அஸ்ஸாம் மாநிலத்திலேயே மிகப்பெரிய நகரமாக அமைந்திருக்கும் குவஹாத்தி நகரம் வட கிழக்கு இந்தியாவின் நுழைவாயிலாக வீற்றிருக்கிறது. பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த வசீகர நகரம் அஸ்ஸாம் மாநிலத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. கலாச்சாரம், வணிகம், மற்றும் ஆன்மீக செயல்பாடுகள் போன்றவற்றுக்கான கேந்திரமாக இந்த நகரம் திகழ்வது குறிப்பிடத்தக்கது. பல மதப்பிரிவுகள் மற்றும் இனப்பிரிவுகளை சேர்ந்த மக்கள் இந்நகரத்தில் பல்லாண்டுகளாக வசித்து வருவதும் இதன் சிறப்பம்சமாகும்.
குவஹாத்தி – வரலாற்று செழுமை
பிரக்ஜொதீஸ்பூர் எனும் பொருள் பொதிந்த வரலாற்றுப்பெயரால் ஒரு காலத்தில் குவஹாத்தி நகரம் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. இதன் பொருள் ‘கிழக்கின் வெளிச்சம்’ என்பதாகும்.
அசுர வம்சத்தை சேர்ந்த நரகாசுர மன்னனின் தலைநகரமாக இந்த நகரம் மஹாபாரத புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முகலாய மன்னர்கள் பல முறை அஸ்ஸாம் பகுதியை ஊடுறுவ முயன்ற போதிலும் அவர்கள் குவஹாத்தி நகரத்திலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கின்றனர்.
குவஹாத்தி நகரத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்கள்
சுற்றுலா அம்சங்கள் என்று பார்த்தால் குவஹாத்தி நகரத்தில் பயணிகள் ரசிக்கக்கூடிய ஏராள அம்சங்கள் நிறைந்துள்ளன. காமாக்யா கோயில் குவஹாத்தி நகரத்தின் பிரதான கவர்ச்சி அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.
இது தவிர பிரம்மபுத்திரா ஆற்றின் கரையிலிருந்து சரியாகாட் பாலத்தின் அழகை பார்த்து ரசிக்கும் அனுபவமும் குறிப்பிடத்தக்க ஒன்று. அஸ்ஸாம் ஸ்டேட் மியூசியம், குவஹாத்தி பிளானட்டேரியம் ஆகியவையும் இந்நகரத்தில் தவறாமல் விஜயம் செய்ய வேண்டிய அம்சங்களாகும்.
குவஹாத்தி டூரிஸம் – ஒரு அறிமுகம்!
இந்தியாவின் வட கிழக்கு பிராந்தியத்தின் கேந்திரமாக இயங்குவதால் இது வணிக ரீதியில் பரபரப்பான நகரமாக காணப்படுகிறது. மேலும் கிழக்குப்பிராந்தியத்திற்கான விமான நிலையம் மற்றும் பெரிய ரயில் நிலையம் அமைந்திருக்கும் நகரமாகவும் இது புகழ் பெற்றுள்ளது.
மேகாலயா போன்ற மாநிலங்களுக்கான இணைப்பு நகரமாகவும் இது செயல்படுகிறது. குவஹாத்தி நகரம் ஒரு முக்கியமான கல்விக்கேந்திரமாகவும் அறியப்படுகிறது. ஒரு பிரத்யேக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’ கல்வி மையத்தை இந்நகரம் கொண்டிருக்கிறது.
இது தவிர டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷல் சைன்சஸ் தனது வட கிழக்கு பிராந்தியத்திற்கான மையத்தை இந்நகரில் ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச பள்ளிகள் மற்றும் பிரபலமான கல்லூரிகள் போன்றவையும் இங்கு அதிகம் அமைந்துள்ளன.
கலாச்சார ரீதியாகவும் குவஹாட்டி நகரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது. ஷீமண்ட சங்கர்தேவா கலாஷேத்ரா எனும் மையம் இந்நகரத்தின் கலாச்சார அடையாளமாக அமைந்திருக்கிறது.
இந்த மையத்தில் பிஹு மற்றும் பண்டிகைகள் உள்நாட்டு பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
குவஹாத்தி நகரத்திற்கான பயண வசதிகள்
நாட்டின் இதர பகுதிகளுடன் நல்ல முறையில் போக்குவரத்து வசதிகளால் குவஹாத்தி நகரம் இணைக்கப்பட்டிருக்கிறது. வட கிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய ரயில் நிலையத்தை இது கொண்டிருக்கிறது.
லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையம் இந்த நகரத்திற்கு மட்டுமல்லாமல் சுற்றியுள்ள பகுதிகளுக்குமான முக்கியமான விமான போக்குவரத்து கேந்திரமாக அமைந்துள்ளது.
இவை தவிர சாலை மார்க்கமாகவும் குவஹாத்தி நகரம் நாட்டின் பிற பகுதிகளுடன் நல்ல முறையில் இணைக்கப்பட்டிருக்கிறது.
குவஹாத்தி பருவநிலை
வருடமுழுதுமே மிதமான பருவநிலையை குவஹாத்தி நகரம் கொண்டிருக்கிறது. இப்பகுதியின் சராசரி வெப்பநிலை 30°C முதல் 19°C வரை காணப்படுகிறது. கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகிய மூன்று முக்கியமான பருவகாலங்களை இப்பகுதி கொண்டிருக்கிறது.