பூனேயின் மிகப்புகழ்பெற்ற கோவில் என்று தயக்கமில்லாமல் சொல்லலாம். நாட்டின் பல இடங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் இந்த விநாயகர் கோவிலுக்கு வருகின்றனர்.

டக்குஷேத் என்பவர் கர்நாடகத்திலிருந்து பூனே வந்து ஒரு அல்வா கடை தொடங்கினார். அது நன்றாகப் போக, அல்வா அடைமொழி இவரின் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டது. இவரது மகன் அகால மரணமடைய, மன உளைச்சலுக்கு ஆளானார். அதைப் போக்க இவர் கட்டியதுதான் இந்த விநாயகர் கோவில். பால கங்காதர் திலகரின் நட்பு கொண்டவர். இந்தக் கோவிலில்தான், திலகர் யோசனையின் பேரில் , விநாயகரை, பொதுமக்கள் ஊர்வலமாய் எடுத்துச் சென்று கொண்டாடும் போக்குத் துவங்கியது.

வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாய் இருக்கும். வரிசையில் நின்று சிறிது நேரம் கழித்து கோவிலின் உள்ளே செல்ல முடியும். நம்மூர் போல் பிரகாரம், நவ கிரகங்கள், மூல ஸ்தானம், எல்லாம் கிடையாது. கருவறையும் கிடையாது. வரிசையில் வந்தால், சற்றே உயர்ந்த மேடையில் சிறிய அளவில் விநாயகர் இருப்பார். மிகவும் சக்தி வாய்ந்த விநாயகர் கோவில்களில் இது என்று பக்தர்கள் சொல்வதுண்டு. இதற்கு எதிரே பக்தர்கள் உட்கார்ந்து தியானத்தில் ஈடுபட ஒரு கூடம் இருக்கிறது.

கோவிலின் கட்டுமானம், கோபுரம், சுவற்றில் இருக்கும் வேலைப்பாடுகள் எல்லாம் நம்மைப் போல தமிழர்களுக்கு முற்றிலும் புதிதாய் இருக்கும். ஒரு அரசவை தர்பார் போல, ஒரு மாளிகையைப் போல காட்சியளிக்க கூடியது.

கோவிலுக்கு அருகே இனிப்புக் கடைகள், குட்டி குட்டி விநாயகர் சிலை விற்கும் கடைகள் நிறைய இருக்கின்றன.
கோவில் இருக்கும் இடம் பூனேயின் முக்கியப் பகுதியான புத்வார்பேத். ஏராளமான நகரப்பேருந்துகள் இருக்கின்றன.
பூனே ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ.



Click it and Unblock the Notifications




