இந்தியா முழுவதும் வெப்பத்தின் தாக்கம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. ஏன் குளிர்ந்த மலைப் பிரதேசங்களிலும் கூட வெயில் சுட்டெரிக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சார்தாம் யாத்திரையுடன் தொடர்புக் கொண்ட புனிதஸ்தலங்களான கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தில் புதிதாக இன்று பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஆம்! சார் தாம் யாத்திரை மேற்கொள்ள இதுவே சரியான நேரம்! நீங்கள் ஆன்மீக சுற்றுலாவிற்காக மட்டுமின்றி இயற்கை மற்றும் சாகச ஆர்வலராகவும் இந்த அழகிய இடங்களை சுற்றிப் பார்க்கலாம்!

தேவபூமியான உத்தரகாண்ட்
அந்த கயிலாயத்தில் எம்பெருமானான சிவன் குடிக்கொண்டிருக்கிறார் என நாம் அறிவோம்! குறிப்பாக இமயமலை அருகே அமைந்துள்ள சிவன் கோவில்கள் புராணக் கதைகளுடன் தொடர்பு கொண்டுள்ளன. தேவபூமி என்றழைக்கப்படும் உத்தரகாண்ட் ஏராளமான கோயில்களைக் கொண்டுள்ளது. அவற்றில் முக்கியமான ஒன்று இந்த சார் தாம் யாத்திரை. இந்த இமயமலையில் அமைந்துள்ள யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு புனிதத் தலங்களின் சுற்றுப்பயணமாகும்.

ஆண்டிற்கு ஆறு மாதங்கள் மட்டுமே திறக்கப்படும் சார் தாம் கோவில்கள்
இந்த உயரமான அமைந்துள்ள கோவில்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும், கோடையில் (ஏப்ரல் அல்லது மே) திறக்கப்பட்டு குளிர்காலத்தின் தொடக்கத்தில் (அக்டோபர் அல்லது நவம்பர்) மூடப்படும். ஒருவர் கடிகார திசையில் சார் தாம் யாத்திரையை முடிக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. எனவே, யாத்திரை யமுனோத்ரியிலிருந்து தொடங்கி, கங்கோத்ரியை நோக்கி, கேதார்நாத் வழியாகச் சென்று, இறுதியாக பத்ரிநாத்தில் முடிவடைகிறது. பயணத்தை சாலை அல்லது விமானம் மூலம் முடிக்கலாம் (ஹெலிகாப்டர் சேவைகள் உள்ளன). சில பக்தர்கள் தோ தம் யாத்திரை அதாவது கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய இரண்டு புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். நீங்கள் அப்படியும் கூட இந்த இடங்களுக்கு செல்லலாம்.

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத்தில் பனிப்பொழிவு
இந்நிலையில் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத்தை சுற்றியுள்ள சிகரங்களில் வியாழக்கிழமை புதிய பனிப்பொழிவு ஏற்பட்டது, அதே நேரத்தில் தாழ்வான பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருவதால் சார் தாம் யாத்திரைக்கான ஏற்பாடுகள் தடைபடுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பனிப்பொழிவு, மழை மற்றும் பனிக்காற்று ஆகியவை பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் அமைந்துள்ள சாமோலி மற்றும் ருத்ரபிரயாக் மாவட்டங்களில் வெப்பநிலை சரிவை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

சார் தாம் யாத்திரைக்காக திறக்கப்படும் கோவில்கள்
கேதார்நாத் கோவில் ஏப்ரல் 25 ஆம் தேதி காலை 6 மணிக்கு திறக்கப்படவுள்ளது. பத்ரிநாத் யாத்ரீகர்களுக்காக ஏப்ரல் 27 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது, கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்கள் ஏப்ரல் 22 ஆம் தேதி திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சார் தாம் யாத்திரை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், கோயில்களுக்கு செல்லும் வழியில் பனி மூட்டம் அதிகரித்து வருவது அதிகாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

யாத்திரைக்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை
நீங்கள் ஒரு வயதான தம்பதியாகவோ அல்லது உங்கள் பெற்றோரை சார் தாம் யாத்திரைக்கு அழைத்துச் சென்றாலோ கீழ்க்கண்ட குறிப்புகளை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
1. யாத்திரைக்கு கிளம்புவதற்கு முன் மருத்துவரிடம் ஒரு தீவிர பரிசோதனை செய்துக் கொள்ளவும்.
2. மனதளவில் அவர்களை தயார்படுத்துவது மிகவும் அவசியம்.
3. அவர்களுக்கு தேவையான கம்பளி ஆடைகளை, கடினமான காலனி அல்லது ஷூ எடுத்துச் செல்லவும்.
4. பேண்டேஜ், கத்தரிக்கோல், டேப், மாத்திரைகள் அடங்கிய முதலுதவி கிட்டை எடுத்துச் செல்லவும்.
5. முக்கியமாக ஊன்றி நடப்பதற்கு கோலை எடுத்துக் கொள்ளவும்.
6. நடப்பதற்கு ஏதுவாக இருக்கக்கூடிய சட்டை, பைஜாமாக்களை அணியவும்.
7. டார்ச் லைட், பேட்டரி, பவர் பேங்க் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
8. அவர்களின் நிலை அறிந்து அவ்வப்போது சிறு சிறு இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள்.
9. முக்கியமாக அவர்களை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications





