சென்னைக்கு உள்ளேயே சுற்றி சுற்றி போர் அடித்து விட்டதா? எங்கே திரும்பினாலும் பீச், மால் என பார்த்த இடமாக இருக்கிறதே, எங்காவது புதிதாக ஒரு இடத்திற்கு சென்று வரலாம் என்று நினைத்தால், எதுவும் தோணவில்லையே என்று யோசிக்கிறீர்களா? கவலையே வேண்டாம்! சூப்பர் ஐடியா நாங்கள் தருகிறோம். சென்னையிலிருந்து அரை நாள் மற்றும் ஒரு நாளில் சுற்றிப் பார்க்கக்கூடிய சூப்பர் சுற்றுலாத் தலங்கள் ஏராளம் உள்ளன. காலையில் சென்னையிலிருந்து கிளம்பி, இந்த இடங்களில் ஏதேனும் ஒன்றுக்கு சென்று விட்டு மாலை/இரவில் சென்னைக்கே வந்து விடலாம். நீங்கள் செல்ல வேண்டிய சூப்பர் ஸ்பாட்டுகளின் லிஸ்ட் இதோ!

புலிகாட்
சென்னையிலிருந்து சுமார் 1 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள இந்த புலிகாட் மிக அழகான ஒரு சிறிய கடற்கரையாகும். ஸ்ரீஹரிகோட்டா தீவில் அமைந்துள்ள இந்த புலிகாட் இயற்கை அழகு, வரலாறு மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றின் கலவையை உங்களுக்கு பிரதிபலிக்கிறது. இங்கு மிகவும் விரும்பப்படும் இடங்கள் புலிகாட் ஏரி மற்றும் புலிகாட் பறவைகள் சரணாலயம் ஆகும், இது உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பறவைகளை ஈர்க்கிறது. மேலும் கடற்கரை, டச்சு கல்லறை, கோட்டை, காலனித்துவ கால தேவாலயங்கள், வெதுருப்பட்டு மற்றும் நெலப்பட்டு ஆகியவை இங்கு நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். சென்னையிலிருந்து 55 கிமீ தொலைவில் அமைந்துள்ள புலிகாட்டை அவுட்டர் ரிங் ரோட் வழியாகவும், இ.சி.ஆர் வழியாகவும் அணுகலாம்.
காஞ்சிபுரம்
ஆயிரம் கோவில்களின் தங்க நகரம் என்று அன்புடன் அழைக்கப்படும் காஞ்சிபுரத்திற்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்களை சுற்றிப் பார்ப்பதற்கு இரண்டு நாட்கள் அல்ல, இரண்டு மாதங்கள் கூட பத்தாது. புகழ்பெற்ற அத்திவரதர் வீற்றிருக்கும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில், பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி கோவில், பஞ்சபூத காற்று ஸ்தலமான ஏகாம்பரேஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களுக்கு சென்று ஆசி பெற்று வாருங்கள். அங்கு கிடைக்கும் காஞ்சி பட்டுப்புடவைகளை உங்கள் துணைக்கு வாங்கி கொடுத்து மகிழுங்கள்.

நாகலாபுரம் மலைகள்
சென்னையில் இருந்து வெறும் 90 கிமீ தொலைவில் அமைந்துள்ள நாகலாபுரம் பல நீர்வீழ்ச்சிகளுடன், கண்கவர் இயற்கை சூழலால் நம் மனதை மயக்குகிறது. நாகலாபுரத்திற்கு உங்கள் சொந்த வாகனங்களில் செல்வதே சிறந்தது. செக் போஸ்டை ஒட்டியிருக்கும் பார்க்கிங்கில் உங்களது கார் அல்லது பைக்கை பார்க் செய்துவிட்டு. அங்கிருந்து நடக்க ஆரம்பிக்கலாம். 5 அருவிகள் கொண்ட நாகலாபுரம் நீர்வீழ்ச்சிகள் ஒவ்வொன்றை அடைவதற்கும் குறைந்தபட்சம் 20 முதல் 25 நிமிடங்கள் ஆகிறது. நீங்கள் ஒரு செட் மாற்றுத்துணி, வழுக்காத செருப்பு, டவல், பிஸ்கட், சாக்லேட், தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டி எடுத்து செல்வது அவசியம். ஏனெனில் அங்கு எதுவும் கிடைக்காது.
மாமண்டூர் காடுகள்
சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகிய இடமா என்று இந்த இடம் நம்மை வியக்க வைக்கிறது. எங்கு பார்த்தாலும் பசுமை, அடர்ந்த வனாந்திரம், பச்சை நிற அழகிய தெளிவான நீர், கூழாங்கற்கள் பாதை என இந்த இடம் பார்ப்பதற்க்கு ஏதோ நாம் அந்தமானில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தருகிறது. ஆனால் இந்த இடம் சென்னையில் இருந்து வெறும் 3 மணி நேர பயண தூரத்தில் சென்னை - கடப்பா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து ஒரு நாள் ட்ரிப் அல்லது பிக்னிக் செல்ல இது சரியான சாய்ஸ் ஆகும்.

தடா நீர்வீழ்ச்சி
சென்னையின் பிஸியான வாழ்வில் இருந்து ஒரு நாள் ரெஸ்ட் எடுக்க ஒரு அற்புதமான ஸ்பாட் இது. பச்சை பசேல் சூழலில, ஜில்லுனு விழுற அருவி தண்ணியில குளிச்சி ஆட்டம் போட ஒரு சூப்பர் ஸ்பாட்டா இருக்கிற இடம் தான் இந்த தடா நீர்வீழ்ச்சி! சென்னையில் இருந்து 95 கிமீ தொலைவில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி ஒரு அடர்ந்த காட்டில் அமைந்துள்ளதால் இங்கு ட்ரெக்கிங் செய்வது மிகவும் பேமஸ். மொத்த மலையேற்றம் கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் ஆகும், வழியில் பல குளங்கள், சுற்றிலும் நல்ல பசுமை போர்வையுடன் அந்த காட்சிகள் யாவும் மனதிற்கு ஒரு வித இதமான உணர்வை தரும்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
சென்னையிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். உலகின் மிகப்பழமையான பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாக 1798-ஆம் ஆண்டிலிருந்து பறவைகளின் வாழ்விடமாகவும், புகலிடமாகவும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திகழ்ந்து வருகிறது. 250 ஆண்டு காலமாக வேடந்தாங்கல் கிராம மக்கள் பறவைகளை தங்கள் குழந்தையை பாதுக்கப்பது போல பாதுகாத்து வருகிறார்கள். நீங்கள் குழப்பமாக இருந்தால் இந்த இடத்திற்கு சென்று வாருங்க, நிச்சயம் தெளிவு கிடைக்கும்.

புதுச்சேரி
சென்னையிலிருந்து அதிகப்படியான இளைஞர்கள் செல்லும் வார இறுதி சுற்றுலாத் தலம் இந்த புதுச்சேரி நகரம் தான்! புதுவையில் உள்ள இந்திய மற்றும் பிரெஞ்சு கலாச்சாரத்தின் வசீகரிக்கும் கலவையானது ஆண்டு முழுவதும் எல்லையற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. புதுவைக் கடற்கரை, பிரஞ்சு பாணி வீடுகள், துடிப்பான கஃபேக்கள், அமைதியான சூழல், பல்வேறு தேவாலயங்கள், கோவில்கள், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் என புதுவையில் பொழுதைக் கழிக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. சென்னையிலிருந்து 13 கிமீ அமைந்துள்ள இந்த நகரத்தை 2 அல்லது 3 மணி நேர பயண தூரத்தில் அடைந்து விடலாம். புதுவைக்கு செல்ல இரண்டு சாலை வழிகள் உள்ளன, ஒன்று பைபாஸ் மற்றொன்று இ.சி.ஆர் ஆகும்.



Click it and Unblock the Notifications



