உத்தரப்பிரதேச மாநிலம் பல்வேறு மதச்சிறப்புகளையும், புராதான கட்டிடங்களையும், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், விலங்கு நல சரணாலயங்கள், நதிகள் என பல்வேறு சுற்றுலா சிறப்புகளையும் கொண்டதாகும். உத்தரப்பிரதேசத்துக்கு சுற்றுலா வருபவர்கள் மிர்சாபூரை தவறவிடக்கூடாது. உத்திரபிரதேசத்தில் மிர்சாபூர் நகரைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் மாவட்டம் மிர்சாபூர். பல்வேறு மலைத்தொடர்களும், ஆங்கிலேயர் கால வரலாற்றுக் கட்டமைப்புக்களும் மிர்சாபூரின் சிறப்புக்களாகும். 5000-கி.முக்கு முன்னரே மனித நாகரிகம் குறித்த வரலாற்றுத் தகவல்கள் இருந்தாலும், மிர்சாபூரை 1735 ஆண்டு உருவாக்கியது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி தான். பேலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் கிடைத்த முலாம் பூசப்பட்ட பாறைகளும், பல்வேறு முக்கிய தொல்பொருட்களும், பழைய கற்காலத்தைச் சேர்ந்தவை என்பதற்கு ஆதாரமாக விளங்குகிறது. விந்தியத் தொடர்ச்சி மலையில் கிடைத்த கல்வெட்டுக்கள் மூலம் 17000 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் பலவற்றை இங்கு அறியமுடிகிறது. இங்கு திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அவற்றையும், மிர்சாபூரைச் சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்களையும் இந்த பதிவில் காணலாம்.
நர் மலைத்தொடர்கள்
வரலாற்று சிறப்புகளோடு நின்றுவிடாமல், அழகிய மலைத்தொடர்கள், தண்டா அருவி, சிருசி மற்றும் மேஜா அணைகள் என நம் கண்களுக்கு விருந்து படைக்கும் அழகிய இடங்களைக் கொண்ட இடம் மிர்சாபூர். பல்வேறு மலைத்தொடர்களில் பக்கா மற்றும் நர் மலைத்தொடர்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றை கண்டுகளிப்பதற்கு தனியாக இரண்டு கண்களே வேண்டும். ஆம் அத்தனை அழகையும் தன்னுள்ளே கட்டிக்கொண்டுள்ளது இந்த இடம்.
Utkarshsingh.1992
கண்காட்சி மற்றும் திருவிழாக்கள்
ஒவ்வொரு ஊரின் பாரம்பரியமே அவ்வூர் விழாக்களில்தான் அதிகம் வெளிப்படுத்தப்படும். கோயில்களும், விழாக்களும் அதனுடன் சேர்ந்த கண்காட்சிகளும் தங்கள் கலாச்சாரத்தை வெளியுலகத்துக்கு பறைசாற்றும். பல்வேறு கண்காட்சி மற்றும் திருவிழாக்கள் மிர்சாபூரில் நடைபெறுவது உண்டு. அதில் முக்கியமானவை, ஒஜ்ஜாலா மேலா, விந்தியவாசினி ஜெயந்தி சமோரா, ஜூலானோட்சவம், லோகந்தி மேலா, கந்தித மேலா போன்றவையாகும். மிர்சாபூரில், சூனார் கோட்டை மற்றும் கால பைரவ கோவிலையும் கண்டுகளிக்க முடியும்.
கந்தித மேளா
விழாக்கள் சகோதரத்துவத்தை மேம்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும் கொண்டாடப்படுவதே. உலக மக்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும் விதமாக கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாவாக கந்தித மேளா பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து உற்சாகமாக கொண்டாடி மகிழும் திருவிழாவாகத் திகழ்கிறது கந்தித மேளா.
Sakshverma
ஒஜாலா திருவிழா
மிர்சாபூரில் நடைபெறும் பிரபலமான திருவிழா ஒஜாலா மேலா. ஒஜாலா என்னும் ஆறு அங்கு ஓடுவதால், இத்திருவிழாவிற்கு ஒஜாலா திருவிழா என்று பெயர்வந்தது. வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் இத்திருவிழாவைப் பார்வையிட, உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் ஏராளமானோர் ஆர்வத்தோடு வருகின்றனர். இந்த ஆற்றின் அழகில் உங்களை மெய்மறந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
Sakshverma
லோகந்தி மேலா
மிர்சாபூரில் இருந்து 2 கிமீ தொலைவில் இருக்கிறது ஹனுமான் கோவில். இந்தக் கோவிலில் நடக்கும் திருவிழா லோகந்தி மேலா என்பதாகும்.
கார்த்திகைப் பௌர்ணமி மற்றும் சாவான் இந்து மாதம் பிரதி சனிக்கிழமைகளில் இத்திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் உடைகள், உணவுப் பொருட்கள் மற்றும் நினைவுப்பொருட்கள் போன்றவை கண்காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படுகின்றது.
Sattiskumar Kesavalu
கஜாரி மஹோட்சவம்
மிர்சாபூரில் கொண்டாடப்படும் புகழ் பெற்ற பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது கஜாரி மஹோட்சவம். கந்தித அரசரின் மகள் கஜாலி. கணவரை நினைத்து கஜாலி அருமையான பல பாடல்களைப் பாடியுள்ளார்.
அது சோகமான காதல் பாடல்கள். ஆனால் கடைசிவரை கணவரை பார்க்கமலே இறந்துவிட்டாள். கஜாரி மஹோட்சவம், கஜாலிக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது.
SriVSitaraman
ஜூலானோட்சவம்
ஜூலானோட்சவம் என்பது இங்கிருக்கும் மூன்று கோவில்களில் நடக்கும் இந்துத் திருவிழாக்கள். ஸ்ரீ துவரகாதேவி கோவில், கங்கை யமுனா சரஸ்வதி கோவில் மற்றும் குஞ் புவன் கோவில் என இம்மூன்று கோவில்களில் விமரிசையாக நடக்கும் இத்திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். பொதுவாக வெயில் காலத்தில் இந்தத் திருவிழா நடைபெறுகிறது.
calliopejen
தண்டா அருவி
மிர்சாபூரில் அமைந்திருக்கும் தண்டா நீர்வீழ்ச்சி அங்கிருக்கும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இயற்கையான நீர் ஓடைகள் மற்றும் உறுதியான அணைகள் நம் கண்களுக்கு விருந்தாக அமைவதோடு, நம் மனதுக்கு அமைதியைத் தருகிறது.
மிர்சாபூரில் இருந்து 14 கிமீ தெற்கே அமைந்துள்ள தண்டா அருவிக்கு செல்ல பேருந்து வசதிகள் உண்டு. மழைக் காலத்தில் சென்றால், அருவியையும் அதனைச் சுற்றியுள்ள இயற்கைய் அழகையும் வெகுவாக ரசிக்கலாம்.
VinothChandar