அஸ்ஸாம் மாநிலத்திலேயே மிகப்பெரிய நகரமாக அமைந்திருக்கும் குவஹாத்தி நகரம் வட கிழக்கு இந்தியாவின் நுழைவாயிலாக வீற்றிருக்கிறது. பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த வசீகர நகரம் அஸ்ஸாம் மாநிலத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. கலாச்சாரம், வணிகம், மற்றும் ஆன்மீக செயல்பாடுகள் போன்றவற்றுக்கான கேந்திரமாக இந்த நகரம் திகழ்வது குறிப்பிடத்தக்கது. இந்த நகரத்திலிருந்து காசிரங்கா தேசிய பூங்காவுக்கு எப்படி செல்வது வழியில் காணவேண்டிய இடங்களைப் பற்றியும் இந்த பதிவில் காண்போம்.
வரலாற்று செழுமை
பிரக்ஜொதீஸ்பூர் எனும் பொருள் பொதிந்த வரலாற்றுப்பெயரால் ஒரு காலத்தில் குவஹாத்தி நகரம் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. இதன் பொருள் ‘கிழக்கின் வெளிச்சம்' என்பதாகும். அசுர வம்சத்தை சேர்ந்த நரகாசுர மன்னனின் தலைநகரமாக இந்த நகரம் மஹாபாரத புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சுற்றுலா அம்சங்கள்
குவஹாத்தி நகரத்தின் சுற்றுலா அம்சங்கள் என்று பார்த்தால் குவஹாத்தி நகரத்தில் பயணிகள் ரசிக்கக்கூடிய ஏராள அம்சங்கள் நிறைந்துள்ளன. காமாக்யா கோயில் குவஹாத்தி நகரத்தின் பிரதான கவர்ச்சி அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. இது தவிர பிரம்மபுத்திரா ஆற்றின் கரையிலிருந்து சரியாகாட் பாலத்தின் அழகை பார்த்து ரசிக்கும் அனுபவமும் குறிப்பிடத்தக்க ஒன்று. அஸ்ஸாம் ஸ்டேட் மியூசியம், குவஹாத்தி பிளானட்டேரியம் ஆகியவையும் இந்நகரத்தில் தவறாமல் விஜயம் செய்ய வேண்டிய அம்சங்களாகும்.
எப்படி செல்வது
குவஹாத்தியிலிருந்து காசிரங்கா தேசியப்பூங்காவுக்கு 193 கிமீ ஆகும். இது பிரம்மபுத்திரா நதிக்கரையோர பயணமாக இருக்கும். அதிகபட்சம் 4 மணி நேரத்தில் இந்த இடத்திலிருந்து காசி ரங்கா தேசியப் பூங்காவை அடையமுடியும்.
காஸிரங்கா தேசிய பூங்கா
அஸ்ஸாம் மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கும் இடங்களில் ஒன்றாக காஸிரங்கா தேசிய பூங்கா உள்ளது. அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான இந்திய காண்டாமிருகங்களையும், 2006-ம் ஆண்டில் புலிகள் பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு உலகிலேயே அதிக அடர்த்தியில் புலிகளை உடைய இடமாகவும் இந்த தேசிய பூங்கா உள்ளது. இது மட்டுமல்லாமல் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரப்பளவு
இந்த தேசிய பூங்கா சுமார் 429.93 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகாட் மற்றும் நோவாகோன் மாவட்டங்களில் இந்த பூங்கா அமைந்துள்ளது. ஓற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் அல்லது புலிகளைப் பார்ப்பதுடன் காஸிரங்கா சுற்றுலாப் பயணம் முடிவடைந்து விடாமல் இன்னும் நிறைய விசயங்களை இங்கு நாம் காண முடியும்.
விலங்குகளும் சுற்றுலாவும்
காஸிரங்காவில், மிகப்பெரிய உடலமைப்பை உடைய தாவர உண்ணிகளான ஆசிய யானைகள், ஆசிய நீர் எருமைகள் மற்றும் சேற்று மான்கள் ஆகியவற்றையும் இங்கே பரந்து விரிந்திருக்கும் நிலப்பகுதிகளில் காண முடியும். இந்த சரணாலயத்தில் பறவைகளை பாதுகாப்பதற்காக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளின் காரணமாக பேர்டு லைஃப் இண்டர்நேஷனல் அமைப்பு இந்த தேசிய பூங்காவை முக்கியமான பறவைகள் பாதுகாப்பு மையங்களில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளது.
யானை சவாரிகள்
தேசிய பூங்காவிற்குள் யானை பாகன்களின் வழிகாட்டுதல்களுடன் செய்யப்படும் யானை சவாரிகள் காஸிரங்கா சுற்றுலாவின் முக்கிய அம்சம் நன்கு பயிற்சி பெற்ற பாகன்களின் துணையுடன் காடுகளுக்குள் சுற்றித் திரிவது காஸிரங்கா சரணாலயத்தின் மிகவும் கவர்ச்சியான அம்சமாகும்.
பதிவு செய்ய வேண்டும்
பிரம்மாண்டமான விலங்குகளை அருகில் நின்று ரசிப்பதற்கான ஒரு பயணமாகவே இது உள்ளது. இவை மட்டுமல்லாமல் ஜீப்கள் மற்றும் 4WD வாகனங்களிலும் இந்த தேசிய பூங்காவை சுற்றிப் பார்க்க முடியும். இந்த வாகனங்களை பூங்காவின் நிர்வாக அலுவலகத்தில் முன்னதாகவே பதிவு செய்ய வேண்டியது அவசியம்.