ஹாசனில் இருக்கும் மூன்று அற்புத சுற்றுலாத் தளங்களை நாம் இந்த பகுதியில் காணவிருக்கிறோம். ஹாசன் மாவட்டம் கர்நாடக மாநிலத்தின் மிக அதிக வளங்கள் கொண்ட மாவட்டம் என்றாலும் தகும். ஏனென்றால் காவிரி வழிந்தோடு பகுதிகளில் முக்கால் வாசி இந்த மாவட்டத்திலேயே உள்ளது. இங்கு மிகவும் பசுமையான சுற்றுலாத் தளங்கள், மலைகள் ஆறுகள் என ஏகப்பட்ட சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமான யாகாச்சி அணை, நுக்கேஹள்ளி, ஒம்பத்துக்குட்டா ஆகிய இடங்களுக்கு இன்று நாம் செல்வோம். வாருங்கள்.
யாகாச்சி அணை
யாகாச்சி அணை பேலூரிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இது ஹாசனிலிருந்து 45 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 2004ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த அணை ஹாசன், சிக்மகளூர், பேலூர் போன்ற நகரங்களின் நீர்த்தேவையை தீர்ப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 965 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த அணை நீர்த்தேக்கம் காவிரி ஆற்றின் துணை ஆறாகிய யாகாச்சி ஆற்றின் குறுக்கில் கட்டப்பட்டுள்ளது.
இந்த அணையின் நீர் வெளியேற்ற அளவு 4300 ccm ஆகவும் நீர்வரத்து 4500 ccm ஆகவும் உள்ளது. நக்சல்கள் நடமாட்டம் கருதி இங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சமீபத்தில் இந்த அணை நீர்த்தேக்க பகுதியில் சுற்றுலாப்பயணிகளைக் கவர்வதற்காக ‘யாகாச்சி சாகச நீர் விளையாட்டு மையம்' ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது.
என்னென்ன செய்யலாம்
இந்த மையம் சிறு படகுச்சவாரி, சொகுசுப்படகு சவாரி, வேகப்படகு சவாரி, துடுப்புப்படகு சவாரி, ஜெட் நீர்ச்சறுக்கு விளையாட்டு மற்றும் பம்பர் சவாரி போன்ற பல வகையான உல்லாச பொழுது போக்கு அம்சங்களை பயணிகளுக்கு வழங்குகிறது. இவை தவிர இயற்கையான சூழலில் ரசித்து ஓய்வெடுக்க விரும்பும் ஏகாந்தமான அமைதியையும் எழிலையும் இந்த ஸ்தலம் பெற்றுள்ளது.
நுக்கேஹள்ளி
கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்துக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் கண்டிப்பாக இந்த நுக்கேஹள்ளி எனப்படும் புகழ் பெற்ற ஆன்மீகத்தலத்துக்கு விஜயம் செய்வது நல்லது. இந்த புண்ணிய நகரம் இங்குள்ள லக்ஷ்மி நரசிம்மர் கோயிலுக்கும் சதாசிவ கோயிலுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. இந்தக்கோயில்கள் சோப்புப்பாறை எனும் விசேஷமான வழவழப்பு கற்களால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹொய்சள ஆட்சி
கன்னடத்தில் நுப்பள்ளி மற்றும் நுக்குபள்ளி என்றும் அழைக்கப்படும் இந்த நுக்கேஹள்ளி நகரம் ஹாசன் நகரத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் திப்தூர் - சன்னராயபட்னா மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. நுக்கேஹள்ளியில் அமைந்துள்ள இந்த இரண்டு கோயில்களுமே ஹொய்சள ஆட்சியில் வீர சோமேஷ்வர மன்னரின் தளபதியான பொம்மன்ன தண்டநாயகாவால் கட்டுவிக்கப்பட்டுள்ளன.1246ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள லட்சுமி நரசிம்மர் கோயில் திரிகூட அமைப்பையும் (மூன்று கோபுரங்கள்), அழகிய சிற்பங்கள் நிறைந்த பூஜைக்கூடத்தையும் கொண்டுள்ளது.
கோவிலின் சிறப்புகள்
கோயில் கட்டுமானம் முடிந்தபிறகு ஒரு பெரிய மண்டபமும் இங்கு கட்டப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. மையத்திலிலுள்ள மூடப்பட்ட மண்டபம் மூன்று சன்னதிகளையும் 9 மேடைப்பாதைகளையும் கொண்டுள்ளது. இந்தக்கோயிலின் விசேஷ அம்சம் நின்ற நிலையின் காட்சியளிக்கும் அற்புதமான பார்வதி தேவி சிலை ஆகும்.சதாசிவ கோயில் ஏககூட கோயில் அமைப்புடன் நகர பாணி கோபுரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலின் கர்ப்பகிருகத்தில் ஒரு பெரிய சிவலிங்கம் காணப்படுகிறது. கலையம்சத்தோடு வடிக்கப்பட்டுள்ள ஒரு நந்தி சிலை கல் சாளரங்கள் சுவரில் பதிக்கப்பட்ட ஒரு சன்னதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் வளாகத்தில் இரண்டு கணேச சிலைகளையும் பக்தர்கள் காணலாம். ஒன்று தேவி சன்னதியின் வாசலிலும் மற்றொன்று லிங்க கருவறையிலும் அமைந்துள்ளன.
ஒம்பத்து குட்டா
ஹாசன் நகருக்கு வருகை தரும் பயணிகள் மலைஏற்றத்தில் விருப்பம் இருந்தால் இந்த ஒம்பத்து குட்டா (ஒன்பது மலை) என்ற மலைஸ்தலத்துக்கு விஜயம் செய்யலாம். இந்த சிகரத்தில் ஒன்பது உச்சிகள் போன்ற மேடுகள் அடுத்தடுத்து தென்படுவதால் இந்த பெயர் வந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 971 மீட்டர் உயரத்தில் இந்த சிகரம் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள உயரமான சிகரங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. மேலும் இந்த மலையானது ‘கப்பினலே வனப்பாதுகாப்பு சரகம்', ‘ஷிரடி ஷிரிஸ்லா வனப்பாதுகாப்பு சரகம்' மற்றும் ‘பாலூர் வனப்பாதுகாப்பு சரகம்' போன்ற வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முர்கல் குட்டா
இந்த மலைஸ்தலத்துக்கு வருகை தரும் பயணிகள் உள்ளூர் மக்களிடம் வழி கேட்கும் போது முர்கல் குட்டா என்ற உள்ளூர் பெயரை சொல்லி கேட்பது நல்லது. இது கப்பினல்லே வனப்பகுதிக்குள் உள்ள குண்டியா சோதனைச்சாவடியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது. ஒம்பத்து குட்டா அடிவாரம் வரை ஜீப் மூலமாக பயணிகள் செல்லலாம். அப்படி பயணிக்கும்போது காட்டு மிருகங்களான சிறுத்தை, குரைக்கும் மான், கரசி, புலி, காட்டு யானை, காட்டெருமை போன்றவற்றை பார்க்கவும் வாய்ப்புண்டு. இந்த ஜீப் பாதை கப்பிஹோலே ஆற்றின் ஓரமாகவே செல்கிறது. இங்கு டைவிங் எனப்படும் ‘சாகச கயிறு குதிப்பு' தளங்களும் உள்ளன.