காதல் என்றால் ஒரு ஆண் பெண்ணின் மீது வைப்பதும், ஒரு பெண் ஆணின் மீது வைப்பதும் மட்டுமே காதலாகி விடாது. காதலும், பாசமும், அன்பும் எல்லோரிடத்திலும் வைக்க வேண்டும். காதலன் அல்லது காதலிக்கு மட்டுமே தான் தாஜ்மஹால் கட்டுவார்களா? என்ன? எல்லாவற்றையும் விட மிகவும் உன்னதமானது தாயன்பு! தந்தை இறந்த பிறகு தனி ஆளாக தன் தாய் மிகவும் சிரமப்பட்டு தன்னையும், தன் 4 சகோதரிகளையும் வளர்த்து ஆளாக்கிய தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக தாய்க்காக தாஜ்மஹால் கட்டி இருக்கிறார் அவரது மகன்! இது எங்கே இருக்கிறது, அந்த தாஜ்மஹாலுக்கு எப்படி செல்வது என்று பார்ப்போமா?
பிள்ளைகளுக்காக வாழ்ந்த ஜெய்லானி பீவி
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை பூர்விகமாகக் கொண்ட அப்துல் காதர், ஜெய்லானி பீவி தம்பதியினருக்கு நான்கு மகள் ஒரு மகன். அப்துல் காதர் சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது மகன் அம்ருதீன் ஷேக் தாவூதிற்கு பதினொரு வயது இருக்கும் பொழுது அவரது தந்தை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஜெய்லானி பீவி அந்த கடையை நிர்வகித்து வந்ததுடன் தனது மகன், மகள்கள் ஆகியோரை நன்கு படிக்க வைத்து கரை சேர்த்துள்ளார்.

அம்மா பேச்சை தட்டாத பிள்ளை
அம்ருதீன் ஷேக் தாவுத் பி.ஏ முடித்துவிட்டு தற்போது சென்னையில் தொழிலதிபராக இருந்து வருகிறார். சிறுவயது முதல் தன்னை தனது அம்மா அரும்பாடு பட்டு வளர்த்து ஆளாக்கிய காரணத்தினால் அம்ருதீன் தனது அன்னையின் வழிகாட்டுதலின்படியும், அவரிடம் அனுமதி பெற்றே எந்த ஒரு காரியத்தையும் அவர் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது 72 வயதில் ஜெய்லானி பீவி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
தாய்க்காக தாஜ்மஹால் கட்ட முடிவெடுத்த மகன்
தாய் உயிரிழந்த நாள் முதல் அம்ருதீன் தாயின் நினைவலைகளால் தத்தளித்து வந்த நிலையில் இறந்த தனது தாய்க்கு நினைவு இல்லத்தை கட்ட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். அப்போது காதல் மனைவிக்காக ஆக்ராவில் தாஜ்மஹால் கட்டியது போன்று, தனது தாயாரின் மீதான பாசத்தால் ஒரு புதிய தாஜ்மஹாலை கட்ட முடிவெடுத்துள்ளார்.

அச்சு அசல் ஆக்ரா தாஜ்மஹால் போலவே இருக்கும் அம்மையப்பன் தாஜ்மஹால்
இந்நிலையில் ஆக்ராவில் உள்ள முகலாய மன்னர் காலத்தின் கட்டமைப்பை போன்று, ராஜஸ்தானில் இருந்து வெள்ளை பளிங்கு கற்களை கொண்டு முழுவதுமாக கட்டமைத்து நினைவிடம் அமைக்கு முடிவு செய்து ஆக்ரா தாஜ்மஹால் போலவே தனது சொந்த ஊரான திருவாரூரில் உள்ள அம்மையப்பனிலும் தாஜ்மஹால் எழுப்பியுள்ளார். அதன் அடிப்படையில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 8 ஆயிரம் சதுர அடியில் அகலம், 46 அடி உயரத்தில் மினார் அமைக்கபட்டது. அழாகாக அமைக்கப்பட்ட இந்த தென்னகத்தின் தாஜ்மஹால் 2023 ஆம் ஆண்டில் எளிமையாக திறக்கப்பட்டது.
தாய் அன்பிற்கு ஈடு, இணை உண்டா?
டெல்லிக்கு சென்று உலக அதிசயங்கள் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க அனைவராலும் முடியாத நிலையில், எல்லோராலும் பார்க்கும் வகையில் தென் தமிழகத்தில் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட முதல் தாஜ்மஹால் இதுவாகும். இங்கு அனைத்து சமுதாய மக்களும் சாதி மத பேதமின்றி பார்த்து செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அருகே உள்ள கிராம மக்கள் இந்த தாஜ்மஹாலை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். தனது தாய் மீதான அன்பால் தாஜ்மஹால் கட்டிய மகனை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
இந்த தாஜ்மஹாலுக்கு நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்
இந்த தாஜ்மஹால் வடிவ நினைவு இல்லத்தை நூற்றுக் கணக்கான பொதுமக்கள் வந்து தினந்தோறும் பார்த்து செல்கின்றனர். தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயத்தில் ஒன்றாக இடம்பிடித்தாலும் தனது தாய்க்காக மகன் கட்டிய தாஜ்மஹால் உலகின் எட்டாவது அதிசயம் என்று சொன்னால் அது மிகையாகாது. திருவாரூர் மையத்தில் இருந்து அம்மையப்பன் வெறும் 7 கிமீ தொலைவில் உள்ளது. நீங்கள் ஆட்டோ வழியாக இந்த அழகிய இடத்தை அடையலாம்!



Click it and Unblock the Notifications




