தமிழ்நாட்டில் வெப்பம் தணிந்து பருவமழை லேசாக தொடங்கிவிட்டது, எப்பொழுதுமே வெயிலாக இருக்கக்கூடிய இடங்கள் கூட சற்று குளிரோடு நம்மை வரவேற்கின்றன. வெயிலுக்கு பயந்து நாம் தவிர்த்து வந்த பல அழகான சுற்றுலாத் தலங்களை காண இதுவே சரியான நேரம்! பல கோட்டைகளையும், கோவில்களையும், புராதான சுற்றுலாத் தலங்களையும், கடற்கரைகளையும் எந்த வித தடையுமின்றி நீங்கள் இப்போது சுற்றிப் பார்க்கலாம்!

தஞ்சாவூர்
உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் மார் தட்டி பெருமை பேசும் அளவிற்கு நம்மை உலகறிய வைத்த மாமன்னர் ராஜராஜ சோழனின் சொந்த ஊர் இது. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெருவுடையார் கோவில் முதல், கங்கை கொண்ட சோழபுரம், விஜயநகர் கோட்டை, ராஜராஜ சோழனின் நினைவு மண்டபம் உள்ளிட்ட எண்ணற்ற வரலாற்று சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது. அது மட்டுமின்றி, தஞ்சை ஓவியங்கள், பழம்பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் புடவைகள், அதன் கர்நாடக இசை மற்றும் இசைக்கருவிகள் ஆகியவையும் இங்கு மிகவும் பேமஸ்.
சென்னை
வங்காள விரிகுடாவின் கோரமண்டல் கடற்கரையில் அமைந்துள்ள சென்னை நவீன நகரமாக தோன்றினாலும் தன்னுள் பல வரலாறுகளைக் கொண்டுள்ளது. வள்ளுவர் கோட்டம், மெரீனா பீச், தலைவர்கள் சமாதி, பல பாரம்பரிய கோவில்கள், பிரமிக்க வைக்கும் மால்கள், தியேட்டர்கள், கேளிக்கை பூங்காக்கள், மலிவு விலையில் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஷாப்பிங், ருசிகர உணவுகள் என சென்னையில் இல்லாதது ஒன்றும் இல்லை.

ராமநாதபுரம்
தமிழ்நாட்டின் மனதைக் கவரும் மாவட்டமான ராமநாதபுரம், ராமர் இலங்கைக்கு தனது பயணத்தைத் தொடங்கிய இடமாக நம்பப்படுகிறது. ராமேஸ்வரம், தேவிபட்டினம், திருப்புல்லாணி மற்றும் உத்திரகோசமங்கை என ராமநாதபுரத்தில் புராதன கோவில்கள் ஏராளம் உள்ளன. பாம்பன் பாலம், ராமநாதபுரம் அரண்மனை, APJ ஐயாவின் நினைவு மண்டபம், இயற்கை எழில் கொஞ்சும் குருசடை தீவு, மன்னார் வளைகுடா என ராமநாதபுரம் உங்களுக்கு ஒரு தனித்துவமான சுற்றுலாவை வழங்குகிறது.
கன்னியாகுமரி
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி வரலாறு, கலாச்சாரம், இயற்கை அழகு மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றின் அற்புதமான கலவையைக் கொண்டுள்ளது. கோட்டைகள் மற்றும் கோயில்கள் முதல் கடற்கரைகள் மற்றும் அருங்காட்சியகங்கள் வரை அனைவருக்கும் ஏதாவது இருக்கிறது. ஒரே இடத்தில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம், அதன் கோயில்கள் மற்றும் விவேகானந்தர் பாறை நினைவகம், திருவள்ளுவர் சிலை, திற்பரப்பு அருவி, குற்றாலம் அருவி, ஒலக்கருவி அருவி ஆகியவை கன்னியாகுமரியில் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

மதுரை
தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரமான மதுரை தூங்கா நகரமாக சுற்றுலாப் பயணிகளை வரவேற்கிறது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், கள்ளழகர் கோவில், கூடல் அழகர் கோவில் என எண்ணற்ற வரலாற்று சுற்றுலாத் தலங்கள் இங்கு உள்ளன. பரபரப்பான பஜார் மற்றும் அருமையான தெரு உணவுகளுடன், மதுரையில் பாரம்பரிய நடைப்பயணங்கள் நாள் முழுவதும் நடத்தப்படுகின்றன. மதுரை சென்றால் கட்டாயம் மதுரை பேமஸ் உணவுகளை சுவைக்க மறக்காதீர்கள்.
திருவாரூர்
கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர் மற்றும் சியாமா சாஸ்திரிகளின் பிறப்பிடமான திருவாரூர், தமிழ்நாட்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தேர் கொண்ட தியாகராஜர் கோவில், திருவையாறு, பண்டைய கட்டிடங்கள் உங்களுக்கு ஒரு வித அமைதியை வழங்கும். கோவில், தேர், கலைக்கூடம் மற்றும் கமலயன் குளம் தவிர ஊரில் பார்க்க அதிகம் இல்லாவிட்டாலும், அமைதியான சூழலுக்கு மத்தியில் நீங்கள் இன்னும் இனிமையான விடுமுறையை அனுபவிக்கலாம்.

காஞ்சிபுரம்
ஆயிரம் கோவில்களின் நகரமான காஞ்சிபுரம் குடும்பங்கள் மற்றும் யாத்ரீகர்களால் அதிகம் பார்வையிடப்படும் ஒரு நகரமாகும். இந்த நகரம், உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளால் பார்வையிடப்பட்டு, அதன் மத மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்கள் மூலம் கடந்த காலத்தின் கதைகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும். காஞ்சி காமாட்சி கோவில், வரதராஜர் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில் என எண்ணற்ற கோவில்களுக்கு சென்று விட்டு, காஞ்சி பேமஸ் பட்டு புடவைகளை வாங்கிக் கொண்டு, ருசியாக சாப்பிட்டு வீடு திரும்பும் வாய்ப்பை இந்த நகரம் நமக்கு வழங்குகிறது.
மேலே கூறப்பட்டுள்ள இந்த இடங்களுக்கு வெயில் காலத்தில் செல்வதை விட இந்த நேரத்தில் செல்வதே சிறந்தது!



Click it and Unblock the Notifications





