நம் உலகில் மொத்தம் 51 அட்சர சக்தி பீடங்கள் உள்ளதாக புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. மார்க்கண்டேய புராணமும் திருவிளையாடற் புராணமும் 64 சக்தி பீடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. இந்த 64 பீடங்களும் தேவி பாகவதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. சம்ஸ்க்ருதத்தின் 51 அட்சரங்களுக்கும் 51 பீடங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. நவ சக்தி பீடங்கள் என்ற ஒன்பது பீடங்கள் உள்ளதாகவும் கருத்துள்ளது. நித்யோத்சவம், வாமகேஸ்வர தந்த்ரம் போன்ற நூல்களும் சக்தி பீடங்களைக் குறித்து கூறுகின்றன. சக்தி பீடங்கள் என்பவை ஆதிசக்தியின் ரூபமான சதிதேவி எனும் தாட்சாயிணியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் உருவான கோவில்களாகும். அவற்றுள் சக்திவாய்ந்த முக்கிய பீடம் எங்குள்ளது என தெரியுமா ?
சக்தியின் அமர்விடம்
சக்தி பீடம் என்பதற்கு சக்தியின் அமர்விடம் என்று பொருள். இதில் 51 சக்தி பீடங்கள் அக்ஷரசக்தி பீடங்கள் என்றும், 18 சக்தி பீடங்கள் மகா சக்தி பீடங்கள் என்றும், நான்கு சக்தி பீடங்கள் ஆதி சக்தி பீடங்கள் என்றும் வழங்கப்படுகின்றன. எங்கெங்கு காணினும் சக்தியடா என்பது போல் பாரதமெங்கும் மட்டுமல்லாமல் இலங்கையிலும், பாகிஸ்தான் பலூசிஸ்தானிலும் கூட சக்தி பீட நாயகியாய் அம்பிகை அருள்கிறாள். இதில், குஜராத்தில் உள்ள சக்தி பீடத்தை தரிசிக்கச் செல்வோமா.
துவாரகை, பத்ரகாளி
குஜராத் மாநிலம், அம்பாஜியில் அமைந்துள்ளது துவாரகை, பத்ரகாளிக்கான சக்தி பிடம். நாட்டில் பழமையான மற்றும் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் இக்கோவிலம் ஒன்றாக உள்ளது. இந்த சக்தி பீடங்கள் சதி அல்லது அன்னை சக்தியை வழிபடும் சாக்த உபாகர்களுக்கு மிக முக்கியமான தலமாகும். அம்பாஜி மாதாவின் பீடம் காபார் மலை உச்சியில் அமைந்திருக்கிறது.
காபார் மலைத் தொடர்
மலைக்கே உரித்தான அடர் மரங்களும், புதர்களுக்கும் இடையே fபார் மலைத் தொடரில் மாபெரும் பாறைக் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது சக்திபீடத் திருத்தலம். இப்பகுதியை ஆரவல்லி மலையின் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளன. இவ்விடத்தின் இயற்கை அழகு மற்றும் அமைதி ,யற்கை ரசிகர்களையும் இதனை நோக்கி ஈர்க்கிறது.
சரஸ்வதி நதி
காபார் மலையில் புகழ்பெற்ற வேத காலத்து நதியான சரஸ்வதி நதியின் தொடக்கம் அமைந்துள்ளது. அரசுர் மலைத் தொடர்களில் அமைந்துள்ள இது ஆரவல்லி மலைகளின் தென் மேற்கு பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 அடி உயரத்தில் இருக்கிறது. செங்குத்தான தோற்றம் கொண்ட காபார் மலையில் ஏறுவது அவ்வளவு எளிதல்ல. பக்தர்கள் மலை அடிவாரத்தில் இருந்து 300 கல் படிகள் உள்ள ஒரு குறுகிய ஆபத்தான பாதையில் ஏறி காபார் மலையை அடைய வேண்டும்.
தேவி சக்தியின் இதயம்
அம்பாஜி காபார் மலைக் கோவில் தலமானது நாட்டில் மிக முக்கியமான சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுவதற்குக் காரணம் இது தேவி சதியின் இதயப் பகுதியாக நம்பப்படுகிறது. இத்தலத்தில் சக்தி பீடமான அரசூரிக்கு சிலைகள் இல்லை. ஸ்ரீ விசா இயந்திரமே வணங்கப்படுகிறது. குறிப்பாக, இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியாது. இந்த விசா யந்திரத்திற்கு வழிபாடு செய்யும் முன் பக்தர்கள் தன்னுடைய கண்களை கட்டிக் கொண்டு வழிபாடு செய்யவேண்டும்.
சுற்றுலா அம்சங்கள்
காபார் மலையில், கைலாச மலையினைப் போன்றே சூரியன் மறையும் தருணத்தை காண ஏதுவாக காச்சி முனைகள் உள்ளன. இப்பகுதியில் இருந்து சூரிய அஸ்த்தமனத்தை முழுவதுமாக காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமின்றி அடிவாரத்தில் இருந்து மலை உச்சியினை சென்றடைய ரோப் கார் வசதிகள் உள்ளன. இவை இப்பகுதியில் முக்கிய சுற்றுலா அம்சமாகத் திகழ்கிறது.
பல்ராம் வனவிலங்கு சரணாலயம்
அம்பாஜி அருகே அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களில் பிரசிதிபெற்றது பல்ராம் வனவிலங்கு சரணாலயம். பானஸ்கந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள இச்சரணாலயத்தின் பெயர் இதன் எதிர் முனைகளில் அமைந்துள்ள இரண்டு கோவில்களான பல்ராம் மற்றும் அம்பாஜியின் பெயரால் அழைக்கப்படுகிறது. சோம்பல் கரடி, கழுதை புலி, முள்ளம்பன்றி, புல்புல், நரி, இந்திய புனுகு பூனை உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் காணப்படுகின்றன.