தலாய், திரிபுரா மாநிலத்தில் மிகச்சமீபத்தில் உருவாக்கப்பட்ட மாவட்டமாகும். தன் தலைமையகத்தை அம்பாஸாவில் கொண்டுள்ள தலாய், பங்களாதேஷ் நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்தபடி அமைந்துள்ளது. 1995ல் உருவாக்கப்பட்ட இந்த ஊர் பஞ்சாயத் ராஜ் அமைச்சகத்தால் இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட மாவட்டகங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத் தலைநகர் அகர்டலாவில் இருந்து 90 கிமீ தொலைவில் உள்ள இவ்வூரில் இருந்து தரைவழியாக தலைநகரை அடைய 3மணி நேரம் ஆகிறது.
இயற்கை அழகு!
பெரும்பாலும் மலைகளாலும், காடுகளாலும் சூழப்பட்டுள்ள தலாயின் அடர்ந்த காடுகளை ரசிக்க வருடந்தோறும் திரிபுராவிற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். தலாயில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த தொழிற்வளர்ச்சியும் இல்லையென்றாலும் அண்ணாச்சிப் பழ சாறு எடுக்கும் தொழிற்சாலை வடகிழக்கு வேளாண்மை விற்பனை கழகத்தால் நிறுவப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் கிராமவாசிகள் கைவினைப்பொருட்கள் செய்வதிலும், ஊதுபத்திகள் தயாரிப்பதிலும் சிறந்து விளங்குகிறார்கள்.
தலாய் நகரத்திற்கு அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்!
தலாய் நகரம் சுற்றுலாப்பயணிகளை மற்றுமல்லாது யாத்ரீகர்களை ஈர்க்கும் இடமாக உள்ளது. லொங்தரை மந்திர், கமலேஷ்வரி மந்திர், ராஸ் ஃபேர் ஆகிய இடங்கள் குறிப்பிடத்தக்க சுற்றுலாதளங்களாகும். தலாய் நகரம் திரிபுரா சுற்றுலாவில் மிகமுக்கியமான பங்கை வகிக்கிறது.
ராசலீலா என்பது கிருஷ்ணர் ராதை மற்றும் அவளது தோழிகளுடன் ஆடிய நடனமாகும். மணிப்பூரி மக்களும், கிருஷ்ண பக்தர்களும் வருடந்தோறும் ராச லீலா விழாவை நடத்துகின்றனர். தலாய் பகுதியில் அதிக அளவில் இருக்கும் மணிப்பூர் மக்கள் இவ்விழாவை ஏற்பாடு செய்கிறார்கள். சலேமா பகுதியில் நடைபெறும் மிகப்பெரிய விழா சமீபகாலமாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்தப்படுகிறது.
டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இவ்விழாவின் குறிப்பிடத்தக்க அம்சமாக கிருஷ்ணரின் யாத்திரை நிகழ்ச்சி திகழ்கிறது. கிருஷ்ணரின் களிமண் சிலைகளின் மூலம் அவரது வாழ்க்கையின் பல பரிமாணங்கள் வெளிப்படுத்தப்படுகிறது. கிருஷ்ண பக்தர்கள் பலர் இந்நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். தலாய் நகரத்தின் மிகமுக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இந்நிகழ்ச்சி கருதப்படுகிறது.
தலாய் மாவட்டத்தின் மிக முக்கியமான கோவில்களில் லாங்க்தரை மந்திர் ஒன்றாகும். கொக்பொராக் மொழியில் லாங்க்தரை என்றால் சிவன் என பொருள். அகர்டலாவில் இருந்து இக்கோவில் 102கிமீ தொலைவில் உள்ளது. சிவபெருமான் தன் வீடான கைலாச மலைக்கு பயணம் செய்தபோது இங்கு ஓய்வெடுக்கும் பொருட்டு கால் பதித்ததாக நம்பப்படுகிறது. அதிலிருந்து புகழ்பெற்ற இவ்விடத்தில் கோவிலும் எழுப்பட்டு புகழ்பெற்று விளங்குகிறது. இன்று இக்கோவிலும் அதைச் சுற்றி உள்ள இடமும் பெரிதாக மதிக்கப்பட்டு மக்கள் அனைவராலும் போற்றப்படுகிறது.
லொங்தரா என்றால் பெரும் பள்ளத்தாக்கு என்றும் பொருள். இக்கோவிலை அடையும் சாலையோரங்களில் கும்பி என்ற வகை பூக்கள் பூக்கின்றன. கோவில் மட்டுமல்லாது அதைச் சுற்றியுள்ள இடமும் அமைதியுடன் திகழ்கிறது. வியாரமயமாகிவிட்ட உலகில் இருந்து விலகி அமைதியாக இயற்கை எழிலுடன் தோற்றமளிக்கும் இவ்விடம் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய இடமாகும்.