அம்பா நதிக்கரையில் பாலி மற்றும் மஹாத் எனப்படும் இரண்டு அஷ்டவிநாயக் கோயில்களுக்கிடையே இந்த துர்ஷேத் எனும் அமைதியான கிராமம் அமைந்துள்ளது. இது 42 ஏக்கர் அளவில் பரந்து காணப்படும் ஒரு வனப்பகுதியின் அங்கமாக உள்ளது. சஹயாத்ரி மலைகளின் மடியில் உருவாகியிருக்கும் இந்த கிராமம் நெடுஞ்சாலையிலிருந்து சற்று விலகி கோபோலி எனும் ஊருக்கு அருகில் உள்ளது. இது பார்ப்பதற்கு சாதாரணமா ஒரு சுற்றுலா என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இதன் உண்மையான திரில்லை அனுபவிக்க முழுவதும் படியுங்கள்.
புனே - மும்பைக்கு அருகில் உள்ள இடம்
இந்த சுற்றுலாத்தலம் மா, மற்றும் மாஹு மரங்கள் அடர்ந்த ஒரு பசுமையான தோப்புப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. நகரவாசிகள் சற்றே இயற்கையின் மடியில் இளைப்பாறுவதற்கேற்ற சிற்றுலாத்தலமாக இது பிரசித்தமாக அறியப்படுகிறது. மும்பை மற்றும் புனே போன்ற பெருநகரங்களுக்கு வெகு அருகே அமைந்திருப்பதால் அந்நகர மக்கள் இந்த சிற்றுலாத்தலத்தை வெகுவாக விரும்புகின்றனர்.
இது ஒரு பசுமைக்கிராமம்
துர்ஷேத் கிராமம் சஹயாத்ரி மலைகளின் அற்புதமான அழகை தரிசிக்க உகந்த ஸ்தலமாக இருப்பதோடு, இங்குள்ள வனப்பகுதிகளின் இயற்கை நடைப்பயணம் மேற்கொள்ளும்போது பலவகையான பறவைகளையும் பார்த்து மகிழும் வகையில் உள்ளது. பசுமைக்காட்சிகள் சூழ்ந்த இந்த நடைபாதைகளில் செல்லும்போது பலவிதமான அரிய பறவைகளின் ஒலிகள் நம் மனதில் மகிழ்ச்சியாக நிரம்புகின்றன. மேலும் மாசற்ற தூய்மையான காற்றும் குளுமையும் நம்மை தழுவி ஒரு விதமான சாந்த நிலையையும் இங்குள்ள சூழல் தருகிறது.
ஜொலிக்கும் விண்மீன்கள்
துர்ஷேத் கிராமம் குளுமையான காற்றை அனுபவிக்கவும் வானத்தில் நட்சத்திரங்களின் ஜொலிப்பை பார்த்து ரசிக்க மிகவும் ஏற்ற இடமாகும். மழைக்காலத்தில் இங்கு விஜயம் செய்தால் நாம் ஈர மண்ணின் வாசனையையும் இயற்கையில் எழிலையும் மிக அற்புதமாக அனுபவிக்கலாம். துர்ஷேத் ஸ்தலத்தின் விசேஷ அம்சங்கள் தன் பிரத்யேக இயற்கை அமைப்பு காரணமாக துர்ஷேத் கிராமம் மலையேற்றம் மற்றும் காட்டுச்சுற்றுலா போன்ற சாகச பொழுதுபோக்குகளுக்கு ஏற்ற இடமாக உள்ளது.
சிவாஜி மஹாராஜாவுடன் தொடர்பில் இருந்த கிராமம்
மேலும், இங்குள்ள பலி கணபதி கோயில் மற்றும் மஹாத் கணபதி கோயில் இரண்டும் ஆன்மீக யாத்ரீகர்கள் விரும்பி தரிசிக்கும் கோயில்களாக அமைந்துள்ளன. இந்த துர்ஷேத் கிராமம் பற்றிய ஒரு அதிகம் அறியப்படாத தகவல் இது சிவாஜி மஹாராஜ் கர்தலாப் கானை எதிர்த்து போரிட்ட உம்பர்கண்ட போரின் போர்க்களமாக இருந்துள்ளது என்பதாகும். துர்ஷேத் கிராமம் விமானம். ரயில் மற்றும் சாலை மார்க்கமாக்க எளிதில் பயணம் மேற்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
காடு சுற்றுலா
துர்ஷேத் கிராமப்பகுதி ஏராளமான தாவரவகைகள் மற்றும் காட்டுயிர்கள் போன்றவற்றை கொண்டுள்ளது. உயந்தோங்கி நிற்கும் சஹயாத்ரி மலைகளை பின்னணியில் கொண்டு இந்த பிரதேசம் அமைந்துள்ளது. எனவே இது இயற்கை மற்றும் காட்டுயிர் ஆர்வலர்களுக்கு ஏற்ற ஓரு ஸ்தலமாக விளங்குகிறது.
ஆர்வமூட்டும் அழகிய சுற்றுலா
இந்த துர்ஷேத் காடுகளின்வழியே மேற்கொள்ளப்படும் காட்டுச்சுற்றுலாவில் பயணிகள் இயற்கை எழிலையும் பசுமையையும் மிக அருகில் கண்டு ரசிக்கலாம். மேலும், இயற்கையான வனப்பகுதியில் சுதந்திரமாக திரியும் காட்டு விலங்குகளையும் பார்த்து ரசிக்கலாம்.இயற்கையின் அழகை ரசிப்பதற்கு இந்த காட்டுச்சுற்றுலாவை காட்டிலும் சிறந்த வழி வேறொன்றுமில்லை.
வரத வினாயக் கோயில்
வரத வினாயக் கோயில் துர்ஷேத் கிராமத்திற்கு அருகில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இது மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் 1725ம் ஆண்டு பேஷ்வா சர்தார் ராம்ஜி மஹாதேவ் வரத் வினாயக் பிவால்கர் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. சற்றே கால ஓட்டத்தால் பழமையடைந்து விட்டதால் வெளியிருந்து பார்ப்பதற்கு இது விசேஷமாக காட்சியளிக்காவிட்டாலும் உள்ளே நுழைந்து பார்த்தால் 25 அடி உயர கலச கோபுரத்தை காணலாம்.
விநாயகரின் அவதாரம்
இந்த கோயிலில் கணபதிக்கடவுளின் அவதாரமான வரத வினாயக் விக்ரகங்கள் இரண்டு உள்ளன. இவற்றில் இடப்புறம் உள்ள சிலை வெள்ளை பளிங்குக் கல்லினால் ஆனதாகவும் வலப்புறம் உள்ளது குங்குமத்தால் பூசப்பட்டும் காட்சியளிக்கின்றன. கோயிலின் வடக்குப்பகுதியில் கோமுக் எனப்படும் பசுமுக வடிவத்தை காணலாம். இதிலிருந்து புனித நீர் கொட்டுவது குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலின் மற்றுமொரு விசேஷமாக அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் நந்ததீபத்தை சொல்லலாம். இது 1892ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.