பிப்ரவரி மாதம் வந்தாலும் கூட இன்னும் பனி குறைந்த பாடில்லையே, என நீங்கள் நினைக்கலாம், ஆனால் இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த சூழல் மறைந்த வெயில் வாட்டி வதைக்க ஆரம்பித்து விடும். அதற்குள் நாம் முந்திக் கொள்ள வேண்டும்! அதனால் பனியும், குளிரும் இருக்கும் போதே கண்கவர் வகையில் நம்மை வரவேற்கும் சில அழகான சுற்றுலாத் தலங்களை ரசிப்பதற்கு இதுவே நேரம். இன்றிலிருந்து அடுத்த 20 நாட்களுக்குள் ஒரு சின்ன பிரேக் எடுத்து தமிழ்நாட்டில் அமைந்துள்ள இந்த அழகான சுற்றுலாத் தலங்களை காணத் தவறாதீர்கள்! ஆம்! நீங்கள் பிப்ரவரி மாதத்தில் தவறவிடக்கூடாத தமிழ்நாட்டு சுற்றுலாத் தலங்களின் லிஸ்ட் இதோ!

ஊட்டி
மலைகளின் ராணி என்று செல்லமாக அழைக்கப்படும் ஊட்டி தமிழ்நாடு என்ற அழகிய கன்னியின் கிரீடம் போன்றவள். 2240 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஊட்டி தமிழ்நாட்டின் குளிர்ச்சியான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும். மலைச் சரிவுகளில் பயமுறுத்தும் வளைவுகள் வழியாகச் செல்லும் நீலகிரி மலை ரயில் ஊட்டியின் அழகிய நிலப்பரப்புகளைக் காண, ரோஜா தோட்டம், தொட்டபெட்டா சிகரம், பைகாரா ஏரி, தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி, தேயிலை அருங்காட்சியகம் மற்றும் மான் பூங்கா ஆகியவற்றை சுற்றிப் பார்க்க இது ஒரு அருமையான வாய்ப்பாகும். நீங்கள் ஆண்டு முழுவதும் ஊட்டிக்கு செல்லலாம், ஆனால் அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் ஊட்டிக்கு செல்வது சிறந்தது. இரவில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது.
வால்பாறை
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ள இந்த வால்பாறை அணைகள், தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், குன்றுகள், காடுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கி பார்வையாளர்களை தன்வசப்படுத்துகிறது. சோலையார் அணை, தேயிலை தோட்டம், காட்டு மரக் குடிசைகள், நீரார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, வெள்ளமலை சுரங்கப்பாதை ஆறு, பிரலா நீர்வீழ்ச்சி, சின்ன கல்லார் நீர்வீழ்ச்சி, பாலாஜி கோயில், இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா ஆகியவை நீங்கள் இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

மசினகுடி
பசுமையான காடுகள், அழகான நீர்வீழ்ச்சிகள் மற்றும் அற்புதமான நிலப்பரப்புகளால் நிறைந்துள்ள மசினகுடி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மற்றும் அழகான மலைவாசஸ்தலமாகும். விலங்குகளை கண்டறிவது, மீன் பிடிப்பது, ஜீப்புகளில் சஃபாரி, தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்வது, மாயார் ஆற்றங்கரையிள் படகு சவாரி செய்வதுடன், முதுமலை மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தையும் கண்டு களிக்கலாம்.
கொழுக்கு மலை
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் கேரள எல்லையில் அமைந்துள்ள கொழுக்கு மலை ஒரு அழகிய மலைவாசஸ்தலமாகும். கடல் மட்டத்திலிருந்து 7,000 அடி உயரத்தில், உலகின் மிக உயரமான தேயிலைத் தோட்டங்களைக் கொண்டுள்ள கொழுக்கு மலை பயணிகளால் அதிகம் தீண்டப்படாத அழகிய இடமாகும். எங்கு பார்த்தாலும் பசுமை, குளிர்ந்த வானிலை, போதை தரும் இயற்கை அழகு ஆகியவை உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.

கொடைக்கானல்
பழனி மலையின் சரிவுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள கொடைக்கானல், தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான தேனிலவு மலைவாசஸ்தலமாகும். மூடுபனி மலை உச்சிகளும், மாய பள்ளத்தாக்குகளும், உருளும் மேய்ச்சல் நிலங்களும், பசுமையான சரிவுகளின் கம்பளமும் நிறைந்த நிலப்பரப்பை நீங்களே கற்பனை செய்து பாருங்கள், கொடைக்கானல் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியும். கொடைக்கானல் ஏரி, பில்லர் ராக்ஸ், கொக்கர் வாக், பெரிஜாம் ஏரி, பிரையன்ட் பூங்கா, சில்வர் கேஸ்கேட் ஃபால்ஸ், பைன் காடுகள், கரடி ஷோலா நீர்வீழ்ச்சி, குக்கல் குகைகள் ஆகியவை இங்கே நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
மேகமலை
தேனியில் இருந்து 55 கிமீ தொலைவிலும், கூடலூரில் இருந்து 59 கிமீ தொலைவிலும், குமளியில் இருந்து 92 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள மேகமலை தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய ஹில் ஸ்டேஷனாகும். 'ஹைவேவிஸ் மலைகள்' என்று பிரபலமாக அழைக்கப்படும் மேகமலை, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு ஆராயப்படாத சொர்க்கமாகும். நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து அமைதியான ஒரு இடைவெளியை நீங்கள் தேடுகிறீர்களானால், மேகமலை உங்களுக்கு ஒரு சரியான தேர்வாகும்.

ஏற்காடு
கிழக்குத் தொடர்ச்சி மலையில் செவராய் மலையில் அமைந்துள்ள ஏற்காடு தமிழ்நாட்டின் பிரபலமான புத்துணர்ச்சியூட்டும் மலைவாசஸ்தலமாகும். 1,623 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய மலைவாசஸ்தலம் ஆரஞ்சு தோப்புகள், பழங்கள் மற்றும் மசாலா தோட்டங்கள், ஓக் மற்றும் சந்தன காடுகள் மற்றும் காபி எஸ்டேட்டுகளுக்கு பெயர் பெற்றது. இங்கு, நீங்கள் தாவரவியல் பண்ணை, எமரால்டு ஏரி, பகோடா பாயின்ட், மான் பூங்கா, கரடி குகை, பட்டுப் பண்ணை, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, டிப்பரரி வியூ பாயின்ட் மற்றும் ஷெவராய் கோயில் ஆகியவற்றைப் பார்வையிடலாம்.
இவற்றில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு குட்டி ட்ரிப் சென்று வந்து விடுங்கள்!



Click it and Unblock the Notifications



