ஒரு நீண்ட இலக்கு, மெதுவாக கால்நடையாக நடந்து சென்று இலக்கை சேர்வதை தான் ட்ரெக்கிங். நாம் பல இடங்களுக்கு ட்ரெக்கிங் போய் இருப்போம், மலைகள், சமவெளிகள், நீர்வீழ்ச்சி, நதிகள், பள்ளத்தாக்குகள் என இப்படி பலவற்றைக் கடந்து நாம் ட்ரெக்கிங் செய்திருப்போம். ஆனால் பனி மூடிய பாதைகளில் நடந்து, உறைந்த நதியைக் கடந்து, பனி மூடிய சிகரங்களை அடைந்து இருக்கிறீர்களா? நினைத்து பார்க்கவே அலாதியாக இருக்கிறது அல்லவா? ஆம், குளிர்காலம் வந்துவிட்டது! இந்தியாவின் பல இடங்களில் பனிப்பொழிவு தொடங்கிவிட்டது. பனியில் ட்ரெக்கிங் செல்வதற்கு இதுதான் சரியான நேரம் (நவம்பர் - பிப்ரவரி)! இந்தியாவில் பனி சிகரங்களின் மீது ட்ரெக்கிங் செல்வதற்கு பல இடங்கள் உள்ளன. அந்த அழகான இடங்களின் லிஸ்ட் இதோ!

சதார் ட்ரெக்கிங்
லடாக்கில் உள்ள சதார் ட்ரெக்கிங் இமயமலையில் மிகவும் சவாலான, அழகிய மற்றும் அற்புதமான குளிர்கால ட்ரெக்கிங் ஸ்பாட் ஆகும். மிகப்பெரிய மற்றும் செங்குத்தான பனி மலைகளால் சூழப்பட்டுள்ள இப்பகுதியில் வானிலை மிகவும் குளிராக இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில் அமைந்துள்ள சதாரின் முழு ட்ரெக்கிங்கை முடிக்கவும் தோராயமாக 7-9 நாட்கள் ஆகும். இந்த பயணத்தின் போது உறைந்த ஜன்ஸ்கர் ஆற்றின் மீதும் நீங்கள் நடந்து செல்வீர்கள்.

அலி பெட்னி புக்யால்
அலி பெட்னி ட்ரெக்கிங் எந்தப் பருவத்திலும் மலையேற்றப் பயணிகளை திகைக்க வைக்கும் ஒரு அனுபவத்தை வழங்கக்கூடிய இடமாகும். ட்ரெக்கிங் செய்து மிகவும் பிரபலமான இரண்டு மலைகளான திரிசூல் மவுண்ட் மற்றும் நந்தா குண்டி மலையின் மிக நெருக்கமான காட்சிகளை மறக்க வேண்டாம் பயணிகளே. நீங்கள் ஒரு அழகான தனிமைப்படுத்தப்பட்ட அனுபவத்தைத் தேடுகிறீர்களானால், கண்களை மூடிக்கொண்டு இதைத் தேர்ந்தெடுக்கவும்.

குவாரி பாஸ் ட்ரெக்கிங்
கம்பீரமான இமயமலை சிகரங்களின் மிகவும் நம்பமுடியாத காட்சிகளைக் காண நீங்கள் கட்டாயம் குவாரி பாஸ் ட்ரெக்கிங்க்கை தேர்ந்தெடுக்க வேண்டும். திபெத் எல்லை வரை நீண்டு கிடக்கும் சௌகாம்பா மலைத்தொடர், மனா, கமெட் மற்றும் அப்ல் கமின் ஆகிய மலைகளை நீங்கள் இந்த ட்ரெக்கிங்கில் கண்டு வியப்படையாமல் இருக்க முடியாது. இந்த ட்ரெக்கிங்கை முடிக்க தோராயமாக 4-6 நாட்கள் ஆகும்.

நாக் திப்பா ட்ரெக்கிங்
நாக் திப்பா அல்லது பாம்பின் சிகரம் என்றழைக்கப்படும் இந்த சிகரம் நாக் திப்பா மலைத்தொடரில் உள்ள மிக உயரமான சிகரமாகும். கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 9,924 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இது, புதிதாக ட்ரெக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கான சிறந்த குளிர்கால மலையேற்றங்களில் ஒன்றாகும். அழகான பந்தர்பூஞ்ச் சிகரம் மற்றும் கங்கோத்ரி சிகரங்கள், கேதார்நாத் சிகரம், சனாபாங்கின் பனி முகடுகள் மற்றும் டூன் பள்ளத்தாக்கு ஆகியவற்றைக் காணலாம்.

கேதார்கந்தா ட்ரெக்கிங்
இந்தியாவின் தலைசிறந்த குளிர்கால மலையேற்றங்களில் ஒன்றான கேதார்கந்தா குளிர்கால மலையேற்றமானது தொலைதூர கிராமங்கள், பரந்த மேய்ச்சல் நிலங்கள் மற்றும் புல்வெளிகள், பனி நிறைந்த பகுதிகள் மற்றும் பெரிய இமயமலையின் கம்பீரமான காட்சிகள் வழியாக உங்களை அழைத்துச் செல்லும் ஒரு அழகான பாதையாகும். மேலும் ஸ்வர்க்ரோஹினி, பந்தர்பூஞ்ச், கறுப்பு சிகரம் போன்ற பெரிய மலைத்தொடர்களின் மிக அற்புதமான காட்சிகளையும் நீங்கள் கண்டு மகிழலாம்.

பிரஷர் லேக் ட்ரெக்
ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டியில் இருந்து கிட்டத்தட்ட 50 கிமீ அமைந்துள்ள பிரஷர் லேக் ட்ரெக் ஒரு குளிர்கால ட்ரெக்கிங் ஆகும். ஆழமான நீல நீரைக் கொண்ட ஒரு அழகான ஏரியை அடைவதே இந்த ட்ரெக்கிங்கின் இலக்காகும். தௌலதார், பீர் பஞ்சால் மற்றும் கின்னவுர் மலைத்தொடர்களின் தெளிவான மற்றும் அற்புதமான காட்சிகளை கண்டு நீங்கள் வியக்கலாம்.

டோடிடல் ட்ரெக்கிங்
உயரத்தில் அமைந்துள்ள ஒரு வியத்தகு மற்றும் அழகிய பாதையான, டோடிடல் ட்ரெக்கிங் இந்தியாவில் டிசம்பரில் மலையேற்றம் செய்ய சிறந்த இடங்களில் ஒன்றாகும். இந்த நடைபயணம் அடிப்படையில் ஒரு வனப் பயணமாகும், குளிர்காலத்தில், நிலப்பரப்பு முற்றிலும் பனியால் மூடப்பட்டிருக்கும். டோடிடலைச் சுற்றியுள்ள பகுதிகள் விநாயகப் பெருமானின் உறைவிடம் என்று நம்பப்படுகிறது.

சோப்தா சந்திரசிலா ட்ரெக்கிங்
சோப்தா சந்திரசிலா மலையேற்றம் இமயமலையில் மிகவும் பிரபலமான மலையேற்றங்களில் ஒன்றாகும். உத்தரகாண்டின் கர்வால் பகுதியில் அமைந்துள்ள, இந்தியாவின் மிக உயரமான சிவன் கோவிலான துங்கநாத்துக்குச் செல்வதே இந்த ட்ரெக்கிங் ஆகும். கடல் மட்டத்திலிருந்து அதிகபட்சமாக 12,877 அடி உயரத்தில் அமைந்துள்ள இது, நந்தா தேவி, கேதார், திரிசூல் மற்றும் சௌகம்பா சிகரங்களின் மிக அழகான தரிசனத்தையும், கர்வால் இமயமலையின் அற்புதமான அனைத்தையும் தழுவும் காட்சியையும் உங்களுக்கு வழங்கும்

சக்டக்பு ட்ரெக்கிங்
"ட்ரெக்கர்ஸ் வொண்டர்லேண்ட்" என்று பரவலாக அறியப்படும் சக்டக்பு, மேற்கு வங்காளத்தில் உள்ள மிக உயரமான இடமாகும், இங்கு இருந்து உலகின் மிக உயரமான மலை சிகரங்களான எவரெஸ்ட், காஞ்சன்ஜங்கா, லோட்சே மற்றும் மகாலு போன்ற சில மறக்க முடியாத காட்சிகளைக் காணலாம். இந்த ட்ரெக்கிங் சற்றே கடினம் தான், ஆனால் மலையேற்றம் செய்பவர் உச்சியை அடையும் போது அழகான காட்சிகள் மற்றும் பிரமிக்க வைக்கும் அனுபவங்களைப் பெறுகிறார்.
மேலும், இரவு கூடாரங்களில் தங்கிவிட்டு, பகலில் ட்ரெக்கிங் செய்யலாம். நீங்கள் ட்ரெக்கிங் செய்யும் ஊர்களின் உள்ளூர் பழக்கவழக்கம், கலாச்சாரம், உணவு ஆகியவற்றை பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம். போகும் வழியெல்லாம் பனி உறைந்து கிடக்கும், போய் சேருமிடத்தை அடைந்தவுடன் இந்த மனித வாழ்வில் இதையெல்லாம் காணாமல் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை நீங்களே உணருவீர்கள். பனிப்பொழிவு ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவை நீங்கள் காணலாம். ஆகவே, இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!



Click it and Unblock the Notifications






