வார இறுதி நெருங்கிவிட்டது! நாட்டின் பல பகுதிகளிலும் பருவமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் எங்காவது வெளியே சென்று வந்தால் இறுக்கம் சற்று குறையும் என்று நினைக்குறீர்களா? நீங்கள் ஒருவேளை சிக்மகளூரிலோ அல்லது பெங்களூருவிலோ இருந்தால், இந்த இடம் உங்களுக்கு ஒரு சரியான தேர்வாக அமையும்.
அங்கே செல்வது சற்று சிரமமாகத் தான் இருக்கும். ஆனால் நீங்கள் நிச்சயம் அந்த இடத்திற்கு சென்றதும் 'பரவாயில்லை, இந்த சோலைக்கு வருவதற்கு இன்னும் கூட கொஞ்சம் கஷ்டபட்டாலும் தவறில்லை ' என்று நினைப்பீர்கள். ஆம! நான் குறிப்பிடுவது அனைத்தும் கர்நாடாகாவில் மறைந்து கிடைக்கும் இயற்கை பொக்கிஷங்களில் ஒன்றான 'எர்மாய் நீர்வீழ்ச்சியைப்' பற்றித்தான்! அதனைப் பற்றிய மேலும் சில தகவல்கள் இதோ!

எர்மாய் நீர்வீழ்ச்சி எங்கே இருக்கிறது?
தட்சிண கன்னடத்தில், மேற்கு தொடர்ச்சி மலையின் பல்லாலராய துர்கா மலைத்தொடரின் அடிவாரத்தில் இந்த அழகிய எர்மாய் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கர்நாடகாவில் அதிக பிரபலம் இல்லாத இந்த நீர்வீழ்ச்சி, மறைந்து கிடக்கும் ஒரு இயற்கை ரத்தினம் என்றே சொல்ல வேண்டும்.
இது 75 அடி உயரத்தில் இருந்து பாறை நிலப்பரப்பில் கீழே சரியும் பல அடுக்கு நீர்வீழ்ச்சியாகும். இது சுற்றுலாப் பயணிகள் நீந்தி மகிழவும், குளித்து விளையாடவும் இயற்கையாகவே ஒரு 5 அடி ஆழமுள்ள குளத்தை உருவாக்குகிறது.
ஆண்டுதோறும் அழகாக விழுகின்ற இந்த நீர்வீழ்ச்சி பருவ காலத்தில் அதீத அழகு பெறுகிறது எனலாம். பருவமழை சமயத்தில் நீர் வரத்து அதிகமாகி பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது என்பதே உண்மை.

எர்மாய் நீர்வீழ்ச்சி ட்ரெக்கிங்
நீங்கள் ஒரு சாகசப் பிரியர் என்றால் எர்மாய் நீர்வீழ்ச்சிக்கு ட்ரெக்கிங் மூலம் செல்லுங்கள். நீர்வீழ்ச்சி பிரதான சாலையில் அமைந்துள்ள கஜூர் தர்காவிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நடைபயணம் செய்து மலை அடிவாரத்தை அடைந்திடுங்கள்.
அங்கிருந்து யாராக இருந்தாலும் 1.5 கிமீ நடந்தால் தான் நீர்வீழ்ச்சியை அடைய முடியும். அடர்ந்த காடுகளுக்கு நடுவே, ஆங்காங்கே ஓடைகளைக் கடந்து கடைசியில் நீங்கள் எர்மாய் நீர்வீழ்ச்சியை அடைவீர்கள். அதைக் கண்ட மாத்திரத்திலேயே அதன் அழகில் நீங்கள் மயங்கி போவது உறுதி. இந்த மொத்த ட்ரெக்கிங் கிற்கும் ஆகிற நேரம் வெறும் 3௦ நிமிடங்களே!
நீர்வீழ்ச்சியை சுற்றி காட்டு யானைகளை அடிக்கடி பார்ப்பதாக உள்ளூர் மக்கள் சொல்வதால் இங்கே முகாமிட முடியாது.
அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால் அபாயம் அதிகம், ஆதலால் உள்ளூர்வாசிகள் அல்லது அனுபவம் வாய்ந்த மலையேறுபவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் ஏற வேண்டாம்.

வெவ்வேறு ஊர்களில் இருந்து எவ்வாறு எர்மாய் நீர்வீழ்ச்சியை அடைவது?
எர்மாய் நீர்வீழ்ச்சி திடுப்பேவிலிருந்து 5 கிமீ தொலைவிலும், உஜிரிலிருந்து 18 கிமீ தொலைவிலும், சார்மாடியிலிருந்து 19 கிமீ தொலைவிலும், சிக்மகளூரிலிருந்து 89 கிமீ தொலைவிலும், பெங்களூருவிலிருந்து 3௦௦ கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
உஜிரே நகரத்திலிருந்து எர்மாய் 40 நிமிட பயணத்தில் உள்ளது, அடிக்கடி பேருந்து சேவைகள் இல்லை என்பதால் உஜிரிலிருந்து ஜீப்பை வாடகைக்கு எடுப்பது சிறந்த வழியாகும்.
நீங்கள் சொந்த வாகனத்தில் திட்டமிடுகிறீர்கள் என்றால், சாலைகள் சரிவர இல்லாத காரணத்தினால் சற்று கூடுதல் கவனத்தோடு இருப்பது அவசியம்.
வழிகாட்டுவதற்கு சைன்போர்டுகள் இல்லை, சில நேரங்களில் கூகுள் மேப் கூட சரியாக வழி காட்டுவது இல்லை. எனவே, உள்ளூர்வாசிகளிடம் துல்லியமான வழியைக் கேட்பது நல்லது.
அனைத்து தகவல்களும் போதுமானதாக இருந்ததா? இந்த வாரமே குடும்பம் அல்லது நண்பர்களுடன் எர்மாய் நீர்வீழ்ச்சிக்குச் சென்று ஆசுவாசப்படுத்தி விட்டு வாருங்கள்!



Click it and Unblock the Notifications




