குழந்தைகளுடன் வெளியில் செல்லும்போது பெற்றோர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை பற்றி தெரியுமா? வாருங்கள் இந்த கட்டுரையில் காண்போம்.
குழந்தைகளை கவனமாக பார்ப்பது என்பது ஒரு கலை. அது சிலருக்கு மட்டுமே சாத்தியம். தற்போதுள்ள முக்கால்வாசி பெற்றோர்கள் அந்த டிரிக்ஸ் பற்றி அறியாமல், குழந்தைகளை சரியாக பேணாமல், அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறுவதற்கு காரணமாகின்றனர். குழந்தைகளை பள்ளியில் போட்டு அமுக்குவதால் அவர்கள் ஆகச் சிறந்த அறிவாளியாகிவிடப்போவதில்லை.
அந்தந்த வயதில் வரும் ஆசைகளையும், தேவைகளையும் அவர்களுக்கு கொடுப்பதே உண்மையான குழந்தை வளர்த்தல். மனம் அமைதியாக இருக்கும்போதுதான் கல்வியும் வரும். எல்லாவித அழுத்தத்தினால் மனம் சிறுவயதிலேயே பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. சரி அப்படியென்றால் என்ன செய்யலாம்.. நிச்சயமாக ஒரு நல்ல பெற்றோர், குழந்தைகளை வாரம் ஒருமுறையாவது வெளியில் அழைத்துச் செல்லவேண்டும். அப்படி சுற்றுலா செல்லும்போது குழந்தைகளை பேண சில டிப்ஸ் இதோ...
எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்
நேரத்தை தாராளமாக்குங்கள்
இறுதி நேர அவசரத்தில் எங்கேயும் கிளம்பவேண்டாம். முன்கூட்டியே திட்டமிட்டு தாராளமாக நேரம் ஒதுக்கி அமைதியாக கிளம்புங்கள். இதனால் உங்கள் குழந்தைகளுக்கு தேவையானவற்றை மறக்காமல் எடுத்து வைக்கவும், அவர்களின் மனநிலை அறிந்து மகிழ்வாக கிளம்ப முடியும்.
கோபம்
ஒருவேளை அதிரிபுதிரியாக அவசரமாக கிளம்ப நேர்ந்தால், அது உங்களுக்கு சில மறதிகளை உருவாக்கும்.
உங்கள் வேலையை ரெட்டிப்பாக்கும், இதனால் உங்கள் மனம் நோகும் எரிச்சல் உண்டாகும்.
கோபத்தில் வேகமாக செயல்படுவீர்கள். நீங்கள் செய்த பிழைகளுக்காகவும் கூட குழந்தைகளை கண்டிப்பீர்கள். இதனால் மொத்த பயணமும் அம்பேல்...
புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
வெகு தூரம் பயணிக்கும் போது குழந்தைகளுக்கு தேவையான காமிக்ஸ், கார்ட்டூன் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அது அவர்களின் நேரத்தை இனிமையாக செலவிட உதவும்.
தேவையற்ற அறிவியல் வளர்ச்சி
என் குழந்தையும் கேம் விளையாடுகிறது, என் குழந்தையும் செல்பி எடுக்கிறது என்று மார்தட்டிக் கொள்ளும் பெற்றோர்களுக்கு, பயணங்களின்போது அதுவே பெரிய பிரச்சனையாக மாறிவிடுகிறது.
முக்கியமான நேரங்களிலும் கூட பிள்ளைகள் பெற்றோரின் மொபைல்களை வாங்கி கேம் விளையாட துடிக்கின்றனர். புத்தகம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, குழந்தைகளுக்கு தேவையற்ற அறிவியலை புறந்தள்ளி வையுங்கள். சீரான வளர்ச்சியை அடையட்டும் பிள்ளைகள்.
கேமராவை பழக்குங்கள்
சமூகத்தை உற்று நோக்கும் சில நல்ல அறிவியல் வளர்ச்சிகளை குழந்தைகளுக்கு அளிக்கலாம். புகைப்படமெடுக்கக் கற்றுக்கொடுக்கலாம். இது நம் கண்முன் நடக்கும் சில நல்ல விசயங்களை நாம் கூறாமலே கவனிக்கும் திறனை குழந்தைகளிடேயே வளர்க்கும்.
எப்போ பாரு செல்ஃபிகளை எடுத்து முக அழகை குறித்து சிந்திக்க வைப்பதை விட, இயற்கை, சமூகம் உள்ளிட்ட விசயங்களை புகைப்படமெடுக்க கற்றுக் கொடுங்கள். அது அவர்களின் அகத்தை தூய்மையாக வளரச்செய்யும்.
வானிலைக்கு தயாராக இருங்கள்
குழந்தைகளை வைத்துக் கொண்டு மழையிலோ, குளிரிலோ மாட்டிக்கொண்டு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் உடல் நலக் குறைவு ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாருக்குமே இருக்கும். முக்கியமாக குழந்தைகளை நோய்கள் எளிதாக தாக்கும்.
இதனால் போகும் இடத்தின் வானிலை அறிந்து அதற்கு தகுந்தாற்போல உபகரணங்களை எடுத்துச் செல்லுங்கள்.
கையுறைகள், தலையுறைகள், குளிர் நீக்கி உடைகள் என திட்டமிட்டு தயாராகுங்கள்.
குழந்தை வளர்ப்பு செயலிகள்
குழந்தை வளர்ப்புக்கான செயலிகள் நிறைய இருக்கின்றன. விமானத்தில் பயணிப்பவர்களுக்கு அது நிச்சயம் உதவுவதாக இருக்கும்.
பொது அரசு போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துங்கள்
அரசு போக்குவரத்து வாகனங்களை முடிந்த வரை பயன்படுத்துங்கள். தனிமையில் காரில் செல்வதைக் காட்டிலும் இது சிறந்தது. பலரது அறிமுகத்தை குழந்தைக்கு தரவல்லது. மேலும் பயணத்தின்போது இடையில் வரும் ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் குழந்தைகளுக்கு சொல்லி வாருங்கள். அது அவர்களின் நினைவுத் திறனை மேம்படுத்தும்.
குழந்தை இருக்கும் இடத்தை அறிய உதவும் கருவி
சைல்டு லோகேட்டர் எனும் குழந்தை இருக்கும் இடத்தை அறிய உதவும் கருவி ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். குழந்தை வழியில் தவறி விடுவதை தவிருங்கள். கேட்பதற்கு ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போல இருந்தாலும், இது நல்ல முயற்சி.. குழந்தை எங்கே இருந்தாலும் கண்டுபிடித்து விடலாம்.
கிருமிக் கொல்லி
குழந்தைகளை எளிதில் கிருமிகளை தாக்கி நோய்களை உண்டாக்கும். செல்லும் இடங்களிலெல்லாம் சுத்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. எனவே தைலங்கள், சிறப்பு கைக்குட்டைகள் என நோய் எதிர்க்கும் பொருள்கள் சிலவற்றை கையில் எடுத்துச் செல்வது சிறந்தது.
மருந்துகளும் மாத்திரைகள்
மருந்து மாத்திரைகள் வயதானவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் நிச்சயம் நாம் பயணத்தின்போது மறந்துவிடக்கூடாது. அவர்களின் உடல்நிலைக்கு ஏற்ப பயன்படுத்தி வரும் மருந்துகளை கையில் எடுத்துச் செல்லவேண்டும். முக்கியமாக கைக்குழந்தைகளுக்கு..
குழந்தைகளை பேக்கிங் பண்ண விடாதீங்க
அவரவர் பொருள்களை அவரவர் எடுத்து வைக்கவேண்டும் என்று அறிவுறுத்திவிட்டு, குழந்தைகளை பேக்கிங் பண்ணி விட்டுவிடாதீர்கள். அவர்கள் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்துவிட வாய்ப்பிருக்கிறது இல்லையென்றால் தேவையானவற்றை மறந்துவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, நீங்கள் பேக்கிங் செய்யுங்கள் அல்லது செய்த பின் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
இனிப்புகளுக்கு பதில் பழங்கள்
வெறும் இனிப்புகள், சாக்லெட்களை மட்டுமே கொடுத்தால் பயணத்தின் போது குழந்தைகளுக்கு வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே அவர்களுக்கு பழங்கள், உலர் பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிட பழக்குங்கள்.
உற்சாக மூட்டுங்கள்
குழந்தைகள் வெகு தூர பயணத்தின் போது களைத்துவிடுவார்கள். அவர்களுக்கு தொடர்ந்து உற்சாகமூட்டிக்கொண்டே இருக்கவேண்டும். நீங்களும் சோர்வில் கம்மென்று இருந்தால், குழந்தைகளும் உம்மென்று இருக்கும். ஜம்மென்று போகவேண்டிய பயணம் சோர்வடைந்துவிடும்.
குழந்தைக்கு பராமரிப்பை கற்றுக் கொடுங்கள்
உங்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், இந்த சிக்கல் உங்களுக்கும் வந்திருக்ககூடும். உங்களை தொல்லை செய்து பாடாய் படுத்திக் கொண்டிருப்பார்கள். அப்படி இருக்கும் சமயத்தில், மூத்த குழந்தையிடம் பொறுப்பை ஒப்படைத்து நீங்கள் மேற்பார்வை இடுங்கள். தம்பி தங்கைகளை கவனிக்கும் பொறுப்பும் எளிதில் அவருக்கு கிட்டும். நாளடைவில் வளர்ந்து பெரியவராகிவிட்டாலும் அவருக்கு அது பயன்படும்.