நம் அனைவர்க்கும் கேரளா சபரிமலை ஐயப்பன் கோயில் பற்றி நன்கு தெரியும். ஆனால் சென்னைக்கு உள்ளேயே, அமைந்திருக்கும் ஒரு விசித்திர ஐயப்பன் கோயில் பற்றி தெரியுமா? இந்த கோயில் பார்ப்பதற்க்கு அப்படியே அச்சு அசல், கேரளாவின் பிரபல சபரிமலை ஐயப்பன் கோயில் போலவே இருக்கிறது. இங்கும் பக்தர்கள் மாலையணிந்து இருமுடி சுமந்து வந்த சுவாமி தரிசனம் செய்கின்றனர், இங்கும் 18 படிகள் உள்ளன, அதன் மீது இருமுடி சுமப்பவர்கள் மட்டுமே நடந்து செல்ல முடியும். மற்றவர்கள் வேறு வழியாக தான் செல்ல வேண்டும். சபரிமலைக்கு செல்ல முடியாதவர்கள் கட்டாயம் இந்த கோயிலுக்கு ஒருமுறை சென்று வரலாம்!
சென்னையில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில்
கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள புண்ணியஸ்தலமான சபரிமலையில் ஹரிஹரசுதனான சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கார்த்திகை மாதம் பிறந்தாலே, சுவாமி ஐயப்பனின் அதிர்வுகள் நம்மை ஆட்கொள்ளும். எங்கு பார்த்தாலும் மாலையணிந்த பக்தர்கள் இருமுடிக் கட்டிக்கொண்டு சபரிமலைக்கு செல்வார்கள். ஆனால் சபரிமலைக்கு எல்லோராலும் செல்ல முடிவது இல்லை, சில காரணங்களால் பிரயாணம் தள்ளிக்கொண்டே செல்லும். ஆனால், அப்படி செல்ல முடியாதவர்கள் சென்னையில் உள்ள இந்த கோயிலுக்கு மாலையணிந்து இருமுடியுடன் சுவாமி ஐயப்பனை வழிப்பட்டு செல்கின்றனர்.

சபரிமலையை பிரதிபலிக்கும் வட சபரி
கேரளாவில் உள்ள சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலின் சரியான பிரதியாக இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. சபரிமலை மலையைப் போன்ற ஒரு மலையின் மீது இருப்பது போன்ற உணர்வை அளிக்கும் வகையில் இந்த கோயில் மூன்று தளங்களில் கட்டப்பட்டது. முக்கிய சன்னதி மற்றும் கருவறைக்கு 18 படிகள் கொண்ட கட்டிடக்கலை கேரள பாணி மற்றும் பாரம்பரியத்தை பின்பற்றுகிறது. இக்கோயில் வட சபரி அல்லது வடக்கு சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள வழிபாட்டு முறைகள் யாவும் அப்படியே சபரிமலை கோயிலைப் போலவே உள்ளது, இதன் மூலம் பக்தர்கள் அனைத்து விரதங்களையும் கடைப்பிடித்து, இருமுடியை எடுத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
விதிமுறைகள், சடங்குகள் அனைத்து சபரிமலை பாணியில்
கோயிலில் உள்ள பூஜைகள் சபரிமலையில் விதிகளின்படி செய்யப்படுகின்றன, வித்தியாசம் என்னவென்றால், சபரிமலை கோயில் ஒரு வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே திறக்கப்படும், அதே நேரத்தில் ராஜா அண்ணாமலைபுரம் கோயில் ஆண்டு முழுவதும் பக்தர்களுக்கு திறந்திருக்கும். இக்கோயிலில் திருவிழாக்கள் கார்த்திகை முதல் நாளில் துவங்கி, மண்டல பூஜைகள் மற்றும் பிரம்மோத்ஸவம் ஆகும். இவை யாவும் இங்கு வெகு விமர்சியாக கொண்டாடப்படுகின்றன.

சபரிமலைக்கு செல்ல முடியாதோர் இங்கு செல்லவும்
பல்வேறு காரணங்களால் சபரி மலைக்கு எல்லோராலும் செல்ல முடிவது இல்லை. ஆனால் சபரி மலைக்கு செல்ல முடியாதவர்கள் சென்னையில் உள்ள இந்த கோயிலுக்கு வந்து விட்டு சுவாமி வழிபாடு செய்து விட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் சபரி மலையில் இருப்பது போன்றே பதினெட்டு படிகள், ஒரு சதுரமான மாடியின் மையத்தில் நீண்ட சதுர வடிவில் கருவறை, மாளிகைபுரத்தம்மன் சன்னதி, கன்னி மூலக் கணபதி, மஞ்சள் மாதா சன்னதி, நாகாராஜன் சன்னதி என அனைத்து அம்சங்களும் உண்டு. நீங்கள் இந்த கோவிலுக்கு வந்தாலே உங்களுக்கே தெரியும், நீங்கள் ஒரு நிமிடம் நிச்சயம் யோசிப்பீர்கள், "நாம் உண்மையிலேயே சென்னையில் தான் இருக்கிறோமா அல்லது சபரிமலையில் இருக்கிறோமா என்று". இந்த கோவில் அப்படியே சபரிமலை ஐயப்ப கோவிலின் நகல் போன்றே இருக்கிறது.
ராஜா அண்ணாமலைபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயில்
ராஜா முத்தையா செட்டியாரின் மகனான ராமசாமி செட்டியார் 1973 ஆம் ஆண்டு முதன் முதலில் சபரிமலைக்கு சென்று வருகிறார். அந்த தெய்வீக அனுபவத்தை உணர்ந்த அவர் இதே போல எல்லோரும் உணர வேண்டும் என்பதற்காக இந்தக் கோவிலை கட்டினார். சபரிமலைக்கு வர முடியாத அனைத்து தரப்பினரும் இங்கு வந்து அய்யனை வழிபட வேண்டும் என்பதற்காக இந்த கோயிலைக் கட்டியுள்ளார். 1982 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இக்கோயிலில் ஐயப்பனின் பஞ்ச லோக சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாகர்கோயிலைச் சேர்ந்த ஒரு ஸ்தபதியே இந்த சிலையை செய்துள்ளார். ராஜா அண்ணாமலைபுரம் ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் டிரஸ்ட் இப்போது இந்த கோவிலை நிர்வகித்து வருகிறது.

பெண்களும் இந்த கோயிலுக்கு செல்லலாம்
கடற்கரை கோவில் ஓரத்தில் அழகாக அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்கு அனைத்து தரப்பினரும் வருகை தரலாம். சபரி மலைக்கு செல்ல முடியாத பெரியவர்கள், இளம் பெண்கள் என அனைவரும் வரலாம். சபரி மலை ஐயப்பன் கோவில் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இந்த கோவில். சபரி மலை ஐயப்பனுக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் இங்கும் செய்யப்படுகிறது. நீங்கள் எவ்வளவு செல்வாக்கு இருப்பவராக இருந்தாலும் கூட சபரிமலை ஐயப்பன் கோவிலின் பதினெட்டு படிகளை இருமுடி இல்லாமல் மிதிக்க முடியாது. அது போல தான் இங்கும் இருமுடி இல்லாமல் நீங்கள் பதினெட்டு படிகள் மீது கால்வைக்க முடியாது. இருமுடி அல்லாதவர்கள், பெண்கள் வந்து செல்ல வேறொரு வழி உள்ளது.
சபரிமலைக்கு செல்ல முடியவில்லையா? வருத்தம் வேண்டாம் அய்யன் அழைக்கும் போது செல்லலாம். இப்போது இங்கே சென்று வாருங்கள்! அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்.



Click it and Unblock the Notifications




