மஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த மலைவாசஸ்தலத்தின் பெயர் மஹாபலேஷ்வர். ரம்யமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்தப் பகுதி உலகில் என்றென்றும் பசுமையாக காணப்படும் இடங்களில் ஒன்று. தலை சுற்றவைக்கும் 4718 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த சுற்றுலா நகரம் 150 ச.கி.மீ அளவில் பரந்து காணப்படுகிறது. மஹாபலேஷ்வர் முக்கிய பெரு நகரங்களான மும்பை, புனே போன்றவற்றிலிருந்து முறையே 264 கி.மீ மற்றும் 117 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளதால் ஒரு பரபரப்பான பெரு நகர வாழ்க்கையிலிருந்து விலகி ஓய்வெடுக்க மிக பொருத்தமான மலை வாசஸ்தலமாக திகழ்கிறது. இது மராத்திஉலாவின் 4ம் பகுதி. வாருங்கள் சுற்றலாம்.
எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.
கோடை வாழிடம்
சிங்கன் எனும் அரசனால் இந்த இடம் கண்டறியப்பட்டு மஹாபலேஷ்வர் என்ற புகழ் பெற்ற கோயிலையும் அந்த அரசன் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அதன் பின்னர் 1819-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் வசம் இந்த இடம் அவர்களின் கோடை வாழிடங்களில் ஒன்றாக மாறியது.
பெயர்க்காரணமும், வேறு பெயரும்! மஹாபலேஷ்வர் என்னும் பெயருக்கு மஹா வலிமை கொண்ட கடவுள் என்பது பொருளாகும். இங்கு வெண்ணா, காயத்ரி, சாவித்ரி, கோன்யா மற்றும் கிருஷ்ணா போன்ற ஐந்து நதிகள் பாய்வதால் 'ஐந்து ஆறுகளின் ஸ்தலம்' என்றும் மஹாபலேஷ்வர் அறியப்படுகிறது. மேலும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மஹாபலேஷ்வர் மலைவாசஸ்தலம், 'மால்கம் பேத்' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.
கவின் கொஞ்சும் மலைச்சரிவுகள்!
மஹாபலேஷ்வரின் சொக்க வைக்கும் மலைச்சரிவுகளின் இயற்கை எழிலை காண வசதியாக 30 மலைக்காட்சித் தலங்கள் (வியூ பாயிண்ட்ஸ்) இங்கே அமையப்பெற்றுள்ளன. இவற்றிலிருந்து பார்க்கும் போது சுற்றிலும் உள்ள காடுகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் காட்டுயிர்கள் போன்றவற்றை தங்கு தடையின்றி பார்த்து ரசிக்கலாம்
மழைக்கால அருவிகள் மழைக்காலத்தின் போது மஹாபலேஷ்வர் பகுதி ஒரு சொர்க்கலோகம் போன்றே உருமாறி எங்கு திரும்பினாலும் பச்சை பசேல் என்றும், ஆரவாரித்துக் கொட்டும் அருவிகள் என்றும் பரவசப்படுத்தும் இயற்கை எழில் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது.
எலிஃபண்ட்ஹெட் பாயிண்ட்
மஹாபலேஷ்வரில் உள்ள எலிஃபண்ட்ஹெட் பாயிண்ட், யானையின் தலையையும் தும்பிக்கையையும் ஒத்திருப்பதால் அதற்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வியூ பாயிண்ட் சஹாயாத்ரி மலைத்தொடர் வரை பரந்து நீண்டிருக்கும் இயற்கை எழிலை பார்வையிடும் அனுபவத்தை ஏற்படுத்தி தருகிறது. இந்த எலிபண்ட் ஹெட் பாய்ண்டையும் அதன் அருகாமையிலுள்ள சுற்றுலாத் தளங்களையும் காண்போம் வாருங்கள்
நோய் போக்கும் நிவாரணி!
மஹாபலேஷ்வர் மலைப்பகுதி முழுக்க முழுக்க மிக அரிதான ஆயுர்வேத மூலிகைத் தாவரங்களால் நிரம்பி காணப்படுகிறது. அதோடு இங்குள்ள சுற்றுச்சூழல் மிகத்தூய்மையானதாகவும் இருப்பதால், நோய்வாய்ப்பட்டவர்கள் மஹாபலேஷ்வர் வந்து ஓய்வெடுப்பது உடல் நலத்துக்கும், துரித முன்னேற்றத்துக்கும் மிக நல்லது என்று சொல்லப்படுகிறது.
வியூ பாயிண்ட்ஸ்
வில்சன் பாயிண்ட் அல்லது சன்ரைஸ் பாயிண்ட் எனும் மலைக்காட்சித் தலம் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. அதற்கடுத்ததாக கன்னாட் சிகரம் மலைப்பள்ளத்தாக்குகளை ரசிக்க ஏதுவான காட்சி மையமாகும். இவற்றையடுத்து ஆர்தர் சீட், எக்கோ பாயிண்ட், எல்பின்ஸ்டோன் பாயிண்ட், மார்ஜரி பாயிண்ட் காட்சித் தலங்களும் அவசியம் பார்க்க வேண்டியவையாகும். மேலும் பாபிங்க்டன் பாயிண்ட், ஃபாக்லேண்ட் பாயிண்ட், கார்னாக் பாயிண்ட் மற்றும் பாம்பே பாயிண்ட் ஆகியவையும் மலையழகை கண்டு ரசிக்க ஏற்ற இடங்கள்.
Harsh Dubey
சுற்றுலாத் தலங்கள்
மஹாபலேஷ்வர் வரும் பயணிகள் வியூ பாயிண்ட்ஸ் முழுக்க பார்த்து ரசித்த பிறகு சைனாமேன் நீர்வீழ்ச்சி, தோபி நீர்வீழ்ச்சி, பிரதாப்கர் கோட்டை, எலிஃபண்ட்ஹெட் பாயிண்ட், மஹாபலேஷ்வர் கோயில் போன்ற இடங்களுக்கும் கண்டிப்பாக சென்றுவரவேண்டும்.
தோபி அருவி
மஹாபலேஷ்வரிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள தோபி அருவி 50 மீட்டர் உயரத்திலிருந்து ஆர்பரித்து விழுகிறது. இந்த அருவி கோய்னா பள்ளத்தாக்கில் விழுந்து, இறுதியில் கோய்னா ஆற்றில் சென்று கலக்கிறது. இது எல்பின்ஸ்டோன் மற்றும் லோட்விக் மலைக்காட்சித் தலங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.
PC: Shalini31786
பிரதாப்கட் கோட்டை
1856-ல் கட்டப்பட்ட பிரதாப்கட் கோட்டை மஹாபலேஷ்வரிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பெரிய பெரிய அறைகளையும், இயந்திரப்பொறிக் கதவுகளையும் கொண்டுள்ள இந்தக் கோட்டை, மாவீரர் சிவாஜியை எதிர்த்து போரிட்ட பீஜாப்பூர் சுல்தானின் தளபதி அஃப்சல் கானின் மரணம் நிகழ்ந்த இடமாகவும் வரலாற்றில் இடம் பெறுகிறது. அதோடு இந்தக் கோட்டையில் அஃப்சல் கானுக்கான சமாதி ஒன்றும், பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோயில் ஒன்றும் உள்ளது. மேலும் கோட்டைக்கு அருகாமையிலேயே ஒரு சிவன் ஆலயம் ஒன்றும் காணப்படுகிறது.
Capt. Anupam Prabhakara
தோம் அணை
மஹாபலேஷ்வரிலிருந்து 38 கி.மீ தொலைவில் உள்ள வாயி நகருக்கு அருகே கிருஷ்ணா நதிக்கு குறுக்கே தோம் அணை கட்டப்பட்டுள்ளது. 1976-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தோம் அணை 2,478 நீளம் கொண்டது. இந்த அணை மஹாபலேஷ்வர், பஞ்ச்கனி, வாயி போன்ற நகரங்களுக்கு நீர்த்தேவையை பூர்த்தி செய்வதுடன், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்ந்து வருகிறது.
வெண்ணா ஏரி
1842-ஆம் ஆண்டு சதாரா மன்னர் ஸ்ரீ அப்பாசாஹேப் அவர்களால் வெட்டுவிக்கப்பட்ட வெண்ணா ஏரி, மஹாபலேஷ்வர் ஸ்தலத்தின் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். எங்கும் பசுமையான மரங்கள் சூழ காட்சிதரும் வெண்ணா ஏரியில் உல்லாசமாக படகுப்பயணம் செய்து பயணிகள் பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.
Dinesh Valke
ஆர்தர்ஸ் சீட்
மஹாபலேஷ்வரிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஆர்தர்ஸ் சீட் மலைக்காட்சி தலத்துக்கு ஆர்தர் மேலட் என்ற ஆங்கிலேயரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பார்த்தால் தக்காண பீடபூமி மற்றும் கொங்கணப்பிரதேசம் இரண்டின் வித்தியாசமான அம்சங்களை தெளிவாக கண்டு ரசிக்கலாம். அதோடு இடது புறம் சாவித்திரி பள்ளத்தாக்கையும், வலது புறம் மற்றொரரு குறுகிய பள்ளத்தாக்கையும் பார்க்கலாம். மேலும் இந்த மலைக்காட்சி தலத்துக்கு கீழே அமைந்துள்ள விண்டோ பாயிண்ட் என்ற மற்றொரு மலைக்காட்சி தலத்திலிருந்து அருமையான இயற்கைக் காட்சிகளை காண முடியும்.
குதிரைச் சவாரி
மஹாபலேஷ்வர் வரும் பெரும்பாலான பயணிகள் குதிரைச் சவாரி செய்யாமல் ஊர் திரும்புவதில்லை. இந்த மலைவாசஸ்தலத்தின் முக்கியமான சுற்றுலாத் தலமான வெண்ணா ஏரிக்கு அருகில் பயணிகள் குதிரைச் சவாரியில் உல்லாசமாக ஈடுபடலாம்.
பழரசம் சாப்பிடலாம் வாங்கோ
மஹாபலேஷ்வரில் அமைந்துள்ள க்ரீம் கார்னர் என்ற ஐஸ்க்ரீம் பார்லரில் எக்கச்சக்கமான பழச்சாறு வகைகள் மற்றும் ஐஸ்க்ரீம் வகைகளை ருசி பார்க்கலாம். அவற்றில் மஹாபலேஷ்வரின் சிறப்புமிக்க பழங்களான ஸ்ட்ராபெர்ரி மற்றும் மல்பெர்ரி பழச்சாறுகள் தவறாமல் சுவைக்க வேண்டியவை.
காடுகளில் தவழலாம் வாங்க
மஹாபலேஷ்வர் காடுகளில் மான்கள், நரிகள், காட்டெருமைகள், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் புல்புல் போன்ற பறவையினங்களையும் சுற்றுலாப் பயணிகள் இங்கு கண்டு ரசிக்கலாம்.
வில்சன் பாயிண்ட்
வில்சன் பாயிண்ட் என்ற பெயர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மும்பை மாநகரின் கவர்னராக இருந்த சர் லெஸ்லி வில்சன் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. 1439 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றுள்ள வில்சன் பாயிண்ட்தான் மஹாபலேஷ்வரில் உயரமான இடத்தில் அமைந்துள்ள இடமாகும். இந்த மலைக்காட்சி தலத்தின் சிறப்பு, இங்கிருந்து சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்த்தமனம் இரண்டையும் கண்குளிர கண்டு ரசிக்கலாம் என்பதே.
எப்படி அடைவது?
மகாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா நகரங்களிலிருந்தும் அரசுப்பேருந்துகள் மஹாபலேஷ்வருக்கு இயக்கப்படுகின்றன. அதோடு மஹாபலேஷ்வரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள வாதார் ரயில் நிலையத்தின் வழியே புனே, மும்பை போன்ற முக்கிய நகரங்களிலிருந்து பல ரயில்கள் செல்கின்றன. எனவே வாதார் வந்து சேர்ந்த பின்னர் டாக்ஸி மூலம் மஹாபலேஷ்வர் ஸ்தலத்தை வந்தடையலாம். மேலும் மஹாபலேஷ்வரிலிருந்து 127 கி.மீ தூரத்தில் புனே விமான நிலையமும், 266 கி.மீ தொலைவில் மும்பை விமான நிலையமும் அமையப்பெற்றுள்ளன.