உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் பஸ்தி நகரம் வரலாற்றுக்காலத்தில் பல்வேறு ராஜவம்சங்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. எனவே செழுமையான ஒரு கலாச்சார பின்னணியை இந்த நகரம் கொண்டுள்ளது. மூங்கில் காடுகளாகவும் மாந்தோப்புகளாகவும் காணப்பட்ட இப்பிரதேசத்தில் 1865ம் ஆண்டில் இந்த நகரம் உருவானது. இன்றும் பஸ்தி நகரத்தை சுற்றிலும் செழிப்பான தாவர வளம் நிறைந்திருப்பதால் ஒரு அமைதி நகரமாக இது காட்சியளிக்கிறது
சுற்றுலாத் தளங்கள்
சண்டோ தால் எனும் பிரசித்தமான பிக்னிக் ஸ்தலத்தை இந்த பஸ்தி நகரம் கொண்டுள்ளது. இது தவிர பரா எனும் எழிற்கிராமம் ஒன்று இந்த பஸ்திக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. இந்த சிறிய கிராமம் புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கு சிவபெருமானுக்கான ஒரு புராதன கோயிலும் அமைந்துள்ளது.
குவானா ஆற்றின் கரையில் அமைந்துள்ள பாடேஷ்வர்நாத் கோயிலும் அதிக அளவில் பயணிகளை ஈர்க்கும் அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. மேலும், இந்நகரத்தில் உள்ள ராஷ்டிரிய வன் சேத்னா கேந்த்ரா மற்றும் தாவரவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமும் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய ஒன்றாகும்.
நினைவுப்பொருட்களை வாங்கவும் ஷாப்பிங் செய்யவும் இங்குள்ள பக்கே பஜார் ஏற்றதாக உள்ளது. இங்கு உள்ளூர் கைவினைப்பொருட்கள் மற்றும் துணிவகைகள் வாங்கலாம்.
போக்குவரத்து வசதிகள்
விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் ஆகிய மூவழி போக்குவரத்து அம்சங்கள் மூலமும் எளிதாக இந்த நகரத்தை அடையலாம்.
நவம்பர் முதல் மார்ச் வரையிலான பருவம் இங்கு விஜயம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.
பாரா கோயில்
பாரா கோயில் அல்லது பாரா சத்தர் என்று அழைக்கப்படும் இந்த கோயில் பாரா எனும் கிராமத்தில் உள்ளது. பஸ்தி நகரத்திலிருந்து 15கி.மீ தூரத்தில் குவானா ஆற்றின் கரையில் இந்த கிராமம் அமைந்துள்ளது. முற்காலத்தில் வியாக்ரபுரி என்ற பெயரில் இப்பகுதி அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. புராணங்களில் இந்த கிராமமும் இங்குள்ள கோயிலும் மிக உயர்வாக சொல்லப்பட்டிருக்கின்றன. சிவ பெருமானுக்கான இந்த கோயிலில் ஒரு சிவ லிங்கத்தை தரிசிக்கலாம். சிவராத்திரி மற்றும் இதர முக்கியமான திருவிழாக்காலங்களில் இக்கோயிலுக்கு ஏராளமான சிவ பதர்கள் வருகை தருகின்றனர்.
பாடெஷ்வர் நாத்
பாடெஷ்வர் நாத் என்பது ஒரு சிறிய கிராமமாகும். இது பஸ்தி நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் பெரும்பாலும் பிராம்மணர்கள் மற்றும் கோஸ்வாமி இனத்தார் வசிக்கின்றனர். மக்கள் தொகையும் 500 என்ற அளவில் மிக குறைந்த எண்ணிக்கையை கொண்டுள்ளது. இருப்பினும் இங்கு பாடெஷ்வர் நாத் எனும் முக்கியமான கோயில் அமைந்திருப்பதால் இது ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுவிட்டது. பாடெஷ்வர் நாத் கோயில் ஒரு சிவன் கோயிலாகும். இது தீவிர சிவபக்தனாக விளங்கிய ராவணனால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.