அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கு தான் எத்தனை கோடி ரசிகர்கள், நாவல் எழுதி 70 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தாலும் இன்று வரை அதன் பெருமை பேசப்பட்டு வருகிறது. காரணம், அது சோழர்களின் பொற்கால ஆட்சியுடன் தொடர்புடைய ஒரு கதைக்களம். பல திரைப்பட இயக்குனர்களும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் முதல் உலக நாயகன் கமலஹாசன் வரை பல நடிகர்களும் இந்த நாவலை திரைப்படமாக்க முயன்றனர், ஆனால் அதி வெற்றி கண்டவர் இயக்குனர் மணிரத்னம் அவர்கள். பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்தியாவின் பல பகுதிகளிலும், தாய்லாந்திலும் படமாக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக ஒரு சில காட்சிகள் புதுச்சேரியின் அரிக்கமேடு அகழ்வாராய்ச்சி தளத்தில் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்திற்கு பின்னால் எவ்வளவு பெரிய வரலாறும், பாரம்பரியமும் நிறைந்து உள்ளது என்பது நமக்கு தெரியாது, இப்போது தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

மங்காத புகழ் பெற்ற மாமன்னர் ராஜராஜ சோழன்
எத்தனையோ மன்னர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளை ஆண்டிருந்தாலும், எத்தனையோ புகழ்பெற்ற சோழ மன்னர்கள் வரலாற்றில் இடம் பெற்றிருந்தாலும் மாமன்னர் ராஜ ராஜ சோழனின் புகழ் இன்று வரை வானோங்கி நிற்கிறதே! ஒரு சிறந்த மன்னனாக இருப்பதை விட நல்ல மானிடனாக இருப்பதே சிறந்தது என்பதை கடைசி வரை வாழ்ந்து காட்டிய மகான் அல்லவா அவர்! அவரது பெருந்தன்மையை இந்த உலகிற்கு எடுத்துரைக்க தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு ஒன்று போதுமே. தஞ்சை பெரிய கோவில் திருப்பணிக்கு நன்கொடை கொடுத்தவர்கள், வேலை செய்தவர்கள் முதல் முடி திருத்திய நாவிதர், இலவசமாக மோர் வழங்கிய பாட்டியின் பெயர் வரை தஞ்சை கோவில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம்
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் 1950 இல் வெளி வந்திருந்தாலும் இன்று கூட பொன்னியின் செல்வன் நாவலை புதிதாக படித்து அதனை ரசித்து மகிழும் இளைய தலைமுறையினர் இருக்கின்றனர். என்றோ எழுதிய நாவலுக்கு இன்றளவும் ரசிகர் பெருமக்கள் பாருங்களேன். இந்த நாவலை திரைப்படமாக்க பல நடிகர்களும், இயக்குனர்களும் மிகவும் முயன்றனர். ஆனால் இயக்குனர் மணிரத்னம் அதனை சாதித்து காட்டியவர். பொன்னியின் செல்வன் திரைப்படம் மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி போன்ற இந்திய இடங்களிலும், தாய்லாந்திலும் எடுக்கப்பட்டது.

புதுச்சேரியின் அரிக்கமேடு
பண்டைத் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் பல துறைமுகங்கள் இருந்துள்ளதையும் அத்துறைமுக நகரங்களிலிருந்து கடல் வழி வாணிகம் பெரிதும் நடைபெற்றதையும் சங்க இலக்கியங்களும் அயல் நாட்டு குறிப்புகளும் தெரிவிக்கின்றன. இக்குறிப்புக்களில் குறிக்கப்படும் 'பொதுகே' என்னும் துறைமுக நகரம் இன்றைய அரிக்கமேடு என்னும் பகுதியே எனக் கண்டறியப்பட்டு அகழாய்வுகள் நடைபெற்றன. சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்து. இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடைபெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றன.
வரலாறும் பாரம்பரியமும் நிறைந்த அரிக்கமேடு
அரிக்கமேட்டுப் பகுதியில் அகழாய்வு செய்துப் பார்த்த அறிஞர்கள் அழகிய செங்கல் சுவர், ஈமத்தாழிகள், பலவண்ண மணிகள், பலவகை ஓடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இங்குக் கிடைக்கும் பல்வேறு மணிகளை ஒத்துக் கிழக்குக் கடற்கரையின் பழந்தமிழக நகரங்களிலும் மணிகள் கிடைக்கின்றன. கழிமுகப்பகுதிகளில், கிடைத்த ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. பதினொரு அடி ஆழத்தில் ஒரு மண்டை ஓடும், பூணைக்கண் மணிகளும் கிடைத்துள்ளன. மணி உருக்குச் சட்டங்கள். சாயக்கலவை படிந்த ஓடுகள், கோமேதகக் கல், பச்சைமணிக்கல், படிகமணிகள், அரைத்தான் ஓடுகள், ரோமாணிய காசு, மோதிரம், உறைகிணறுகள் ஆகியவையும் இங்கே கிடைத்தன.

இன்று நீங்கள் என்ன காணலாம்
அரிக்கமேட்டுப் பகுதியை இன்று பார்வையிடச் சென்றால் இன்று நமக்குப் பழந்தமிழக அகழாய்வுக் காட்சிகள் எதுவும் காண முடியாத படி மேட்டுப்பகுதியாக மாமரத்தோப்புகளாக மட்டுமே காட்சியளிக்கும். ஏனெனில் இங்கு ஆய்வு செய்த அறிஞர்கள் தங்கள் ஆய்வினை நிறைவு செய்த பிறகு அவற்றைப் பாதுக்காப்பாக மூடி விட்டனர். ஆனால் அரியாங்குப்பம் ஆற்றின் கரையோரம் மண்ணரிப்புகளுக்கு இடையே பழைய பானை ஓடுகள், செங்கல், கட்டடச் சுவர் அமைப்புகளின் எச்சம், சிறு சிறு மணிகள் இவற்றை இன்றும் கீழே கிடப்பதைக் காணலாம். இந்த இடம் தான் பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெரும் கொற்றவை கோவில். நீங்கள் அரிக்கமேடுவிற்கு சுலபமாக சென்ற உடனே அதனை தெரிந்து கொள்வீர்கள்.
எப்படி செல்லலாம்
புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் புதுச்சேரிக்கு தெற்கே 4 கி.மீ. தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் வலக்கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. பிரெஞ்சு காலனித்துவ நகரமான பாண்டிச்சேரியில் இருந்து அரை மணி நேர பயணத்தில் அமைந்துள்ள அரிக்கமேடு, பொதுவான தமிழ் சுற்றுலாவின் கண்கள் மற்றும் காதுகளிலிருந்து மறைந்திருக்கும் ஒரு பண்டைய ரோமானிய வர்த்தக மையமாகும். இந்த வரலாற்றுப் பொக்கிஷத்தை நீங்கள் எப்போது காணப் போகிறீர்கள்?



Click it and Unblock the Notifications





