ஹரியானா மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது ஃபரிதாபாத். இவ்வூரை நிர்மாணித்த பாபா ஃபரித் என்பவரின் பெயரால் இவ்வூர் அழைக்கப்படுகிறது. இவர் இங்கு கட்டிய கோட்டை, மசூதி மற்றும் ஒரு தொட்டி ஆகியவை இன்று சிதைத்துபோன நிலையில் காணப்படுகின்றன. டெல்லி குர்கான் மற்றும் உத்திர பிரதேசத்தின் பகுதிகளால் இந்நகரம் சூழப்பட்டுள்ளதால் புவியியல் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. யமுனை நதிக்கு அருகில் உள்ள இந்த நகரம் டெல்லியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தொழில் சார்ந்த மையமாக விளங்கும் ஃபரிதாபாத் பல பொருட்களின் தயாரிப்பில் முதன்மையாக விளங்குகிறது.
ஃபரிதாபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள் பத்கல் ஏரி, சூரஜ்குந்த் ராஜா நஹர் சிங் அரண்மனை, ஷிர்தி சாய் பாபா கோவில், சிவன் கோவில், புனித மேரி ஆர்த்தோடாக்ஸ் தேவாலயம், தௌஜ் ஏரி, ஆரவல்லி ஃகோல்ப் கோர்ஸ், நஹர் சிங் கிரிக்கெட் விளையாட்டரங்கம், நகர பூங்கா, ஜர்னா மந்திர் கிராமம், மொஹப்தபத், ஃபரீத் கானின் கல்லறை, மாதா வைஷ்னோ தேவி மந்திர் சன்ஸ்தான் மற்றும் ஃபரிதாபாத் அனல்மின் நிலையம் போன்றவைகள் தான் இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களாகும். ஃபரிதாபாத்தின் வானிலை மழைக்காலத்தை தவிர ஃபரிதாபாத்தின் மற்ற அனைத்து காலங்களிலும் வானிலை மிதவறட்சியுடன் அதிக வெப்பத்துடன் இருக்கும். இருப்பினும் பருவமழைக்காலங்களில் ஈரப்பதத்தின் அளவு அதிகமாகவே இருக்கும்.
சூரஜ்குந்த் என்பது ஃபரிதாபாத்தில் உள்ள மற்றொரு புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த ஏரி குறியீட்டு முக்கியத்துவம் பெற்றதாகும். உதிக்கும் சூரியனை குறிப்பிடுவதாக விளங்குகிறது இந்த ஏரி. பாறைகளை குடைந்து செய்யப்பட்ட படிகளால் சூழப்பட்டுள்ளது இந்த புகழ் பெற்ற சுற்றுலாத் தலம். தெற்கு டெல்லியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்குள்ள சித்தாகுந்தில் உள்ள நீருக்கு குணப்படுத்தும் சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது. சூரஜ்குந்த் வளாகத்தில் அழகிய தோட்டம் ஒன்றும் உள்ளது.
பிப்ரவரி மாதம் முதல் தேதி முதல் 15-ஆம் தேதி வரை புகழ் பெற்ற சூரஜ்குந்த் சர்வதேச திருவிழா இங்கு நடைபெறும். கைத்திறத் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களால் செய்யப்பட கைத்தறி பொருட்களும் கலைப் பொருட்களும் இந்த மேளாவில் வைக்கப்படும். இது இந்தியாவின் கிராமிய நிறத்தை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும். திருவிழாவின் போது நாட்டுப்புற நடனங்கள், கச்சேரிகள், கழைக்கூத்துகள், மேஜிக் ஷோ போன்றவைகள் நடைபெறும். இந்த மேளாவை கண்டுகளிக்க உலகின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு. இந்திய உணவு வகைகளும் இந்த மேளாவில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கட்டடக் கலைக்கு பெயர் பெற்ற ராஜா நஹர் சிங் அரண்மனை, 18-ஆம் நூற்றாண்டில் ஜட் நஹர் சிங் அவர்களின் முன்னோர்களால் கட்டப்பட்டதாகும். இந்த அழகிய அரண்மனை 1850-ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. தெற்கு டெல்லியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அரண்மனையை பல்லப்கர் கோட்டை அரண்மனை என்றும் அழைக்கின்றனர். ராஜா நஹர் சிங் என்பவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர். இந்த அரண்மனையில் அழகிய காட்சிக் கூடங்களையும் அரசவை கூடங்களையும் காணலாம். இங்கு காணப்படும் செதுக்கிய வளைவுகளும் அழகாக அலங்கரிக்கப்பட்ட அறைகளும் நம்மை வரலாற்று காலத்துக்குள் இழுத்துச் சென்று விடும். தற்போது இது ஹெரிடேஜ் சொத்தாக விளங்குகிறது. இதனை சுற்றி பல நகர மையங்களும் அமைந்துள்ளன. இந்த கம்பீரமான அரண்மனை பல சுற்றுலா பயணிகளை ஈர்த்த வண்ணம் உள்ளது.