறவிடக் கூடாது.
Kamalakanta777

புவனேஸ்வரும் சுற்றுலாத் தளங்களும்
லிங்கராஜ் என்ற சிவபெருமானின் அவதாரம் வீற்றிருக்கும் ஸ்தலமாக இந்த புபனேஷ்வர் நகரம் கருதப்படுகிறது. புராதன கோயிற்கலை மரபுகளும் நுணுக்கங்களும் பாரம்பரியமாக செழித்து விளங்கிய நகரமாக இது ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. இந்த பிரதேசத்தின் கோயிற்கலை பாணி மற்றும் கட்டிடக்கலை தொழில் நுட்பங்கள் போன்றவை வேறெங்கும் காண முடியாத தனித்தன்மையான அழகம்சங்கள் மற்றும் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் நுணுக்கங்களுடன் காட்சியளிக்கின்றன.
புபனேஷ்வர் நகர சுற்றுலாவின்போது பயணிகள் பார்த்து ரசிப்பதற்கான ஏராளமான அம்சங்கள் காத்திருக்கின்றன. ஒடிஷா மாநிலத்தின் பெரிய நகரமான புபனேஷ்வரில் ஏரிகள், குகைகள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் மற்றும் அணைகள் போன்றவை நிரம்பியுள்ளன. இவை தவிர பழமையான கோயில்களான லிங்கராஜ் கோயில், முக்தேஷ்வர் கோயில், ராஜாராணி கோயில், இஸ்க்கான் கோயில், ராம் மந்திர், ஷிர்டி சாய் பாபா மந்திர், ஹிராபூர் யோகினி கோயில் போன்றவை ஒடிஷா கோயிற்கலை பாரம்பரியத்தின் சான்றுகளாக வீற்றிருக்கின்றன.
Sambit 1982

விசாகபட்டினமும் சுற்றுலாவும்
சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கபுரி என்று சொல்லக்கூடிய அளவுக்கு தன்னுள்ளே பல எழில் அம்சங்களை இந்த விசாகபட்டினம் நகரம் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன. அழகிய கடற்கரைகள், கம்பீரமான மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள், நவீன நகர்ப்புற வசதிகள் என்று எல்லாம் கலந்த கதம்பமாக, எல்லோருக்கும் பிடிக்கும்படியான இயல்புடன் இது காட்சியளிக்கிறது.
வெங்கடேஸ்வரா கொண்டா, ராஸ் மலை மற்றும் தர்க்கா கொண்டா ஆகிய மலைகளால் இந்த நகரம் சூழப்பட்டுள்ளது. வெங்கடேஸ்வரா மலையில் ஒரு சிவன் கோயிலும், ராஸ் மலையில் வர்ஜின் மேரி தேவாலயமும் மற்றும் தர்க்கா கொண்டா மலையில் பாபா இஷாக் மதீனா எனும் இஸ்லாமிய யோகியின் கல்லறை மாடமும் அமைந்துள்ளன. வைசாக் நகரத்தின் அழகிய கடற்கரைகளாக ரிஷிகொண்டா பீச், கங்கவரம் பீச், பிம்லி மற்றும் யரடா பீச் போன்றவை நகரின் கிழக்குப்பகுதியில் காணப்படுகின்றன. மேலும், இயற்கை எழில் அம்சங்களாக கைலாசகிரி ஹில் பார்க், சிம்மாசலம் மலைகள், அரக்கு வேலி, கம்பலகொண்டா காட்டுயிர் சரணாலயம் போன்றவை இங்கு இயற்கை ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன.
Adityamadhav83

விஜயவாடா
சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரக்கூடிய பல அம்சங்கள் விஜயவாடா நகரத்தில் நிறைந்துள்ளன. புகழ் பெற்ற கனக துர்கா கோயில் மற்றும் தென்னிந்தியாவிலேயே பழமையான வைஷ்ணவ கோயிலாக கருதப்படும் மங்களகிரி போன்றவை இங்குள்ள முக்கியமான ஆன்மீக திருத்தலங்களாகும். இவை தவிர, அமரேஷ்வரர் என்ற சிவன் அவதாரத்துக்கான அமராவதி, குணாடலா மாதா கோயில் எனப்படும் செயிண்ட் மேரி தேவாலாயம் போன்றவையும் இந்நகரத்தில் உள்ளன. மேலும், மொகலாராஜபுரம் குகைகள் , உன்டவலி குகைகள் மற்றும் காந்தி மலையில் உள்ள காந்தி ஸ்தூபி, கொண்டபள்ளி கோட்டை, பவானி தீவு மற்றும் ராஜீவ் காந்தி பார்க் ஆகியவை விஜயவாடா நகரத்தில் அவசியம் பார்க்க வேண்டிய அம்சங்களாகும். பிரகாசம் அணைத்தடுப்பு நீர்த்தேக்கமும் விஜயம் செய்ய வேண்டிய இயற்கை எழிற்பிரதேசமாகும்.
Koushik -

ஹுப்ளி
சமீப வருடங்களாக கர்நாடக மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா மையமாக ஹுப்ளி நகரம் மாறி வருகின்றது. ஹூப்ளியின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக பவானிஷங்கர் கோயில், அஸார், சித்தரூத மடம், உன்கால் ஏரி, நிருபதுங்க பெட்டா மற்றும் கண்ணாடி மாளிகை போன்றவற்றைக் குறிப்பிடலாம். மேலும் ஹுப்ளியின் அருகிலுள்ள அதன் இரட்டை நகரமான தார்வாட், நவில்தீர்த், சத்தோடா, சொகல்லா மற்றும் மத்தோடா நீர்வீழ்ச்சிகள், இஸ்க்கான் கோயில், ஸ்கைக்ஸ் பாயிண்ட் மற்றும் உலாவியா போன்ற முக்கிய இடங்களும் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர ஹூப்ளியிலிருந்து பயணம் மேற்கொள்ள வசதியாக பீஜாப்பூர், பீடார், படாமி, ஏஹோல், படாட்கல் மற்றும் ஹம்பி போன்ற இதர வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாஸ்தலங்களும் அருகில் உள்ளன.
Siddharth Pujari

தூத்சாகர் அருவி
இந்த அருவியின் கம்பீரத்தையும், பேரழகையும் பரிபூரணமாக கண்டு ரசிக்க நீங்கள் மழைக் காலத்தில் வருவதுதான் பொருத்தமானதாக இருக்கும். ஆனால் அருவியை நோக்கிச் செல்லும் சாலை மழைக் காலங்களில் மூடப்பட்டிருப்பதோடு, அக்டோபர் மாதத்திற்கு பின்புதான் திறந்துவிடப்படும். அதோடு அருவியின் கீழ்ப்பகுதியில் காணப்படும் குளம் சற்று ஆபத்தானதாக தோன்றினாலும் யார் வேண்டுமானலும் அதில் நீராடி மகிழலாம்.
மேலும் தூத்சாகர் அருவி பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயத்துக்குள், அடர் வனங்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதால் இப்பகுதியில் பல்வேறு வகையான விலங்கினங்கள், தாவரயினங்கள், பறவைகள் ஆகியவற்றை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். தூத்சாகர் அருவியை ரயில் மூலமாக சுலபமாக அடையலாம். இந்த அருவியின் அருகாமை ரயில் நிலையமாக கால்லெம் ரயில் நிலையம் அறியப்படுகிறது.
அதோடு கர்நாடக மாநிலத்திலிருந்து ஹூப்ளி, தர்வாத், அல்நாவர், லோண்டா, தீனைகாட், கேஸ்டில் ராக், தூத்சாகர் ரயில் பாதையில் தூத்சாகர் அருவியை அடைய முடியும். மேலும் தூத்சாகர் செல்லும் சாலை காட்டு வழியாக இருப்பதாலும், பல இடங்களில் சாலையை நதி கடந்து செல்வதாலும் கார் போன்ற வாகனங்களில் தூத்சாகர் அருவிக்கு பயணிப்பது ஆபத்தில் முடியலாம். தூத்சாகர் அருவியை தேடி எண்ணற்ற டிரெக்கிங் பிரியர்கள் வந்து செல்கின்றனர். எனவே இங்கு டிரெக்கிங் செல்பவர்கள் தங்கி ஓய்வெடுக்க சில தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Chaitanya varma

வாஸ்கோ
போக்மாலு கடற்கரைக்கு அருகில் உள்ள நேவல் மியூசியம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. இங்கு நீங்கள் போர்த்துகீசியர்களின் காலத்திலிருந்து தற்போது வரையிலான கோவாவின் கப்பல் படை வரலாற்றை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். அதேபோல் 1624-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மர்ம கோவா கோட்டை, வர்கா கடற்கரையின் அருகே மார்கோ துறைமுகத்தின் நுழைவாயிலாய் உயர்ந்து நிற்கும் பாங்கை பயணிகள் கண்டிப்பாக காண வேண்டும். இங்கு தொன்மை வாய்ந்த கல்வெட்டுகள் சில பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் வாஸ்கோவில் சிவாஜி மகாராஜாவின் நினைவாக கட்டப்பட்ட சிவாஜி கோட்டைக்கும் பயணிகள் சென்று பார்க்கலாம். இந்த இடங்களை எல்லாம் சுற்றிக்காட்ட ஏராளமான வழிகாட்டிகள் வாஸ்கோ நகரில் உங்களுக்காக காத்துக்கிடக்கிறார்கள்.
Lalitsaraswat



Click it and Unblock the Notifications




