மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 560 அடி உயரத்தில் புனே நகரம் அமைந்துள்ளது. புனித நகரம் என்ற பொருள்படும் புண்ணியநகரா என்ற சொல்லிலிருந்து இந்த புனே என்ற பெயர் பிறந்துள்ளது. ராஷ்டிரகூட அரச வம்சத்தினர் இந்த நகரை ‘புண்ணிய விஷய’ என்றும் ‘பூனாக் விஷய’ என்றும் அழைத்து வந்தனர்.
புனே – வரலாற்றுப் பின்னணி
புனேவாடி என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட புனே மராத்திய மாமன்னர் சத்ரபதி சிவாஜி மஹாராஜா வாழ்ந்து ஆண்ட இடமாகும். பின்னர் புனே மாநகரானது பேஷ்வா வம்சத்தினரின் ஆளுகைக்கு மாறி பின்னாளில் ஒன்று பட்ட இந்தியாவின் அரசியல் சம்பங்களின் முக்கிய இடமாகவும் மாறியது. ஆங்கிலேயர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பின்னர் இது மழைக்காலத்தின் தலைநகர் என்றும் அவர்களால் குறிப்பிடப்பட்டது.
புனேயில் என்ன இருக்கிறது?
கட்டிடக்கலை விரும்பிகளுக்காகவே ஆகா கான் கோட்டை, ஷிண்டே சாத்ரி மற்றும் பழமையான சிங்காபாத் கோட்டை போன்றவை இங்கு உள்ளன. பேஷ்வா ஆட்சியின் போது கட்டப்பட்ட ஷனிவார் வாடா என்ற பாழடைந்த கோட்டையும் இங்கு காணப்படுகிறது.
ஆன்மிக குரு ரஜனீஷ் ஓஷோ அவர்களால் அமைக்கப்பட்டு தியானக் கலையை பயிற்றுவிக்கும் ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனல் எனும் புகழ் பெற்ற ஆன்மீக அமைப்பு இங்கு புனேயில் உள்ளது.
கார்லா மற்றும் பாஜா என்ற இடங்களில் புத்த குகைக் கோயில்களும் காணவேண்டியவை. பல்விதமான முகப்பு சிற்பங்கள் மற்றும் தெய்வச் சிலைகள் கல்லில் வடிக்கப்பட்டு காணப்படும் பழமையான பாடாலேஷ்வர் கோயிலும் இங்குள்ளது. இந்தக் கோயில் 1400 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையைக் கொண்டது குறிப்பிடத் தக்கது.
மற்றும் இயற்கை ரசிகர்களுக்காக எம்ப்ரஸ் தாவரப் பண்ணைத் தோட்டம் உள்ளது. இங்கு சரஸ் பாக் மற்றும் புண்ட் தோட்டம் என்ற பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடும்பத்துடன் ஏகாந்தமாக பொழுது போக்க இவை பொருத்தமான இடங்களாகும்.
புனேயில் பிரசித்தி உணவுகளாக புரான் போளி, பித்லா, சாட், பாவ் பாஜி மற்றும் பிரபலமான மிஸல் பாவ் போன்றவை கிடைக்கின்றன. கொஞ்சம் காரமான உணவுப்பொருளான மிஸல் பாவின் சுவை இன்னும் இன்னும் என்று தின்னத் தூண்டும் சுவையைக் கொண்டது. பெரும்பாலும் புனேயின் எல்லா பாரம்பரிய உணவுப்பொருட்களும் சோளம் மற்றும் கம்பு போன்ற உள்ளூர் தானியங்கள் சேர்த்தே தயாரிக்கப்படுகின்றன.
புனே நகருக்கு டிசம்பர் மாதத்தின் போது பயணம் செய்யும் பட்சத்தில் ‘சவாய் கந்தர்வ சங்கீத மஹோத்ஸவம்’ என்னும் வருடாந்திர சாஸ்திரீய சங்கீத நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம்.
புனே நகர் குறித்த இதர தகவல்கள்
வருடத்தின் எல்லா நாட்களுமே புனே நகருக்கு விஜயம் செய்ய ஏற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. வறண்ட தட்ப வெப்ப பகுதியில் அமைந்திருந்தாலும் அதிக வெப்பமும் இல்லாமல் இல்லாமல் அதிக குளிரும் இல்லாமல் புனே காணப்படுகிறது.
இருப்பினும் கோடைக்காலம் சற்று வெம்மையுடனேயே காணப்படும். அதனை ஈடு செய்வது போல இரவில் வெப்பநிலை சற்று குறைந்து இதமான சூழலை தோற்றுவிக்கும் வகையில் காணப்படுவது விசேஷம்.
மழைக்காலத்தில் புனே பார்ப்பதற்கு ரம்யமாக காட்சியளிக்கிறது. ஏனெனில் அக்காலத்தில் எங்கு திரும்பினாலும் பசுமையுடன் புனே காட்சியளிக்கிறது. அதுவும் குளிர்காலம் புனே செல்வதற்கு மிக உகந்த பருவ காலமாகும்.
இக்காலத்தில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் வெளியூர் பயணிகள் அதிகம் வருவதால் தங்குமிட வாடகை போன்றவை சற்று அதிகமாக காணப்படும்.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான ஒன்றாக விளங்கும் புனே மஹாராஷ்டிராவின் எல்ல நகரங்களுடனும் மற்றும் பிற மாநில நகரங்களுடனும் போக்குவரத்து வசதிகளால் சிறந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
புனேயில் உள்ள லோஹேகான் விமான நிலையத்திற்கு மும்பை, டெல்லி, அஹமதாபாது, சென்னை, ஹைதராபாத் மற்றும் கோலாபூர் உள்ளிட்ட பெரு நகரங்களிலிருந்து தினமும் பல விமான சேவைகள் கிடைப்பது குறிப்பிட தக்கது.
ரயில் நிலையமும் நகரில் முக்கிய பகுதியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது. ரயில் மார்க்கமாக மும்பையிலிருந்து தினமும் ஷதாப்தி எக்ஸ்பிரஸ் 170 கி. மீ தூரத்தை சில மணி நேரங்களிலேயே கடக்கிறது.
சாலை மார்க்கமாக பார்த்தால் மும்பை புனே எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை பயண நேரத்தை இன்னும் குறைக்கும் வகையில் அமைந்திருக்கும் ஒரு விசேஷ அம்சமாகும்.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் பண்பாட்டு மையமாக கருதப்படும் புனே கட்டுமானத்துறை மற்றும் கல்வித்துறை போன்றவற்றின் மையமாக வளர்ந்துள்ளது. சாஸ்திரிய இசை, நவீன நாடகக் கலை, இலக்கியம் - குறிப்பாக மராத்திய இலக்கியம், ஆன்மீகம் போன்ற பல அம்சங்களை தன்னுள் பொதித்திருக்கும் பெருமையை இது கொண்டுள்ளது.
கல்வியை முன்னிட்டும் வேலை வாய்ப்பிற்காகவும் பிற மாநிலங்களிலிருந்து மக்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். தகவல் தொழில் நுட்ப துறை சார்ந்த வளர்ச்சியின் மையமாகவும் புனே திகழ்கிறது. சர்வதேச அமைப்பான காமா குளோபல் சிட்டி மையத்தின் அங்கீகாரத்தினையும் புனே பெற்றுள்ளது.
இப்படி பல பெருமைகளை பெற்றுள்ள புனே நகரம் இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரு முறையாவது செல்ல வேண்டிய நகரமாகும். எல்லா சிறப்புஅம்சங்களையும் பெற்றுள்ள புனே நகரத்தை மும்பை மாநகரின் வாசல் என்றும் சொல்லலாம்.
வரலாற்று பின்னணி, தொழில் நுட்ப வளர்ச்சி, கட்டுமானத்துறை, பண்பாடு போன்றவற்றின் மிகச் சிறந்த கலவையாக விளங்கும் புனே மாநகரம் அனைவரும் ஒரு முறையாவது விஜயம் செய்ய வேண்டிய நகரமாகும்.