கார்த்திகை மாதம் என்றாலே நம் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஹரிஹர சுதனான அய்யன் ஐயப்பனே! இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து, தினமும் பூஜைகள் செய்து, கடுமையான விரதமிருந்து, சபரிமலைக்கு வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு திருவிதாங்கூர் தேவசம்போர்டு பல விஷயங்களை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆன்லைன் டிக்கெட்டுகள் ஏற்கனேவே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இப்போது அன்னதானம் தொடங்கப்பட்டுள்ளது. எப்படி டிக்கெட் புக்கிங் செய்வது, டிக்கெட் இல்லாமல் எப்படி சுவாமி தரிசனம் செய்வது மற்றும் அன்னதானம் குறித்த அனைத்து தகவல்களையும் இங்கே காண்போம்.
தொடங்கிய மண்டல பூஜை
கார்த்திகை மாதம் மட்டுமே அனைத்து நாட்களிலும் நடை திறந்து இருக்கும். மீதி எல்லா மாதங்களிலும் மாதாந்திர பூஜைக்காக ஒரு சில நாட்களே நடை திறக்கப்பட்டு பூஜை முடிந்த பின்னர் சாற்றப்படும். மண்டல பூஜை மற்றும் மகர ஜோதிக்காக திறக்கப்பட்டிருக்கும் கோவிலில் தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். கார்த்திகை வருவதற்கு முன்னரே பல பக்தர்கள் மாலை போட்டு கொள்வார்கள்,சரியாக கார்த்திகை 1 அன்று அய்யனை காண வேண்டுமென்று, பெரும்பாலான பக்தர்கள் கார்த்திகை 1 அன்று மாலை போட்டு மகரஜோதியன்று அய்யனை தரிசனம் செய்வார்கள். கார்த்திகை 1ம் தேதியான நவம்பர் 17 அன்று சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தொடங்கியது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் எழுப்பிய 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்னும் கோஷம் விண்ணையும் மண்ணையும் அதிர வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
சுவாமி தரிசனம் டிக்கெட் புக்கிங்
சபரிமலை தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் முன் பதிவு செய்வது அவசியம். https://sabarimalaonline.org/#/login என்ற இணையத்தளத்தில் நீங்கள் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்கள் நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் செய்துகொள்ளலாம். இதற்காக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் எதாவது ஒன்றின் ஒரிஜினல் கையில் வைத்திருக்க வேண்டும்.
கேரளா மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நிலக்கல்லுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நிலக்கல்லில் இருந்து ஒரு நிமிடத்துக்கு ஒரு பேருந்து பம்பைக்குப் புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிலக்கல் மட்டுமின்றி திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகண்டேஷ்வரம் சிவன் கோவில், கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை மகா கணபதி ஆலயம், எட்டமானூர் மகாதேவர் ஆலயம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எருமேலி கோவில், இடுக்கி மாவட்டத்தில் குமுளி, மூழிக்கல், வண்டிபெரியார் உள்ளிட்ட 12 இடங்களில் முன்பதிவு செய்யலாம்.
கடினமான யாத்திரை
மாலை அணிந்து தீவிரமாக விரதமிருப்பதே இந்த யாத்திரை எதிர்கொள்வதற்காகத்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆம்! சபரிமலைக்கு மாலையிட்டு இருக்கும்போது அணியக்கூடாது, வெறுங்காலில் தான் நடக்க வேண்டும், குளிர்ந்த நீரில் இரு வேலையும் குளிக்க வேண்டும், வெறும் தரையில் தான் உறங்க வேண்டும், காய்கறிகள் தான் சாப்பிட வேண்டும். அனால் இவையனைத்தும் சபரிமலைக்கு செல்வதற்கான ஒரு ஒத்திகையே! கரடு முரடான பாதைகளைகே கடக்க, குளிர்ந்த பம்பையில் குளிக்க, நிலவும் கடும் குளிரை சமாளிக்க என அய்யன் உங்களை முன்கூட்டியே தயார்படுத்தி வைக்கிறார். ஆனால் இவையனைத்தும் அய்யன் ஐயப்பனை கண்ட அடுத்த நொடியே பறந்து போய்விடும். அய்யன் உங்களின் பாவங்களை எல்லாம் போக்கி இன்புற்று வாழ வைப்பார்.
தொடங்கப்பட்ட அன்னதானம்
மேற்கூறிய அனைத்தையும் நீங்கள் சமாளித்தாலும் சபரிமலையில் உணவு என்பது சற்று சிரமமாகவே இருந்துள்ளது. பல்வேறு ஐயப்ப சேவா சங்கங்களும், பக்கதர்களும், கேரள அரசும் பல்வேறு சமயங்களில் பக்தர்களுக்கு உணவளித்து வந்திருந்தாலும் ஒரு முழுமையான தீர்வு கிடைக்காமல் இருந்தது. ஆனால் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கேரள அரசு 23 கோடி ருபாய் செலவில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து உண்ணும் வசதிக் கொண்ட அன்னதான மண்டபத்தை கட்டியது. இந்த மண்டபம் 2020 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. காலை 7 மணி முதல் 11 மணி வரை உப்புமா, சுக்கு காபியும், மதியம் 12.30 முதல் 3.30 வரை அளவில்லா மதிய சாப்பாட்டுடன், காய்கறி கூட்டு, பொறியலும், மாலை 4 மணி முதல் இரவு வரை பயறு கஞ்சி வழங்கப்படுகின்றது. மிகவும் சுவையாக ஆரோக்கியமாக இருக்கும் இந்த அன்னதானத்தை பக்தர்கள் வயிறார உண்டு ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். விருப்பப்படும் பக்தர்களுக்கு உணவு பார்சலாகவும் கொடுக்கப்படுகிறது.
சென்னை to பம்பை பஸ் சர்வீஸ்
சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை - பம்பை இடையே நவம்பர் 17ஆம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்தப் பேருந்துகள் சென்னையில் இருந்து பம்பைக்கு மதியம் 3.30 மணி மற்றும் 4 மணி என இரு சமயங்களில் இயக்கப்படுகின்றன. பெரியவர்களுக்கு ரூ.1090ம், சிறியவர்களுக்கு ரூ.545ம் கட்டணமாக வசூலிக்கப்பட இருக்கிறது. இந்தப் பேருந்து சேவைகள் ஜனவரி 18ஆம் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும். http://www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதே போல் சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு தினமும் இயக்கப்படும் பேருந்தையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.