ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்துக்கு வடகிழக்கே 309 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சிறிய நகரமான பத்ராச்சலம், கம்மம் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றங்கரையோரம் எழிலே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த சிறிய நகரத்தில் ஸ்ரீ இராம பிரான் சிறிது காலம் வாழ்ந்ததாக சொல்லப்படுவதால் பத்ராச்சலம் நகரம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம்.
Cover PC: Vivek rachuri
இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் கூடும் புகழ்பெற்ற யாத்ரீக ஸ்தலமாக பத்ராச்சலம் நகரம் திகழ்ந்து வருகிறது. பத்ராச்சலம் நகரத்தின் பெயர் 'பத்ரகிரி' என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். அதாவது புராண கூற்றின் படி, மேரு மற்றும் மேனகாவுக்கு வரம் வாங்கி பிறந்த குழந்தையே பத்ரா என்று சொல்லப்படுகிறது. இன்று அயோத்திக்கு பிறகு இராம பிரானின் பக்தர்கள் மிகவும் முக்கியமாக கருதுவது இந்த பத்ராச்சலம் நகரைத்தான்.
சுற்றுலா அம்சங்கள்
பத்ராச்சலம் நகரில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக கூடும் இடங்களாக ஜடாயு பக்க, பர்ணசாலா, தும்முகுடேம், குண்டாலா ஆகிய பகுதிகள் அறியப்படுகின்றன. இந்த நகரத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களான ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோயில் மற்றும் பத்ராச்சல இராமர் கோயில் ஆகிய இரண்டு கோயில்களுக்கும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
மேலும் பத்ராச்சலம் நகரை ரயில் மற்றும் சாலை மார்க்கங்களில் அடைவது மிகவும் எளிதான காரியம். அதோடு எண்ணற்ற புராண கதைகளை சுமந்து கொண்டிருக்கும் பத்ராச்சலம் நகருக்கு அதன் இதமான வெப்பநிலை காரணமாக எந்த காலங்களிலும் நீங்கள் சுற்றுலா வரலாம்.