என்ன? தமிழ்நாட்டில் அந்தமான் தீவா? குழப்பமாக இருக்கிறதா? ஆனால் உண்மையிலேயே அந்தமான் தீவுகள் மற்றும் மாலத்தீவுகளுக்கு இணையான ஒரு அழகிய தீவு தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. அழகிய சுத்தமான தெளிவான நீர், பவளப்பாறைகள், படகு சவாரி, மிக அரிய கடல் படிமங்கள், மிதக்கும் கற்கள், டால்பின் மற்றும் அதிர்ஷடம் இருந்தால் திமங்கலங்களையும் பார்க்கலாம். இந்த இடத்தின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் வெறும் ரூ. 300 இல் பார்த்து ரசிக்கலாம் தெரியுமா மக்களே! ஏன் நீங்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்று கீழே காண்போம்!

ராமேஸ்வரத்திற்கு உள்ளே ஒளிந்திருக்கும் அதிசயம்
ராமேஸ்வரத்திற்கு உள்ளே ஒரு மறைக்கப்பட்ட ரத்தினம் போல இந்த இடம் தனித்துவமான அழகுடன் ஜொலிக்கிறது. ராமேஸ்வரம் மண்டபம் பகுதியிலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த அழகிய தீவு சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாகி வருகிறது. பாம்பன் முதல் தூத்துக்குடி வரை உள்ள மன்னார் வளைகுடா கடலில் 21 தீவுகள் உள்ளன. இதில் பாம்பன் குந்துக்காலுக்கு வெகு அருகே உள்ள குருசடைதீவு, புள்ளிவாசல்தீவு,சிங்கில் தீவு, பூமரிச்சான் தீவு ஆகியவை படகு மூலம் அணுகக்கூடியவை. அவற்றிலும் குருசடைதீவு தான் மணி மகுடம் போல இருக்கிறது.

இயற்கை அழகு நிரம்பியிருக்கும் குருசடை தீவு
இயற்கை அழகால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள குருசுடை தீவு பவளப்பாறைகள் மற்றும் பல கடல்வாழ் உயிரினங்களின் தாயகமாக இருக்கிறது. மன்னார் வளைகுடா கடலில் 21 தீவுகள் உள்ளன. இவற்றை சுற்றி பவளப் பாறை, டால்பின், கடல் பசு உட்பட 2,000 க்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன. இதில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது பாம்பன் அருகே உள்ள குருசடை தீவு. இந்த கடற்பகுதியின் தனித்தன்மை கொண்ட பாலனோக்லோஸ்ஸஸ் என்ற அரிய வகை கடற்பாசிகள் காணப்படுகின்றன. அவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.

குருசடை தீவில் மட்டுமே காணப்படும் அரிய வகை காட்சிகள்
குருசடை தீவில் அரிய வகை ஆமைகள், டால்பின்கள், கடல் குதிரை, கடல் பசு, நண்டுகள், கடல் பாசிகள், ஸ்டிங்ரேக்கள், டுகோங்ஸ், வால்யூட்ஸ், நட்சத்திர மீன்கள், கடல் அனிமோன்கள், சக்கரங்கள், சிப்பிகள், வண்ணமயமான கடற்பாசிகள் என 400 க்கும் மேற்பட்ட அரிய வகை அழகான உயிரினங்களை நீங்கள் கண்டு மகிழலாம். இவை மட்டுமின்றி தீவில் ஏராளமாக காணப்படும் கடற்பஞ்சுகளையும் கண்டு களிக்கலாம்.

படகு சவாரிக்கான கட்டணம்
வனத்துறையும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குண்டுகால் மற்றும் சின்னபாலம் பகுதி மக்களும் ஒன்றிணைந்து குருசடை தீவுக்கு படகு சேவையை இயக்குகின்றனர். குருசடை தீவிற்கான படகு சவாரி தினந்தோறும் காலை 7 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை இயக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பிற்காக லைப் ஜாக்கெட்டும், பயிற்சி பெற்ற லைஃப் கார்டு ஒருவரும் படகில் பணியமர்த்தப் பட்டுள்ளார். படகு சவாரிக்கு ஒரு நபருக்கு ரூ.300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படகில் பயணித்தப் பின்னர் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடைபாதையில் நடந்து குருசடை தீவில் காணப்படும் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள், பறவைகள் ஆகியவற்றை கண்டு மகிழலாம்.

நேரம் போவதே தெரியாது
தீவை அடைந்தவுடன் பயணிகள் அழகிய கடற்கரையும், பவளப்பாறைகளையும், கடல் வாழ் உயிரினங்களையும் கண்டு மகிழலாம். விவேகானந்தர் நினைவிடதிற்க்கு அருகில் உள்ள கடல் விளக்க மையத்தையும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம். இத்தீவில் உள்ள அழகிய கடற்கரை, பவள பாறைகள் மற்றும் படகில் செல்லும் போது துள்ளி குதித்து விளையாடும் டால்பின்களை கண்டு துள்ளி குதிக்கலாம். வெறுமனே தீவில் அமர்ந்துக் கொண்டு அதன் அமைதியான அழகைக் கண்டு மெய் சிலிர்க்கலாம்.

எப்படி செல்வது?
ராமேஸ்வரத்தில் இருந்து குருசடை தீவை எளிதில் அடையலாம். ராமேஸ்வரத்தில் இருந்து தீவுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் ஷேர் ஆட்டோ மற்றும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நீங்கள் ராமேஸ்வரத்தில் இருந்தாலோ, அல்லது ராமேஸ்வரம் சென்றாலோ கட்டாயம் இந்த அழகிய தீவுக்கு ஒரு விசிட் அடிக்க மறந்து விடாதீர்கள்!



Click it and Unblock the Notifications





