சென்னையிலிருந்து சுற்றியுள்ள பல மாவட்டங்களில் வாழும் இளைஞர்களும், புதியதாக திருமணமான இணைகளும் அடிக்கடி வருகை தரும் இடம் பிச்சாவரம். இங்கு செல்வது மிக எளிது என்பதாலும், காதலர்களுக்கு தனிமை நல்ல அமைதியாக இருக்கும் என்பதாலும், நீண்ட நேர பைக் ரைடு மற்றும் லாங்க் டிரைவ் போக வழிவகுக்கும் என்பதாலும் இந்த இடம் அதிகம் விரும்பப்படுகிறது. காதலர்கள் விரும்பும் அளவுக்கு இங்கு என்னவெல்லாம் இருக்கிறது என்பதையும், அத்துடன் வழியில் முட்டுக்காடு மற்றும் மஹாபலிபுரத்தையும் பார்த்துவிட்டு வரலாம்.

பயணத் திட்டம்
இந்த பயணத்தின் திட்டப்படி, முதலில் நாம் சென்னையிலிருந்து பிச்சாவரம் சென்றுவிடுவோம். அதன்பிறகு திரும்பி வரும் வழியில் மாமல்லபுரம் மற்றும் முட்டுக்காடு ஆகிய இடங்களை கண்டு அனுபவித்துவிட்டு, சென்னை திரும்பலாம். சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் இருக்கும் நண்பர்கள் அவர்களது பயண வசதிக்கேற்ப திட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.

சென்னையிலிருந்து பிச்சாவரம்
சென்னையிலிருந்து பிச்சாவரம் 228 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. மொத்த பயண நேரம் 5 மணி ஆகும்.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பயணம் இது. கடலை வேடிக்கைப் பார்த்துகொண்டே செல்வது போன்ற பயணம்.

பயணம் தொடங்குகிறது
காலை 6 மணிக்கெல்லாம், நீங்கள் செல்லவேண்டிய வாகனத்தில் ஏறிவிடுங்கள். கார், பைக்கில் பயணிப்பது என்று முடிவெடுத்துவிட்டால் தெளிவான திட்டத்துடன், உங்கள் மனம் விரும்பும் நபர்களையும் அழைத்துச் செல்லுங்கள். தனிமை பயணம் சற்று போரான விசயம்.
இந்த சாலையில் வாகனம் ஓட்டுவது மிகக் கவனமாக செய்யவேண்டியது என்பதையும் மனதிற் கொள்ளுங்கள். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இருவருமே தலைக் கவசம் அணிந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலை உணவு இடைவேளை
காலை 6 மணிக்கே பயணம் தொடங்கியது என்பதால் காலை உணவு இடைவேளைக்காக நிச்சயம் இடையில் வண்டியை நிறுத்தவேண்டும். அதுவும் பைக்கில் செல்பவர்கள் வசதியின்மையை உணர்வீர்கள். உங்களுக்கான காலை உணவை கடலூர் அல்லது பாண்டிச்சேரியில் முடித்துக் கொள்ளநினைப்பவர்கள் அதை எளிதாக சாத்தியப்படுத்திக்கொள்ளமுடியும்.

பிச்சாவரம் அலையாத்திக் காடுகள்
பாண்டிச்சேரியில் இருந்து 66 கி.மீ தொலைவில் இருக்கும் பிச்சாவரம் அலையாத்தி காடுகள். இந்தியாவிலேயே இவ்வகை மாங்க்ரோவ் காடுகள் மேற்கு வங்காளத்திலும் தமிழகத்தில் பிச்சாவரத்தில் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Aleksandr Zykov

முக்கிய பங்கு
அலையாத்தி காடுகள் என்பவை கடற்கரையோரத்தில் இருக்கும் மழைக்காடுகள் ஆகும். இவ்வகை காடுகளில் வளரும் மரங்களுக்கு வேர்கள் நிலப்பரப்புக்கு மேல் இருக்கும். ஆக்ஸிஜன் காற்றை உற்பத்தி செய்வதிலும், கடல் அரிப்பை தவிர்ப்பதிலும் இவ்வகை அலையாத்தி காடுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

படகு சவாரி
பிச்சாவரம் அலையாத்தி காடுகளின் வடக்கு எல்லையில் வெள்ளார் ஆறும் தெற்கு எல்லையில் கொள்ளிடம் ஆறும் பாய்கின்றன. இந்த ஆறுகள் அலையாத்தி காடுகள் இருப்பதன் காரணமாக அலைகள் எழாத உப்பங்கழி ஓடையாக மாறி படகு போக்குவரத்திற்கும், கயாக்கிங் போன்ற படகு சவாரி செய்திட ஏதுவானதாக இருக்கிறது.

அதைத்தாண்டி இன்னும் பல
வெறுமனே படகு சவாரி செய்வதற்கு மட்டும் இல்லாமல் அருமையான மிக அரிதான இயற்கை கட்சிகளை காணும் வாய்ப்பையும் நமக்கு வழங்குகிறது. 'சூழல்' சுற்றுலா சென்றிட மிகவும் ஏற்ற இடமான இங்கு பல்வேறு உலக நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வரும் மிக அரிதான பறவைகள் பலவற்றை நாம் காணலாம். வாட்டர் ஸ்னிப்ஸ், கோர்மொரன்த்ஸ், ஹெரோன்ஸ், நாரைகள், கொக்குகள், மீன் கொத்தி பறவைகள் போண்டவற்றை இங்கே காணலாம்.

சுற்றுலாவை ஊக்குவிக்க விடியல் விழா
பிச்சாவரத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் 'விடியல் விழா' கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது நாம் இந்த பகுதியில் காலம் காலமாக வசித்து வரும் இருளர் பழங்குடிகள் நண்டு மற்றும் இறால் பிடிக்கும் நுட்பத்தை காணலாம்.

உணவுகள் இசையுடன் ஒருவேளைத் தங்கினால்...
படகுகளில் மிதந்தபடியே நடக்கும் நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம். இரவு பரிமாறப்படும் சுவையான கடல் உணவுகளை சாப்பிடலாம், அதிகாலையில் எழுந்து கண்கள் மகிழ சூரிய உதயத்தையும், பறவைகளையும் காணலாம்.

திரும்பும் நேரம்
பிச்சாவரம் பயணத்தை முடித்துக்கொண்டு நாம் திரும்ப திட்டமிட்டால், வழியில் மஹாபலிபுரம் மற்றும் முட்டுக்காடு பகுதிகளை பார்த்துவிட்டு செல்லலாம். பிச்சாவரத்திலிருந்து மாமல்லபுரம், 172 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 3 முதல் 3.30 மணி நேர பயணத்தில் இந்த இடத்தை அடைய முடியும்.

மாமல்லபுரம் கடற்கரை
கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று மாமல்லபுரம் கடற்கரை கோயில். பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் முழுவதும் கல்லால் ஆனதாகும். கற்கோயில் தவிர இந்த வளாகத்தில் பாறைகளில் குடையப்பட்ட யானை, சிங்கம் போன்ற சிற்பங்கள், அர்ஜுனன் தபசு என்ற பாறை சிற்ப தொகுப்பு போன்றவையும் அமைந்திருகின்றன. பாண்டிச்சேரி செல்லும் வழியில் நிச்சயம் இந்த கோயிலுக்கும் செல்ல தவறி விடாதீர்கள்.

முட்டுக்காடு
மகாபலிபுரத்திலிருந்து முட்டுக்காடு, 20 நிமிடத்தில் பயணம் செய்யும் தொலைவில் அமைந்துள்ளது. இதன் தூரம் 24 கிமீ ஆகும். மகாபலிபுரத்திலிருந்து முட்டுக்காடு நோக்கி நாம் பயணிக்கும்போது இரு நீர்நிலைகளுக்கு இடையில் நம் பயணம் இருக்கும். ஒரு பக்கம் பக்கிங்காம்கால்வாயும் மறுபக்கம் வங்கக் கடலும் நம்மைத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்.

உப்பங்கழி வகை கடல்
ECR ரோட்டில் அமைந்திருக்கும் மற்றொரு அற்புதமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடம் முட்டுக்காடு படகு சவாரி. 'Backwater' எனப்படும் உப்பங்கழி வகை கடலை கொண்ட இங்கு பல்வேறு வகையான படகு சவாரிகள், கடலில் செல்லும் ஸ்கூட்டர் போன்றவை உள்ளன. சூரியன் மறையும் மாலை நேரத்தில் சூரிய கதிர்கள் கடலை தங்கக்குளம் போல தோன்ற வைக்கும் நேரம் படகு சவாரி செய்ய ஏற்றது.
J'ram DJ

முட்டுக்காடு - சென்னை
முட்டுக்காட்டிலிருந்து சென்னை செல்லும் பயணம் சற்று ஏமாற்றமளிப்பதாகவே இருக்கும். ஏனென்றால் உங்கள் மனம் விரும்பும் நபருடன் நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சிகளையும், நிகழ்வுகளையும் மனதில் அசைப் போட்டபடியே, இனி இப்படி ஒரு நாள் எப்போது வரும் என்ற எண்ணமும் கூடவே வரும். ஆனால் நீங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், உங்களின் பஃன் தருணங்களும், நெகிழ்ச்சியை வரவழைக்கும். நண்பர்கள் கேலி செய்த நிகழ்வுகள் உங்கள் மனதில் ஆழ்ந்த குழியிட்டு அமர்ந்துகொள்ளும். காதலர்கள் இப்படி ஒரு தருணத்துக்காகத் தான் காத்திருந்ததாக தனிமை பேசும். மொத்தத்தில் இந்த சுற்றுலா உங்கள் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக இருக்கும்.
அலுவலகத்தில் வேலைப் பளு, மனச் சோர்வு, தலைவலி, மனத் திடம் குறைவு, ஓய்வில்லாமல் உழைக்கிறேன் என்று அலுத்துக்கொள்கிறீர்களா? சுற்றுலாவைத் திட்டமிடுங்கள்.. மகிழ்ந்திருங்கள்... உங்கள் மகிழ்ச்சி உங்கள் வெற்றிக்கான விதை... தொடர்ந்து சுற்றுலாவை நேசியுங்கள்.



Click it and Unblock the Notifications




