வரத விநாயகர் கோயில் துர்ஷேத் கிராமத்திற்கு அருகில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இது மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் 1725ம் ஆண்டு பேஷ்வா சர்தார் ராம்ஜி மஹாதேவ் வரத் வினாயக் பிவால்கர் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. சற்றே கால ஓட்டத்தால் பழமையடைந்து விட்டதால் வெளியிருந்து பார்ப்பதற்கு இது விசேஷமாக காட்சியளிக்காவிட்டாலும் உள்ளே நுழைந்து பார்த்தால் 25 அடி உயர கலச கோபுரத்தை காணலாம்.
இந்த கோயிலில் கணபதிக்கடவுளின் அவதாரமான வரத வினாயக் விக்ரகங்கள் இரண்டு உள்ளன. இவற்றில் இடப்புறம் உள்ள சிலை வெள்ளை பளிங்குக் கல்லினால் ஆனதாகவும் வலப்புறம் உள்ளது குங்குமத்தால் பூசப்பட்டும் காட்சியளிக்கின்றன. கோயிலின் வடக்குப்பகுதியில் கோமுக் எனப்படும் பசுமுக வடிவத்தை காணலாம். இதிலிருந்து புனித நீர் கொட்டுவது குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலின் மற்றுமொரு விசேஷமாக அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் நந்ததீபத்தை சொல்லலாம். இது 1892ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
பல்லாலேஷ்வர் எனும் ஒரு பிராமண பக்தரின் பெயரில் இந்த பல்லாலேஷ்வர் கோயில் 1760 ம் ஆண்டு 250 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டுள்ளது. ஒரு பக்தரின் பெயரின் எழுப்பப்பட்டுள்ள ஒரே அஷ்டவினாயக் கோயில் இதுவாகும். இது இரண்டு ஏரிகளைக்கொண்டுள்ளது. முழுக்கோயிலும் இரண்டு கருவறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
வெளிக்கருவறையில் விநாயகரின் வாகனமான மூஷிதம் கையில் கொழுக்கட்டையுடன் விநாயகர் இருக்கும் திசை நோக்கி தொழுவதைப்போன்று காட்சியளிக்கின்றது. கோயில் முழுக்க அலங்காரமான தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள விக்கிரகம் பிராமண ரூபத்தில் உடையலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு கல் பீடத்தில் அமைக்கப்பட்டு கண்கள் மற்றும் தொப்புளில் வைரக்கற்களுடன் காட்சியளிக்கின்றது.