அரியலூர் என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? பொட்டல் காடுகளும், உலர்ந்த மரங்களும், காய்ந்த சமவெளிகளும் மட்டும் தான், என்று நினைக்குறீர்களா? அதுதான் இல்லை! அரியலூர் சிந்து சமவெளிக்கு முந்தைய நாகரிகத்தை கொண்ட ஒரு தொன்மையான நாகரிகத்தை தழுவிய நகரமாகும். சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு செழித்தோங்கிய வரலாறு, பாரம்பரியம் மற்றும் நாகரிகத்தைக் கொண்ட அரியலூரின் சிறப்பம்சங்களைப் பற்றி இங்கே காண்போம்!
கடலுக்கு அடியில் புதைந்திருந்த அரியலூர்
அரியலூரின் பெரும்பாலான பகுதிகள் கடலுக்கு அடியில் மூழ்கி இருந்ததற்கு சான்றுகள் இருக்கின்றன. தட்பவெப்ப நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களால், கடல் நீர் பின்வாங்கும் போது, தற்போதைய நிலமான க்னீஸ் குடும்பத்தைச் சேர்ந்த உருமாற்ற பாறைகள் வெளிப்பட்டது. இது பல்வேறு புவியியல் காலங்களைச் சார்ந்த வண்டல் மற்றும் ஜிப்சம் பாறைகளால் ஆனது ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். புவியியலாளர்களால் இவை யாவும் கிரெட்டேசியஸ் யுகத்தை சார்ந்தது எனவும் இந்த மாற்றங்கள் சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தன என்றும் கூறுகின்றனர்.
புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா
கடலுக்கு அடியில் வாழ்ந்த பல்வேறு உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் படிமங்களாக மாறின. அதுமட்டுமில்லாமல் பல்வேறு வகையான மரம், விலங்கு மற்றும் தாவர இனங்களின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் நின்னியூரில் டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இதனால் மாவட்டம் பழங்கால உயிரினங்களின் புதைபடிவங்களின் பொக்கிஷமாக உள்ளது. அதனாலேயே புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா என்றழைக்கப்படுகிறது.
சங்க காலத்தில் அரியலூர்
வில்வித்தையில் சிறந்து விளங்கிய ஓரியின் ஆட்சியின் கீழ் இருந்த மழவர் தலைவரின் ஆட்சியில் அரியலூர் செழித்து இருந்தது. மேலும் இது மழவர் தலைவரின் இராணுவ முகாமாகவும் செயல்பட்டது. கரிகாலச்சோழனின் சமகாலத்தவரான பிடவூரைச் சேர்ந்த இருங்கோவேலால் ஆண்ட இருங்கோளப்பாடியின் தலைமயககாவும் இது இருந்தது.
பல்லவர் காலத்தில் அரியலூர்
அரியலூர் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் மகேந்திரவர்ம பல்லவரின் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. அரியலூரில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் உள்ள சிற்பங்கள் பல்லவர் காலத்து கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக நிற்கிறது. மகேந்திரவர்மா, நரசிம்மவர்மா காலத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் கீழப்பழுவூர், திருமழபாடி, கோவிந்தபுத்தூர் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களுக்குச் சென்று கோயில்களில் உள்ள தெய்வங்களைத் தங்கள் தேவாரப் பாடல்களில் துதித்துள்ளனர்.
சோழ காலத்தில் அரியலூர்
இன்றைய அரியலூர் மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதிகள் அனைத்தும் ஏகாதிபத்திய சோழர்களின் ஆட்சியின் ஆரம்பம் முதல் இறுதி வரை இருந்தது. அரியலூரில் சங்கச் சோழர்களின் செப்புக் காசுகள் கிடைத்துள்ளன. முதலாம் ஆதித்யன் முதல் மூன்றாம் ராஜேந்திரன் வரையிலான சோழ மன்னர்களின் 450 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இந்த மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியை ஆண்ட பழுவேட்டரையர் தலைவர்களின் தலைநகராக மேலப்பழுவூர் இருந்ததாம்.
பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் அரியலூர்
மேற்கூறிய ஆட்சியாளர்கள் மட்டுமின்றி, ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் என பாண்டியர்கள் கீழும், வீரநரசிம்மர், வீரசோமேஸ்வரர் மற்றும் ராமநாதர் என ஹொய்சாள மன்னர்களாலும் அரியலூர் ஆளப்பட்டது. விஜயநகர பேரரசு, உடையார்பாளையத்தின் பாளையக்காரர்கள், பிஜாப்பூர் சுல்தான்கள், மராத்தாக்கள், கர்நாடக நவாப்கள் மற்றும் கடைசியாக ஆங்கிலேய ஆட்சியின் கீழும் அரியலூர் ஆளப்பட்டது.
சுதந்திர போராட்டத்தில் அரியலூர்
சுதந்திரப் போராட்டத்திலும் அரியலூர் மாவட்டம் முக்கியப் பங்காற்றியுள்ளது. அரியலூர் சபாபதி பிள்ளை, நடேச அய்யர், கணபதி ரெட்டியார், நடராஜன் பிள்ளை, எரவங்குடி பத்மநாதன், அரியலூர் மனோகிராவ், குப்புசாமி, அபரஞ்சி, அப்பாசாமி, வீரபத்ரன், ரங்கராஜன், விக்கிரமங்கலம், அழகேசம் பிள்ளை, மணக்கல் ஆகியோர் அரியலூர் சார்பில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலம் கடந்து நிற்கும் அரியலூரில் நீங்கள் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள்
ü முதலாம் இராஜராஜசோழன் ஆட்சியில் கட்டப்பட்ட கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள மிகப்பெரிய கங்கைகொண்டசோழீச்சரர் கோவில் நீங்கள் முதலில் பார்க்க வேண்டிய அம்சமாகும்.
ü பழுவேட்டரையர்கள் ஆண்ட மேலப்பழுவூர் மற்றும் கீழையூரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மற்றும் இரட்டை கோயில்.
ü திருமழப்பாடியில் உள்ள வைத்தியநாத சுவாமி திருக்கோயில், இது தேவார நாயன்மார்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர்களால் வழிபாடு செய்யப்பட்டு, பாடல் பெற்ற தலமாகும்.
ü ரதி தேவி தவமிருந்து தன் கணவனை மீட்ட இடமான காமரதிவல்லியில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கார்கோடேஸ்வரர் கோயில்.
ü கொள்ளிடம் ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள கோவிந்தப்புத்தூர்.
ü முதலாம் இராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட விக்கிரமங்கலம்.
ü மேலும், கோதண்டராம சுவாமி கோயில், வேட்டக்குடி கரையவெட்டி பறவைகள் சரணாலயம், ஏலாக்குறிச்சி ஆகியவையும் நீங்கள் இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.