மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள மவ்லின்னாங் கிராமம் "ஆசியாவின் தூய்மையான கிராமம்" என்ற இடத்தைப் பெற்றுள்ளது. வெறும் 700 குடிமக்களைக் கொண்டு, மிக உயர்ந்த கல்வியறிவு விகிதத்தையும், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சமூகத்தையும் கொண்டு பல அழகான சுற்றுலாத் தலங்களுக்கு புகலிடமாக உள்ளது. இந்த இடத்தை பார்க்கும் அனைவரும் 'அடடா என்ன தூய்மை' என்று சொல்லிக் கொள்ளாமல் இருக்க மாட்டார்களாம்!
தனித்துவமான அழகைக் கொண்டுள்ள மவ்லின்னாங்
சீராக அமைக்கப்பட்ட ஓலைகளால் ஆன காசி குடிசைகள், ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியே பூத்துக் குலுங்கும் பூக்கள், காய்கறி மற்றும் பழத் தோட்டங்கள், ஒவ்வொரு சில மீட்டருக்கும் இடையே இருக்கும் குப்பைத் தொட்டிகள், அழகான மூங்கில் கூடைகள் என அங்கே இருக்கும் காட்சிகளைக் கண்டு பார்வையாளர்கள் பரவசம் அடைவது உறுதி. இந்தோ-வங்காள எல்லையில் அமைந்துள்ள இந்த கிராமம் அன்றாட வாழ்க்கையின் சலசலப்பிலிருந்து ஓய்வு அளிக்கும் இடமாக பார்க்கப்படுகிறது.

கிராமத்தை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளும் மக்கள்
ஒரு சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலமாக, மிகவும் தூய்மையான கிராமமாக திகழும் மவ்லின்னாங்கில் இருக்கின்ற ஒவ்வொரு வீடுகளிலும் கழிவறைகளும், மூங்கில் குப்பைத் தொட்டிகளும் உள்ளன. இங்கு பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. அதனாலேயே குப்பை எதுவும் பார்க்க முடிவதே இல்லை. மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், சாலைகளைத் துடைப்பதும், மரங்களை நடுவதும் அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக பின்பற்றி வருகின்றனர்.
முற்றிலும் வேறுபட்ட உலகம் - மவ்லின்னாங்
மவ்லின்னாங் முற்றிலும் வேறுபட்ட உலகமாகும், அதன் சொந்த பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் ஆகியவை மற்றவற்றிலிருந்து தனித்து நிற்கின்றன. ஆணாதிக்க ஆட்சியை விட்டுச் சென்ற புகழ்பெற்ற பழங்குடியின மரபான காசிகளின் தாயகமும் இந்த இடம் தான்.
உண்ணும் உணவும் கூட இயற்கை தான்
தங்கள் விருந்தினர்களுக்கு அன்பான விருந்தோம்பலை வழங்குவது மவ்லின்னாங்கின் பூர்வீகவாசிகளின் மிகவும் நன்கு அறியப்பட்ட பண்புகளில் ஒன்றாகும். மவ்லின்னாங்கில் நீங்கள் உண்ணும் உணவின் சிறந்த அம்சம் என்னவென்றால், அவை அனைத்தும் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட காய்கறிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இறைச்சி கூட வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் மற்றும் விலங்குகளில் இருந்து வருவதால் சுவையும் அசத்தலாக இருக்கிறது.

இயற்கையோடு இணைய மவ்லின்னாங் செல்ல வேண்டும்
மவ்லின்னாங்கில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் முதன்மையானது மவ்லின்னாங் கிராமமே தான். சீரான ஒரே பாணியில் கட்டப்பட்ட வீடுகள், அழகான தோட்டங்கள், பசுமையான முற்றங்கள், தூய்மையான மற்றும் அழகிய நகரத்தின் ஒட்டுமொத்த சூழல் பார்வையாளர்களை முற்றிலும் மாறுபட்ட உலகத்திற்கு கொண்டு செல்கிறது. மவ்லின்னாங்கில் உள்ள தங்கும் விடுதிகள் கிராமத்தின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள ஹோம்ஸ்டேகளை உள்ளடக்கியது, இது உள்ளூர் மக்களைப் போலவே வாழவும், அவர்களின் வீட்டில் சமைத்த சுவையான உணவுகளை சுவைக்கவும் வழி வகுக்கிறது.
டாவ்கி நதியையும் கூட காணலாம்
ஷில்லாங்கில் இருந்து மவ்லின்னாங் கிராமத்திற்குச் செல்லும்போது, இந்தியாவின் தூய்மையான நதி என்று அழைக்கப்படும் டாவ்கி நதியை நீங்கள் காணலாம். நீர் மிகவும் சுத்தமாகவும் தெளிவாகவும் இருப்பதால், படகுகள் ஆற்றங்கரையில் மிதப்பது போல் தெரிகிறது, இந்நதியை மட்டும் காணவாவது வாழ்நாளில் ஒருமுறையாவது மேகாலயாவிற்கு சென்று வர வேண்டும். நதியில் 40 நிமிட பயணம் செய்ய 600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது தவிர போப்பில் நீர்வீழ்ச்சி, ஜிங்மஹாம் லிவிங் ரூட் பிரிட்ஜ், ப்ரூன் கோங்மென் வியூபாயின்ட் ஆகியவற்றையும் நீங்கள் காணலாம்.

எப்போது மவ்லின்னாங்கிற்கு செல்ல வேண்டும்?
மவ்லின்னாங் ஆண்டு முழுவதும் இனிமையான வானிலையை வழங்குவதால் சுற்றுலாப் பயணிகள் ஆசியாவின் தூய்மையான கிராமத்தை ஆண்டின் எந்த நேரத்திலும் பார்வையிடலாம். இருப்பினும், மழைக்காலத்தில் கிராமம் பசுமையாகவும் அழகாகவும் மாறுவதால் அந்நேரமே இந்த இடத்தைப் பார்வையிட சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது. ஜூலையில் பெஹ்டியன்க்லாம், செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் வங்காலா, அக்டோபர் அல்லது நவம்பரில் நோங்கிரெம் நடன விழா ஆகியவை மாவ்லின்னாங் கிராமத்திலும் அதற்கு அருகாமையிலும் கொண்டாடப்படும் சில முக்கிய திருவிழாக்களாகும், இந்நேரத்திலும் இங்கு வருகை தரலாம்.



Click it and Unblock the Notifications




