தொலைக்காட்சிகளில், மொபைல் போன்களில் மற்றும் செய்திதாள்களில் என தினமும் புது விதமான மற்றும் வித்தியாசமான விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்த தவறுவது இல்லை. அது போல தான் கேரளாவின் வயநாட்டில் அமைந்துள்ள இந்த அதியசக் கிணறும் நம்மை வியக்க வைத்துள்ளது. இந்த கிணற்றில் இருந்து நீங்கள் எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும், அது இருக்கும் அளவிலிருந்து ஒரு சொட்டுக் கூட குறையவில்லையாம். மேலும் யாரும் செருப்பு அணிந்துக் கொண்டோ அல்லது அசுத்தமாகவோ இந்த கிணற்றின் பக்கம் செல்லக் கூடாதாம். என்ன காரணம் என்று தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்!

வயநாட்டில் இருக்கும் அதிசயக் கிணறு
கேரள மாநிலம் வயநாட்டில் பாக்கம் எனும் கிராமத்தில் தான் இந்த அதிசய கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றை மக்கள் பாக்கம் திருமுகம் கேணி என்றும் அதிசயக் கிணறு என்றும் அழைக்கின்றனர். இந்த பகுதியில் வறட்சி ஏற்பட்ட சமயத்தில் கூட இந்த கிணறு கொஞ்சம் கூட வற்றாமல் இருந்து அப்பகுதி மக்களை காப்பாற்றியதாக தகவல்கள் கூறுகின்றது. எவ்வளவு மழை பொழிந்தாலும் எவ்வளவு வெயில் சுட்டெரித்தாலும் கூட இந்த கிணற்றில் உள்ள நீரின் அளவு சமமாகவே இருந்து வருகிறதாம். அதே போல இந்த கிணற்றில் இருந்து எடுக்கப்படும் நீர் மிகவும் தூய்மையாக, சுவையாகவும் இருக்கிறது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

குறும்பர் இன மக்களால் பாதுகாக்கப்படும் கிணறு
இந்த கிணறு சுமார் 3௦௦ ஆண்டுகளாக வற்றாமல் இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆனால் இது எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது சரியாக தெரியவில்லை என்றும், இதன் வயது 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனவும் அவர்களே கூறுகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை நீர் வற்றவே கூடாது என்பதற்காக சில சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் அப்பகுதி மக்கள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த கிணற்றை மிகவும் பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் குறும்பர் இன மக்கள் கவனமாக காத்து வருகின்றனர்.

தெய்வீக சக்தி கொண்ட கிணறு
காலம் காலமாக இந்த கிணற்றை அப்பகுதி மக்கள் சக்தி வாய்ந்ததாக நம்பி வழிபட்டு வருகின்றனர். இதன் மேல அவர்கள் கொண்ட தெய்வீகத் தன்மை காரணமாக காலணிகளுடன் இங்கு வருவது, குளிக்காமல் இங்கு வருவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. எத்தனை முறை தண்ணீர் எடுத்துக் கொண்டே இருந்தாலும் அந்த கிணற்றில் நீர் வற்றாமல் அதே நிலையில் இருக்கும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அவர்களைப் பொறுத்த வரைக்கும் இது ஒரு அட்சய பாத்திரம் போல நூற்றாண்டு காலமாக அவர்களின் தண்ணீர் தேவையை தீர்த்து வருகிறது.

கலாச்சாரத்தில் ஒன்றி போன நம்பிக்கை
காலப்ப்க்கில் எதனை பழக்க வழக்கங்கள் வந்தாலும், அதற்கு ஏற்றார்போல் மக்கள் மாறினாலும் கூட இந்த கிணறுக்கு மக்கள் கொடுக்கும் நம்பிக்கை அப்படியே இருந்து வருகிறது. இந்த ஊருக்கு புதிதாக திருமணம் செய்து வரும் பெண்களும் கூட முதல் நாளன்றே இந்த கிணற்றில் தண்ணீர் எடுத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. புதிதாக வருபவர்களும் கூட இந்த தெய்வீக கிணற்றின் மகத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும் தானே! நீங்கள் வயநாட்டிற்கு சுற்றுலா செல்லும் போது மறக்காமல் இந்த கிணற்றை கண்டு வாருங்கள்.



Click it and Unblock the Notifications





