சத்திஸ்ஹர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் இந்த பிரசித்தமான 'பிலாய்' நகரம் அமைந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரமான ராய்பூரிலிருந்து 25 கி.மீ தூரத்தில், NH6 தேசிய நெடுஞ்சாலையில் இந்த நகரம் அமைந்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தி ஆலையான 'பிலாய் இரும்பு ஆலை' இங்குதான் இயங்குகிறது. இந்தியாவிலேயே ரயில் தண்டவாளங்கள் தயாரிக்கப்படும் ஒரே இடம் எனும் பெருமையையும் இந்நகரம் பெற்றிருக்கிறது.
எப்படி செல்வது?
மஹராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து 250 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பிலாய் நகரம். இது சத்திஸ்ஹர் மாநிலத் தலைநகரிலிருந்து மிகவும் அருகில் அமைந்துள்ளது. பிலாய் நகரம் சாலைப்போக்குவரத்து வசதி மற்றும் ரயில், விமான சேவைகளால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது.
பயண வசதிகள்
அருகிலுள்ள பகுதிகளிலிருந்து பேருந்து வசதிகளும், ரயில் வசதிகளும் இருக்கின்றன. முக்கியமாக ஹைதரபாத் மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களிலிருந்து எளிமையாக சென்றடைய முடியும்.
கலாச்சாரம் மற்றும் திருவிழாக்கள்!
தீபாவளி, ஹோலி, துர்க்கா பூஜா, ஈத் போன்ற எல்லா திருவிழாக்களும் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இங்கு சீக்கிய மக்கள் அதிகம் வசிப்பதால் பைசாகி, குருபிரபா போன்ற பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படுகின்றன. இந்தியாவின் அனைத்து மாநில, அனைத்து மதப்பிரிவு மக்களும் இங்கு வசிப்பதால் இதற்கு 'மினி இந்தியா' என்ற பெயரும் உண்டு.
பிலாய் சுற்றுலா அம்சங்கள்
பிலாய் நகரத்திலுள்ள முக்கிய சுற்றுலா அம்சங்களாக மைத்ரி பாக், சிவிக் சென்டர், காளிபாரி போன்றவை அமைந்திருக்கின்றன. இவற்றில் மைத்ரி பாக் என்பது ஒரு விலங்குக்காட்சி சாலையாகும். பார்வையாளர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கு வருகை தருகின்றனர்.
பல்வேறு சிறிய கோயில் வளாகங்களும் இந்நகரத்தில் காணப்படுகின்றன. பிலாய் பருவநிலை பிலாய் நகரம் கோடைக்காலத்தில் கடும் வெப்பத்துடனும் குளிர்காலத்தில் இனிமையான சூழலுடனும் காணப்படுகிறது.
மைத்ரி பாக்
மைத்ரி பாக் எனும் இந்த விலங்குக்காட்சி சாலை மற்றும் பூங்கா வளாகமானது பிலாய் இரும்பு ஆலை நிர்வாகத்தின் மூலம் இரண்டு செயற்கை குளங்களுக்கு அருகே துவங்கப்பட்டுள்ளது.
மைத்ரி பாக் வளாகத்துக்கு அருகிலேயே 'பிலாய் வாட்டர் ஒர்க்ஸ்' எனும் குடிநீர் வாரிய அலுவலகமும் அமைந்திருக்கிறது. இது பிலாய் நகரத்துக்கான தூய குடிநீரை வழங்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறது.
மைத்ரி பாக் பூங்காவில் உள்ள இசை நீரூற்று ஒன்று பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. இந்த நீரூற்றில் நவீன வண்ண விளக்கு அமைப்புகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன.
அழகிய மலர்ச்செடிகளை கொண்ட தோட்டங்கள், செயற்கை நீர்வீழ்ச்சி, இசை நீரூற்று, விளையாட்டு ரயில் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த பூங்கா வளாகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. பிரகதி மினார் எனும் காட்சிக்கோபுரம் ஒன்றும் இந்த பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
பூங்காவின் அழகுக்காட்சிகள் மற்றும் இரும்பு ஆலை போன்றவற்றை இந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்து ரசிக்கலாம்.