வடகிழக்கு மாநிலங்கள் இயற்கை அன்னையால் மிகுதியாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாலும் அனைவராலும் ஏதோ ஒரு காரணத்திற்காக மற்ற மாநிலங்களுக்கு செல்வது போல் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல முடிவது இல்லை. இப்போது சுற்றுலாவை மேம்படுத்தவும், நீர்வாழ் உயிரினங்களின் வளமான பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும் அருணாச்சலப் பிரதேசத்தில் 'இந்தியாவின் முதன் முதல் ஒருங்கிணைந்த அக்வா பார்க்' அமைக்கப்படவுள்ளது.
புல்லா கிராமத்தில் இந்தியாவின் முதன்முதல் அக்வா பார்க்
அழகான அருணாச்சலின் உயரத்தில் உள்ள ஜிரோ பள்ளத்தாக்கின் புல்லா கிராமத்தில் ரூ. 100 கோடி செலவில் இந்தியாவின் முதல் 'ஒருங்கிணைந்த அக்வா பார்க்' திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. ஆம், மிக விரைவில் இந்தியாவின் முதல் மீன் அருங்காட்சியகம் அருணாச்சல பிரதேசத்தில் திறக்கப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை மீன்வளத்துறை அமைச்சர் டேஜ் டாக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் வரவிருக்கும் அக்வா பார்க்
பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நீலப் புரட்சியைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார் எனவும், அதன் கீழே இந்த ஒருங்கிணைந்த அக்வா பூங்கா செயல்படும் என அவர் மேலும் தெரிவித்தார். ரூ. 43.59 கோடி இந்த திட்டத்திற்கு முதல் தவணையாக கொடுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
பல வண்ண மீன்களின் இருப்பிடம்
இந்த அக்வா பார்க் இந்தியாவில் உள்ள அனைத்து மீன் வகைகளையும் கொண்டிருக்கும் மற்றும் மீனவர்களுக்கான பயிற்சி மையமாக செயல்படும் என்று கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் ஏற்கனவே டாரின் மீன் பண்ணை என்ற பெயரில் மீன்பிடித் திட்டம் உள்ளது. பல வண்ண மீன்களை கண்டு ரசிப்பதோடு பல விஷயங்களையும் இங்கு நாம் தெரிந்துக் கொள்ளலாம்.
பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா
மத்திய அரசின் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா ஒரு சிறந்த மீன்வள மேலாண்மை கட்டமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் சமூகப் பொருளாதார நல்வாழ்வை உறுதி செய்யும் அதே வேளையில் கண்டறியும் திறனை மேம்படுத்தவும் இது உதவியாக இருக்கும்.
இந்தியாவில் முதன்முதலாக வரவிருக்கும் அக்வா பார்க்கை பார்க்க நீங்களும் ஆவலாக உள்ளீர்கள் அல்லவா!