பெங்களூருவிலிருந்து கெலவரப்பள்ளி அணை 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது பெங்களூருவின் இளைஞர்கள் பொழுது போக்க செல்லும் இடங்களில் ஒன்றாகும். வித்தியாசமான இடங்களுக்கு செல்ல ஆசைப்படும் இளைஞர்கள் தங்கள் நண்பர்கள் அல்லது காதலியுடன் இந்த இடத்துக்கு சுற்றுலா செல்கிறார்கள். பைக் ரைடிங்க் செல்வது யாருக்குதான் பிடிக்காது சொல்லுங்கள். நள்ளிரவு அல்லது அதிகாலை நேரம்தான் லாங்க் டிரைவ் போக சரியானதாக இருக்கும். எனினும் உங்கள் விருப்பப்படி, உங்களுக்கு வசதியான நேரத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
வாருங்கள் பயணத்தை திட்டமிடலாம்.
எப்போது செல்லலாம்
நள்ளிரவு தாண்டி அதிகாலைக்கு முன் இதுபோன்ற லாங்க் டிரைவ் செல்வது நன்றாக இருக்கும். அதிக வேகம் ஆபத்தானது என்பதை மனதிற்கொண்டு லாங்க் ரைடுக்கு தயாராகுங்கள்.
பெங்களூரு எப்போதும் குளிராகவே இருக்கும். அது மழைக்காலம் என்றாலும் குளிர்காலம் என்றாலும். அதே நேரத்தில் மழை பெய்து கொண்டிருக்கும்போது இந்த பயணம் மிகவும் ஆபத்தானது என்பதையும் மனதிற்கொள்ளுங்கள்.
கவனத்தில் கொள்ளவேண்டியவை
முக்கியமாக வண்டி ஓட்டுபவர்களும் பின்னாடி அமர்ந்திருப்பவர்களும் நிச்சயமாக தலைக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பெயருக்கு ஒரு ஹெல்மெட் வாங்கி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து தரமான நல்ல நிறுவனங்களின் ஹெல்மெட்டுகளை பயன்படுத்துங்கள்.
வெறும் வயிற்றில் நீண்ட பயணம் உங்களுக்கு சிக்கலை உண்டாக்கலாம். அதனால் கொஞ்சம் வேண்டுமளவு உண்டு செல்வது அறிவுரைக்கதக்கது.
எங்கே உள்ளது
கெலவரப்பள்ளி அணை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் எல்லைகள் சந்திக்கும் இடத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இது மிகவும் பரவலாக அறியப்பட்ட சுற்றுலாத் தளமாகும்.
பெங்களூருவிலிருந்து 45 முதல் 50 கிமீ தெற்கு திசையில் அமைந்துள்ளது இந்த அணை. இது கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட இடமாகும். பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை என்பது குறிப்பிடத் தக்கது.
இரண்டு வழித்தடங்கள்
பெங்களூருவிலிருந்து இரண்டு வழித்தடங்கள் இருக்கின்றன. அவை இரண்டும் அரை மணி நேர பயண வித்தியாச த்தைக் கொண்டுள்ளன.
முதல் வழித்தடம் 50 கிமீ தூரம் வரை பயணிக்கும் வகையிலும்,
இரண்டாவது வழித்தடம் 48 கிமீ தூரம் பயணிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
எவை அந்த வழித்தடங்கள்
வழித்தடம் 1 - சார்ஜாபூர் மற்றும் பாகலூர் வழியாக
வழித்தடம் 2 - சென்னை நெடுஞ்சாலை - மடிவாலா, சில்க்போர்டு, எலக்ட்ரானிக் சிட்டி, ஓசூர் வழியாக
பயண வழிகாட்டி
முதல் வழித்தடத்தில் பயணிப்போம்
லாங்க்போர்டு வழியாக கோரமங்கலாவை அடைந்து அங்கிருந்து சார்ஜாபூர், பாகலூர் வழியாக கெலவரப்பள்ளியை அடைவதற்கு மொத்தம் 2 மணி நேரம் ஆகின்றது. இது 54 கிமீ தொலைவாகும்.
இதில் சார்ஜாபூர் கர்நாடக மாநிலத்தின் எல்லையிலும், பாகலூர் தமிழகத்தின் எல்லையிலும் அமைந்துள்ள பகுதிகள் ஆகும்.
இரண்டாவது வழித்தடத்தில் பயணிப்போம்
இரண்டாவது வழித்தடத்தில் பயணிப்பது என்பது மொத்தம் 50 கிமீ தொலைவு ஆகும். ஆனால் இது கொஞ்சம் சொகுசான வழித்தடம். நள்ளிரவு நெருங்கியதும் இந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும்போது பயணித்தால் அந்த அனுபவமே தனி.
சில்க்போர்டு, எலக்ட்ரானிக் சிட்டி வழியாக ஓசூரை அடைந்து அங்கிருந்து கெலவரப்பள்ளி அணையை காணமுடியும். 1.30 மணி நேரத்தில் இந்த இடத்தை எளிதாக அடைய முடியும்.
கெலவரப்பள்ளி அணையைப் பற்றி
இந்த அணைக்கு ஒரு நுழைவு வாயில் உள்ளது. ஒரு பக்கம் பெரிய ஏரி ஒன்று அமைந்துள்ளது. மேலும் மற்றொரு பக்கம் ஒரு பூங்கா அமைந்துள்ளது.
கெலவரப்பள்ளி அணை, தமிழகத்தில் உள்ள பொன்னையார் நதியின் மீது கட்டப்பட்டு இருக்கின்றது, இது 13.50 மீட்டர்கள் உயரத்திற்கு எழுப்பப்பட்டு, 480 கன அடி கொள்ளளவை கொண்டுள்ளது. கூடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற மாவட்டங்களுக்கு இந்த அணை நீர் பயன்பட்டு வருகிறது.
அனைத்து வயதினருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு
கெலவரப்பள்ளியை நோக்கி செல்லும் போது பெங்களூர் பாதையில் இருந்து பிரிந்து செல்லும் பாதையில் ஓசூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இந்த அணை அமைந்திருக்கிறது. ஓசூரில் குடியிருப்பவர்களுக்கும், வார விடுமுறைக்கு ஓசூருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இது விருப்பமான சுற்றுலா தலம் ஆகும். கெலவரப்பள்ளி அணையில குழந்தைகள் பூங்காவை தவிர அனைத்து வயதினருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய காணப்படுகின்றன.
பறவைகளைக் காண்பது சிறப்பு
அதோடு சுற்றுலாப் பயணிகளுக்கு நகர வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து விடுதலை அளித்து புத்துணர்வூட்டும் ஸ்தலமாக கெலவரப்பள்ளி அணை விளங்குகிறது. இங்கு காணப்படும் பிலிக்கன் மற்றும் ஸ்பூன்பில் போன்ற புலம்பெயர் பறவைகள் நம் கண்களுக்கு விருந்து அளிக்கின்றன. மேலும் உள்ளூர் கலாச்சாரத்தை குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் உடையவர்கள் நீர்த்தேக்கத்தின் அருகே இருக்கும் சென்னத்தூருக்கு சென்று பார்வையிடலாம்.