இந்தியா பல விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் வளமான பொக்கிஷத்தைக் கொண்டுள்ளதால் உலகெங்கிலும் உள்ள இயற்கை ஆர்வலர்களின் கவனத்தை எப்போதும் ஈர்க்கத் தவறியதில்லை. இந்தியாவில் மொத்தம் 106 தேசியப் பூங்காக்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான இந்த ஹெமிஸ் தேசிய பூங்கா, 4400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய தேசிய பூங்காவாக உள்ளது. லடாக்கில் அமைந்துள்ள இந்த தேசியப் பூங்காவில் பனியில் ஓடி விளையாடும் பல அரிய வகை உயிரினங்களை காணலாம். இந்த தேசியப் பூங்காவைப் பற்றி ஏராளமான சுவாரஸ்ய விஷயங்கள் உள்ளன.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் தேசியப் பூங்காக்கள்
காடுகள், மலைகள், நதிகள், அருவிகள், சமவெளிகள் மற்றும் பல்வேறு நிலப்பரப்புகள் அடங்கிய நம் நாட்டில் பலதரப்பட்ட சூழல்களில் எண்ணற்ற தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் அமைந்துள்ளன. ஏன் இந்தியாவில் கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலும் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் அமைந்துள்ளன. அவற்றில் மிகப்பெரியது லடாக்கில் அமைந்துள்ள இந்த ஹெமிஸ் தேசியப் பூங்கா.

பனியால் சூழப்பட்ட தேசியப் பூங்கா
லடாக்கின் கிழக்கு பகுதியில் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹெமிஸ் தேசிய பூங்கா தெற்காசியாவின் மிகப்பெரிய மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய தேசிய பூங்காவாகும். ஹெமிஸ் தேசிய பூங்கா கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் சுமார் 4400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. எப்போதும் பனியால் மூடப்பட்டிருக்கும் இந்த பகுதி சொர்க்கம் தானோ என்று நம்மை எளிதில் குழப்பத்தில் ஆழ்த்தி விடும்.
இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடம்
சான்ஸ்கார் மலைத்தொடரால் சூழப்பட்ட பூங்காவின் வட திசையில் சிந்து நதி சுதந்திரமாக பாய்கிறது, இந்த இடத்தின் அமைதியான அதிர்வுகள் நிச்சயமாக உங்களை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த பூங்கா, வனவிலங்கு மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து தரப்பினர்களுக்குமான ஈர்ப்பைக் கொண்டுள்ளது.

கண்களுக்கு விருந்தளிக்கும் ஹெமிஸ் தேசியப் பூங்கா
இந்த பூங்கா இமயமலையின் நிழலில் அமைந்து இருப்பதால் ஆண்டின் பெரும்பாலான நேரத்தில் பனி பொழிவை சந்திக்கிறது. ஆதலால் அடர்ந்த காடுகள் எவற்றையும் நீங்கள் இங்கே காண இயலாது. ஆனால் ஜூனிபர் மற்றும் சபால்பைன் உலர் பிர்ச்சின் ஆல்பைன் காடுகள் நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.
பனிச் சிறுத்தை முதல் கோல்டன் ஈகிள் வரை
வளமான வனவிலங்குகளுக்குப் பெயர்பெற்ற ஹெமிஸ் தேசியப் பூங்கா 16 பாலூட்டி இனங்கள் மற்றும் 73 பறவை இனங்களுக்கு தாயகமாகும். இந்த பூங்காவின் மிக முக்கியமான ஈர்ப்பு பனிச் சிறுத்தை தான். பரல், ஹிமாலயன் மவுஸ் ஹரே, ஷாபு, யூரேசியன் பிரவுன் பியர், ஹிமாலயன் மர்மோட், திபெத்திய ஓநாய் மற்றும் சிவப்பு நரி ஆகிய விலங்குகளை இங்கே பார்க்கலாம். கோல்டன் ஈகிள், ஃபயர்-ஃப்ரன்ட் செரின், ராபின் ஆக்சென்டர், ரெட்-பில்ட் சோஃப், லாம்மர்ஜியர் வல்ச்சர் மற்றும் ஸ்ட்ரீக்ட் ரோஸ்ஃபிஞ்ச் போன்ற பலவித பறவைகளையும் இங்கே கண்டு களிக்கலாம்.
எப்போது செல்ல வேண்டும்
தேசிய பூங்காவிற்கு செல்ல இந்தியர்களிடம் தலா ஒருவருக்கு 2௦ ரூபாய் கட்டணமாகவும், வெளிநாட்டவர்களிடம் 1௦௦ ரூபாய் கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. பூங்கா காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்களை அனுமதிக்கிறது. வசதியான வானிலை காரணமாக மே முதல் செப்டம்பர் வரையிலான நேரம் ஹெமிஸ் தேசிய பூங்காவிற்குச் செல்ல சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது. பனி ஏற்கனவே உருகிய நிலையில் இருப்பதால், இந்த நேரம் பூங்காவை சுற்றி பார்க்க சரியானதாக சொல்லப்படுகிறது. தேசிய பூங்காவை அடைய பல வழிகள் உள்ளன.
நீங்கள் சாகசப் பிரியராக இருந்தால், ஸ்பிடுக் கிராமத்திலிருந்து தேசிய பூங்காவிற்கு ட்ரெக்கிங் மேற்கொள்ளலாம். இது தவிர, பூங்காவிற்குச் செல்ல பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications





