மத்தியப் பிரதேசத்தின் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள சாந்தேரி, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தலமாகும். சாந்தேரி நகரம், புண்டல்காண்ட் மற்றும் மாள்வா பகுதிகளின் எல்லையையொட்டி உள்ளது. இந்நகரம் பல்வேறு வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் இயற்கை அதிசயங்களை காட்டவல்ல சுற்றுலாத்தலமாகும். பசுமைப்போர்வை போர்த்தப்பட்ட கானகங்கள் மற்றும் பேரமைதி வாய்ந்த ஏரிகள் ஆகியவற்றை அருகருகே கொண்டிருக்கும் இந்நகரம் செழிப்பு மிக்க விந்திய மலைகளிலே அமைந்துள்ளது. இந்நகரம் ஜான்சியிலிருந்து 103 கிமீ தொலைவிலும் மற்றும் போபாலில் இருந்து 214 கிமீ தொலைவிலும் உள்ளது.
சாந்தேரி :
இயற்கையால் வடிவமைக்கப்பட்ட அதிசயம்! இந்த பழமையான நகரம் 11-ம் நூற்றாண்டிலேயே உருவானது என்பதற்கு சான்றாக இந்நகரத்தின் நினைவுச் சின்னங்கள் நின்று கொண்டுள்ளன. மத்திய இந்தியா, தக்காணம் மற்றும் குஜராத்தில் உள்ள துறைமுகங்களுக்கு செல்வதற்கான முக்கியமான வியாபார வழியாக இந்நகரம் இருந்ததால் பல்வேறு அரசர்களும் இந்நகரத்தை கைப்பற்றி ஆண்டு வந்தனர். இங்கிருக்கும் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னங்கள், இங்கு பல்வேறு காலகட்டங்களில் இருந்து வந்த இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு சான்றாக உள்ளன. மேலும், சாந்தேரி ஒரு முக்கியமான சமண தலமாகவும், இராணுவ குடியிருப்பாகவும் செயல்பட்டு வந்த நகரமாகும்.
சாந்தேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்
சாந்தேரி கோட்டை, ராஜா மஹால், சிங்புர் அரண்மனை, பாதால் மஹால் மற்றும் பல்வேறு சுற்றுலா தலங்களை கொண்ட பயணமாகவே சாந்தேரி சுற்றுலா இருக்கும். ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் ஜக்கேஸ்வரி தேவி திருவிழா இந்நகரத்திற்கு பெருமளவு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் திருவிழாவாகும். மேலும், சாந்தேரி நகரம் அதன் கைவினைப் பொருள் தொழில்களுக்காகவும், மிகவும் தரமான, தங்க ஜரிகை கொண்ட சேலைகளுக்காகவும் புகழ் பெற்ற இடமாகும்.
சாந்தேரியை அடையும் வழிகள்
அருகிலுள்ள நகரங்களிலிருந்து டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் வழியாக சாந்தேரி நகரத்தை அடைந்திட முடியும். சாந்தேரியில் சுற்றுலாப் பயணிகளுக்கேற்ற வகையில் சர்க்யூட் ஹெளஸ், டாக் பங்களா மற்றும் ரெஸ்ட் ஹெளஸ் போன்ற பல்வேறு விடுதிகள் உள்ளன. சாந்தேரிக்கு குளிர்காலங்களில் வருவது மிகச்சிறந்த சுற்றுலா அனுபவத்தைத் தரும்.