கடும் கோடைக் கூட்ட நெரிசல் மற்றும் பல சிறப்பு ரயில்களின் இயக்கத்திற்கு மத்தியில் ரயில் பயணிகளுக்கு தரமான, மலிவு மற்றும் சுகாதாரமான உணவை வழங்குவதற்காக ரயில்வே ஒரு சூப்பர் முடிவு எடுத்துள்ளது! முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு வசதியாக சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ரயில் நிலையங்களில் மலிவு விலையில் உணவு விற்பனையை ரயில்வே தொடங்கியுள்ளது!
ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், இந்திய ரயில்வேயுடன் இணைந்து, வரவிருக்கும் கோடை சீசனை முன்னிட்டு பொது இரண்டாம் வகுப்பு (GS) பெட்டிகளுக்கு அருகில் மலிவு விலையில் உணவு மற்றும் சிற்றுண்டி கவுண்டர்களை அமைத்துள்ளது.
இந்தியா முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நிலையங்களில்
கோடை காலத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கும் வகையில், ரயில் பயணிகளுக்கு, குறிப்பாக பொதுப் பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு, மலிவு விலையில் இரண்டு வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த உணவு கவுண்டர்கள் இப்போது இந்திய ரயில்வே முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நிலையங்களில் செயல்படுகின்றன.

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு சலுகை
ரயில்வே வாரியம் சமீபத்தில் அனைத்து மண்டலங்களையும், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) நிறுவனத்தையும் பொருளாதார உணவு சேவையைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டது. ரயில்வே வாரியம் அதன் தகவல்தொடர்புகளில், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு மலிவு விலையில் உணவு மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் போதுமான அளவு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு மண்டல ரயில்வே மற்றும் IRCTC க்கு அறிவுறுத்தியது.
சென்னை, மதுரை, திருச்சி, சேலம் ரயில் நிலையங்கள்
தெற்கு ரயில்வே மண்டலம் முழுவதும் 34 நிலையங்களில் பிரத்யேக உணவு கவுண்டர்களை அமைத்துள்ளது. சென்னை கோட்டத்தில் 5 ஸ்டேஷன்களிலும், திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் 3 ஸ்டேஷன்களிலும், சேலம் கோட்டத்தில் 4 ஸ்டேஷன்களிலும், மதுரை கோட்டத்தில் 2 ஸ்டேஷன்களிலும், பாலக்காடு கோட்டத்தில் 9 ஸ்டேஷன்களிலும், திருவனந்தபுரம் கோட்டத்தில் 11 ஸ்டேஷன்களிலும் இந்த உணவு கவுண்டர்கள் பயணிகளுக்கு கிடைக்கும்.

தமிழகம் முழுவதும் மலிவு விலை கிடைக்க ஏற்பாடு
இந்த தகவல்தொடர்பு அடிப்படையில் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ரயில் சந்திப்பில் சிக்கன உணவு சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. கோடைக் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு மூன்று ஸ்டேஷன்களிலும் மலிவு விலையில் சாப்பாடு விற்க மொபைல் ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி கோட்டத்தின் கீழ் போதுமான அளவு ரயில் நீர் குடிநீர் பாட்டில்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் வழங்கப்படும் மலிவு விலை உணவுகள்
எகானமி உணவு என்கிற பெயரில், ரூ.20 விலையில், 200 கிராம் எலுமிச்சை சாதம் அல்லது புளி சாதம் அல்லது தயிர் சாதம் அல்லது ஊறுகாயுடன் கூடிய பருப்பு கிச்சடி வழங்கப்படுகிறது. 7 பூரி மற்றும் பாஜியுடன் கூடிய சிற்றுண்டி ரூ.20 க்கும் வழங்கப்படும். அதே போல 200 மில்லி சுத்தமான தண்ணீர் ரூ.3 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பசி நேரத்தில், ரயிலை விட்டு இறங்காமல், வெயிலில் தவிக்காமல் இந்த மதிய உணவு பயணிகளின் பசியை தீர்க்க உதவிகரமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications





