பிரஞ்சு கலாச்சாரம், பழங்கால கட்டிடக்கலை, வண்ணமயமான கடற்கரைகள், வித விதமான கஃபேக்கள், பப்கள், ஷாப்பிங் என சுதந்திரமான சுற்றுலாவை பயணிகளுக்கு வழங்குகிறது நம் புதுச்சேரி. நாளுக்கு நாள் புதுச்சேரி செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் மத்திய சுற்றுலாத் துறை புதுச்சேரியில் கூடுதலாகவும், ஏற்கனவே இருக்கின்ற இடங்களை புதுமைப்படுத்தவும் திட்டங்களை அறிமுகப்படுதியுள்ளது. இதனை சுற்றுலாப் பயணிகளும் மக்களும் வெகுவாக வரவற்றுள்ளனர். என்னவெல்லாம் புதுவையில் வரவிருக்கிறது? புதுவையில் ஏற்கனவே இருக்கும் சுற்றுலாத் தலங்கள் என்னென்ன? புதுச்சேரி செல்ல சிறந்த நேரம்? இது போன்ற தகவல்கள் கீழே!

உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புதுச்சேரி
உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் துடிப்பான இடமாக புதுச்சேரி திகழ்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியா அதன் ஆன்மீக செல்வம், கலாச்சார பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மைக்கு எப்போதும் அறியப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில், இந்தியா உலகத் தரம் வாய்ந்த வசதிகள், சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் எளிதாக வாழ்வதற்குப் பெயர் பெற்றுள்ளது.

சுற்றுலாவால் அதிகரிக்கும் புதுச்சேரி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு
புதுச்சேரி சுற்றுலாத் துறையில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியம் உள்ளது. ரூ. 10 லட்சம் முதலீட்டில், 80,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். பிராந்திய நிர்வாகம் தொழில்துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும், அதற்காக அமைச்சகம் தயாராக உள்ளது. இதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய சுற்றுலாத் துறை செய்யும் என மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஸ்வதேஷ் தர்ஷனின் கீழ் மேம்பாடு செய்யப்படும் புதுவை சுற்றுலாத் தலங்கள்
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மத்திய சுற்றுலா அமைச்சகம் செயல்பட்டு வருகிறது என்று மேலும் தெரிவித்த அவர் ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 இன் கீழ் மேலும் வளர்ச்சிக்காக புதுச்சேரி மற்றும் காரைக்கால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரசாத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களை அடையாளப்படுத்தியுள்ளோம். 148 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி அடையாளப்படுத்தப்பட்ட இடங்கள் மேம்படுத்தப்படும் என்று கூறினார்.

கோடிக்கணக்கான ரூபாயில் பராமரிப்பு பணிகள்
1.33 கோடி ரூபாய் செலவில் ஆயி மண்டபம் மற்றும் பாரதி பூங்காவில் மின் விளக்குகள் அமைத்தல், திருக்காஞ்சியில் உள்ள ஸ்ரீ கங்கை வராக நதீஸ்வரர் கோயிலில் 5.82 கோடி ரூபாய் செலவில் யாத்ரீகர்களுக்கான வசதிகள் மற்றும் புனித நதிக்கரையோரம் மேம்பாடு உள்ளிட்ட பணிகள் துவக்கப்படும். திருநள்ளாறில் 7.40 கோடியில் ஆன்மிக பூங்கா, சின்ன வீராம்பட்டினத்தில் ஈடன் பீச் 3.51 கோடியில் மேம்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்பொழுது செல்வது? எப்படி செல்வது?
புதுச்சேரி ஒரு கடற்கரை நகரம் என்பதால் ஆண்டு முழுவதும் நீங்கள் புதுச்சேரிக்கு செல்லலாம். சென்னையிலிருந்து புதுவையை நீங்கள் இரண்டு வழிகளில் அடையலாம் - கிழக்கு கடற்கரை சாலை மற்றும் GST சாலை. உங்களுக்கு எந்த வழி சௌகரியமோ அந்த வழியில் செல்லலாம். கிழக்கு கடற்கரை சாலையில் சென்றால் அழகான வங்காள விரிகுடாவை ரசித்தப்படியே பயணம் செய்யலாம். இல்லை! நான் வேகமாக செல்ல வேண்டும் என்று நினைத்தால் GST சாலையில் செல்லலாம்.

புதுச்சேரியில் உள்ள அழகான சுற்றுலாத் தலங்கள்
அழகிய கடற்கரைகள் - ராக் பீச், செரினிட்டி பீச், ஈடன் பீச், பாரடைஸ் பீச், போதி பீச், ஆரோவில் பீச் ஆகிய வண்ணமயமான கடற்கரைகளில் சூரிய உதயத்தை ரசித்திடுங்கள். மாலை நேரத்தில் கடற்கரையோரம் அமைதியாக நடைபயணம் செய்யுங்கள்.
கோவில்கள் - உலகப்புகழ் பெற்ற ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில், காசிக்கு இணையான சக்தி வாய்ந்த திருக்காஞ்சி கோவில், இயற்கை சூழலில் அமைந்திருக்கும் தென்னம்பாக்கம் அழகர் கோவில் ஆகியவற்றிற்கு சென்று வாருங்கள்.
வித விதமான உணவுகள் - புதுச்சேரி பல தரப்பட்ட மக்களும் வந்து செல்லும் இடமாக அந்த காலத்தில் இருந்தே இருப்பதால், இத்தாலி, பிரெஞ்சு, சைனீஸ், ஐரோப்பிய, வட இந்திய, தென் இந்திய உணவுகளை வழங்கும் பல ரிசார்ட்டுகளை உள்ளடக்கியது. விலையும் மிகவும் குறைவாகவே இருக்கிறது. சுவைத்து மகிழுங்கள்.
ஷாப்பிங் - மணக்குள விநாயகர் கோவில் அருகே, மிஷன் ஸ்ட்ரீட் அருகே, நேரு வீதிக்குள் என பல இடங்களில் நீங்கள் ஷாப்பிங் செய்யலாம். வித விதமான உடைகள், வாசனை திரவியங்கள், அழகு பொருட்கள், பரிசு பொருட்கள் ஆகியவை மலிவு விலையில் கிடைக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் ஆரோவில் கட்டாயம் சென்று வாருங்கள், இ.சி.ஆர் சாலையில் பைக் பயணம், பல அழகிய தேவாலயங்கள் மற்றும் மியூசியத்தை பார்வையிடுங்கள், இரவில் உயிர்ப்போடு இருக்கும் பல கஃபேக்கள், பப்கள் என உங்கள் பொழுதை போக்குங்கள்.
புதுச்சேரியில் ஒன்றல்ல இரண்டல்ல, ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாட கூட இது உங்களுக்கு சரியான ஸ்பாட். இப்பொழுதே திட்டமிடுங்கள்!



Click it and Unblock the Notifications




